கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்/தாகூர் எழுதிய கடிதங்கள்

விக்கிமூலம் இலிருந்து



9. தாகூர் எழுதிய கடிதங்கள்

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், கவிஞர் தாகூரின் நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. நூல்கள் பரபரப்பாக விற்பனையாவதை அறிந்து இங்கிலாந்து பதிப்பகம் ஒன்று அவரது மற்ற நூல்களையும் அச்சிட்டன. தாகூர் பாடல்கள் மட்டுமல்ல, அவரது சிறுகதைகள். நாவல்கள், கட்டுரைகள். நாடகங்கள், சொற்பொழிவுகள் எல்லாம் நூல்களாக்கப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருந்தன. இந்த நூல்களை மற்ற ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தாகூரின் உரிமையுடன் வெளியிட்டு, விற்பனையைப் பெருக்கின.

இந்தியாவிலே இருக்கின்ற விசுவபாரதி, உலகக்கலைக்கழக நிகழ்ச்சிகளை, உலகம் முழுவதும் அறிந்திட, கவிஞர் “விசுவபாரதி” என்ற மாதப் பத்திரிகையை வெளியிட்டார். அதற்கு தாகூரே ஆசிரியர். அந்தப் பத்திரிகையில் கவிஞர் மாதந்தோறும் தவறாமல் எழுதிவருவார்.

தாகூரின் சிறுகதைகள், சுவை மிகுந்த இலக்கியங்கள்! அவருடைய பாடல்களில் நவரசங்களும் இருக்கும். ஒவ்வொரு கதையும், நாவலும், நாடகங்களும் ஒவ்வொரு சுவையை விளக்குபவையாகவும், நகைச்சுவையாகவும், வேடிக்கை, கேலி, கிண்டல், கண்டிப்பு, சோகம் ததும்பும் வகையிலும் இருக்கும்.

தாம் எழுதுகின்ற புதிய புதிய படைப்புக்களை கவிஞர் எழுதி முடித்தவுடன், அதைத் தனது நண்பர்களிடமோ, மாணவர் களிடமோ படித்துக் காட்டிக் கருத்தறிந்த பிறகே மனநிம்மதி பெறுவார். சில நேரங்களில் அவரே உரக்கப் பாடி மகிழ்வார்.

தாகூர் கதைகள், நாவல்கள் பெரும் பகுதி வங்கத்து கிராம மக்களது வாழ்க்கைச் சம்பவங்களாகவே இருந்தன. இந்திய மக்களின் பண்பாடுகள், நாகரிகங்கள் அவரது கதைகளிலே ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். எப்படி கவிஞரது பாடல்கள் அவரது புலமையை உலகுக்குப் புலப்படுத்துகின்றனவோ, அதனைப் போலவே கதைகளும், நாவல்களும் கற்பனைச் சிறகடித்து புகழ் வானத்திலே வட்டமிட்டபடியே இருந்தன.

நோபல் பரிசு பெற்ற பிறகு, அவரது இலக்கியப் பணிகள் அவருக்கு ஓய்வு கொடுக்காமலே நெருக்கிக் கொண்டே இருந்தன. அவ்வளவு கடமைகளுக்குப் பிறகும், அவர் அழகான பாடல்களைப் புனைந்து பாடிக்கொண்டே வாழ்ந்தார்.

கவிஞர் எழுதும் பாட்டுக்கள் அத்தகைய அனுபவம் வாய்ந்தது என்பதை 1892-ஆம் ஆண்டில் அவர் எழுதிய கடிதம் ஒன்று விளக்குவதைப் பாருங்கள். இதோ...

“கோயில் மணி ஒன்றும் இங்கு அடிப்பதில்லை. மக்கள் வாழும் பகுதி அருகே இல்லாமையால், மாலை நேரமானதும் பறவைகள் பாடலை நிறுத்தியவுடன் முழு அமைதி நிலவுகிறது.

முன்னிரவுக்கும், நள்ளிரவுக்கும் இங்கே பெரிய வேறுபாடு இல்லை. கல்கத்தா நகரத்தில் உறக்கம் இல்லாத போது, இரவு என்பது இருள் என்ற பெரிய ஆறு மெல்ல ஓடுவது போல் தோன்றும்; அதன் ஓட்டத்தில் எழும் பலவகை ஒலிகளையும், ஒருவர். படுக்கையில் மல்லாந்து படுத்த படியாகவே கேட்டுக் கொண்டிருக்கலாம்.

