பஞ்ச தந்திரக் கதைகள்/தெய்வ அருளால் நலம் கண்ட தீயோர்

விக்கிமூலம் இலிருந்து

12. தெய்வ அருளால் நலம் கண்ட தீயோர்

ஓர் அரசனுக்கு மூன்று முலைகளோடு ஒரு பெண் பிறந்தாள். இது புதுமையாக இருக்கவே அவன் சோதிடனை அழைத்து,' இதற்கு என்ன செய்வது?' என்று கேட்டான். அதற்கு அந்தச் சோதிடன் 'இது நன்றாக ஆராய்ந்த பிறகே சொல்ல வேண்டும்' என்று சொல்லிவிட்டான். அதன்படி அவன் அந்தப் பெண்ணின் சாதகத்தை ஆராய்ந்து, 'அரசே, தங்கள் மகள் தங்கள் எதிரில் வரக்கூடாது. ஆகையால் அவளைத் தனியாக வைத்திருங்கள்’ என்று சொன்னான். அவளும் தனியாக மாளிகையில் வளர்ந்து வந்தாள். அரசன் பார்க்காமலே பருவவயதை அடைந்தாள்.

அவள் பருவமடைந்ததைக் கேள்விப்பட்ட அரசன் அவளை யாருக்காவது திருமணம் செய்து கொடுக்க எண்ணினான். அவளைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அளவில்லாத செல்வம் கொடுப்பதாக அவன் அறிவித்தான். இதைக் கேள்விப் பட்ட ஒரு குருடன், கூனன் ஒருவன்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு அரசனைப் பார்க்க வந்தான். இளவரசியைத் தனக்குத் திருமணம் செய்து தரும்படி கேட்டான். அரசனும் சரியென்று ஒப்புக்கொண்டான். அவளைத் திருமணம் செய்து கொண்டு வேறு எந்த ஊரிலாவது போயிரு. இந்த

ஊரில் மட்டும் இருக்காதே என்று அரசன் சொன்னான். அப்படியே குருடன் இளவரசியைக் கூட்டிக் கொண்டு போனான்.

இளவரசியும், குருடனும், கூனனும் மற்றொரு நாட்டிற்குப் போய்ச் சேர்ந்தார்கள். இளவரசிக்குக் குருடன் மேல் அன்பில்லை; கூனன் மேல்தான் ஆசையாய் இருந்தது. ஆகவே குருடனைக் கொல்வதற்காகச் செத்தபாம்பு ஒன்றை அடுப்பிலிட்டுக் கறியாக்கினாள். குருடனைக் கூப்பிட்டு அதற்கு தெருப் பூட்டும்படி கூறினாள். குருடனும் அடுப்பின் அருகில் இருந்து விறகைத் தள்ளித் தீ எரித்துக் கொண்டிருந்தான். அப்போது வெந்து கொண்டிருந்த பாம்பின் ஆவி அவன் கண்களைத் தாக்கியது. அதனால் ஒளி இழந்த அவன் கண்கள் தெளிவாகத் தெரிந்தன. தூரத்தில் கூனனுடன் கூடி இளவரசி குலாவுவதை அவன் தன் இரு கண்களாலும் பார்த்தான். அதனால் ஆத்திரம் கொண்டு அந்தக் கூனனைப் போய்ப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து அப்படியே கைகளால் சுழற்றி இளவரசியின் மேல் எறிந்தான். அதனால் இளவரசியின் நடு முலை மறைந்தது. கூனனுடைய கூனும் நிமிர்ந்துவிட்டது.

தீதை நினைக்கப் போய் எல்லாம் நன்மையாய் முடிந்தது. தெய்வத்தின் அருள் இருந்தால் எல்லாம் நன்மையாக முடியும்.