ஆனால், இங்கே இரவு என்பது, அமைதியாக அடங்கி இருக்கின்ற, அசைவின் அறிகுறியே இல்லாத பெரிய ஏரிபோல் இருக்கின்றது. நேற்று இரவு நான் படுக்கையில் இப்பக்கமும் அப்பக்கமும் திரும்பித் திரும்பிப் பொழுது போக்கினேன். ஏதோ ஒரு பகுதியாகத் தேங்கி நிற்பது போன்ற நிலையில் கிடந்தேன்.

இன்று காலையில் வழக்கமாக எழும் நேரத்தில் எழாமல், சிறிது நேரம் கழித்தே படுக்கையிலிருந்து எழுந்தேன். கீழடுக்கில் என் அறைக்கு வந்து தலையணையின் மேல் சாய்ந்து கொண்டு, ஒரு காலை மற்றொரு முழங்காலை மேலிட்டபடி கிடந்தேன்.

ஒரு கரும்பலகையை எடுத்து மார்பின்மேல் வைத்துக் கொண்டு, காலைத் தென்றலும் பறவைகளின் இசையும், தொடர, பாட்டு ஒன்று எழுதத் தொடங்கினேன். என்முயற்சி வெற்றியாகவே நடைபெற்றுக் கொண்டிருந்தது.

என் இதழ்களில் புன்முறுவல் நிற்க கண்கள் பாதி மூடியபடி இருக்க, பாட்டின் ஒலி நயத்திற்கு ஏற்ப என் தலை அசைய, என் முணுமுணுப்பு பாட்டுருவாக அமைந்து கொண்டிருந்தது. ஆனால், தபால் வந்து குறுக்கிட்டது.

ஒரு கடிதம், சாதனா பத்திரிகையின் கடைசி இதழ், இன்னும் சில அச்சுத் தாள்கள் ஆகியவை வந்தன. கடிதத்தைப் படித்தேன். சாதானாவின் கிழிக்கப் படாத பக்கங்களுக்குள் பார்த்தேன். மறுபடியும் தலை அசைத்துக் கொண்டும், முணுமுணுத்துக் கொண்டும், பாட்டு எழுதத் தொடங்கினேன். அதை முடிக்கும் வரைக்கும் நான் வேறு எதுவும் செய்யவில்லை.

பக்கம் பக்கமாக உரை நடை எழுதிய போதிலும், அது ஒரு பாட்டு எழுதுவதற்கு இணையான மகிழ்ச்சியைத் தருவதில்லை. என்ன காரணமோ? ஆச்சரியமாக இருக்கிறது. எழுதுகின்ற பாட்டில் ஒருவரது உணர்ச்சிகள் அப்படிப்பட்ட மேன்மையான உருவம் பெறுகின்றன.

கைவிரல்களால் தொட்டு எடுக்கக் கூடியவை போல் அவைகள் அமைகின்றன. ஆனால், உரை நடை என்பது ஒட்டாத பொருள்களை ஒரு கோணிப்பை நிறைய அடைத்திருப்பது போல் கனவாகவும், கையாள முடியாததாகவும், விருப்பம் போல் அசைக்க முடியாததாகவும் இருக்கின்றது.

தினந்தோறும் ஒரு பாட்டு எழுத முடியுமானால், என் வாழ்வு ஒருவகை இன்பமாகவே இருக்கும். ஆனால், பல ஆண்டுகளாக நான் தொடர்ந்து பாட்டோடு பழகியும், எனக்கு அது நன்கு பழக்கப் பட்டதாக ஆகவில்லை. கடிவாளம் இட்டு என் விருப்பம் போல் ஏறிப் போகக் கூடிய பறக்கும் குதிரையாக அது அமையவில்லை.

கற்பனைக்கு ஏற்றவாறு தொலைவில் பறந்து செல்லும் உரிமையில்தான் கலையின் இன்பம் அமைந்திருக்கிறது. அதற்குப் பிறகு, இந்த உலகச் சிறைக்குள் திரும்பிப் புகுந்த பிறகும் அந்த இன்பம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. மனத்திலும் ஊறிக்கொண்டிருக்கிறது.

சிறு சிறு பாட்டுகள், தாமாகவே நான் முயற்சி செய்யாமலே, என்னிடம் வந்து அமைகின்றன; நாடகம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது அவை தடையாக வந்து சேர்கின்றன. இந்தப் பாட்டுக்கள் குறுக்கே வராமலிருந்தால், என் மனத்தில் வந்து தூண்டும் இரண்டு மூன்று நாடகத்திற்குரிய கருத்துக்களுக்கு வரவேற்பு கொடுத்திருப்பேன்.

ஆனால், குளிர்காலம் வரும் வரையில் காத்திருக்க வேண்டுமோ என அஞ்சுகிறேன். ‘சித்ரா’ தவிர, எல்லா நாடகங்களையும் குளிர் காலத்தில் தான் எழுதி முடித்திருக்கிறேன். அக்காலத்தில் பாட்டுக்குரிய உணர்ச்சி குளிர்ந்து விடும் போல் தெரிகிறது. அதனால்தான் அப்போது நாடகம் எழுத ஓய்வு கிடைக்கிறது போலும்"

(1892, மே, 16-ஆம் நாள் போல்பூரிலிருந்து எழுதிய கடிதம்)

நாடகத் தொண்டு

நாடகக் கலைக்கு கவிஞர் தாகூர் ஆற்றிய தொண்டு எவராலும் மறக்க முடியாதது. கவிஞர் சிறுவராக இருந்தபோது தேவேந்திர நாத் குடும்பம் ஒரு கலைக் குடும்பமாகவே காட்சியளிக்கும் ரவீந்திரர் அண்ணன்கள், அண்ணிகள், தாய், தந்தை அனைவருமே தங்களது வீட்டில் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர் மட்டும் பார்க்க அனுமதி கிடைக்காது. நாடகம் பார்த்தால் கெட்டுப்போவாய், போ-போ, என்று இளம் வயது ரவீந்திரரை அவர்கள் விரட்டிவிடுவார்கள். அப்போது கூட எங்காவது ஓரிடத்தில் மறைந்து கொண்டு ரவீந்திரர் நாடகம் பார்ப்பார்.

ஓரளவு ரவீந்திரர் வளர்ந்த பிறகு, தனது அண்ணன்களோடு சேர்ந்து அவரும் குடும்பம் நடத்தும் நாடகத்தில் நடிப்பார். பிறகு, அவரே பல புதிய நாடகங்களை எழுதும் நாடக ஆசிரியரானார்! அப்போதும் அவர் நாடக மேடையை மறக்கவில்லை. மேடை ஏறி நடிக்கும் கலை தாகூருக்கு மிக விருப்பமான கலையாக இருந்தது. பத்தொன்பதாம் வயதில் “வால் மீகி பிர தீபம்” என்று எழுத முனைந்த அவர், தனது இறுதி ஆண்டுவரை அக்கலைக்காகவே உழைத்தார். அவர் நடித்த முதல் கதாபாத்திரம் எது தெரியுமா? வால்மிகி மகரிஷி! இது கவிஞர் வீட்டிலேயே நடத்தப்பட்ட நாடகம். வயதான காலத்திலும் தாகூர் நடிகராகவே இருந்தார். முடிந்தபோதெல்லாம், அவர் சாந்திநிகேதன் நடத்தும் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

காந்தியடிகள் மூலம் 60 ஆயிரம்
நிதி பெற்ற கதை

கவிஞர் தாகூர் 1936-ஆம் ஆண்டு புது தில்லிக்குச் சென்றார். காந்தியடிகளைக் கண்டார். இருவரும் கலந்துரையாடி மகிழ்ந்தார்கள். அப்போது கவிஞர் வயது எழுபத்தைந்து. இந்த தள்ளாத வயோதிகத்தில் இந்திய நாட்டுப் பெருங்கவிஞர்; உலகப் புகழ் பெற்ற கவிஞர்; விசுவபாரதி உலகக் கலைக்கழகத்தை வளர்க்க இப்படி ஊர் ஊராகச் சுற்றி அலைகிறாரே என்று கவலைப்பட்டகருணாமூர்த்தி காந்தி பெருமான், ஒரு பெரும் செல்வந்தரை அழைத்து, கலைஞரிடம் ஓர் அறுபதினாயிரம் ரூபாய் கொடுத்தனுப்புங்கள்’ என்று கூறினார்.

அந்தச் செல்வந்தர் மகாத்மா கூறியபடி தொகையை கவிஞர் தாகூரிடம் வழங்கியதும், நேராக சாந்தி நிகேதன் சென்று ஒய்வெடுங்கள்” என்று அப்போது காந்தி அடிகள் இடைமறித்து கூறினார் கவிஞரிடம்.

‘விசுவபாரதி’ கலைக் கழகத்தை வளர்க்கப் பணம் திரட்டினார் கவிஞர் தாகூர். இந்தியாவிலே உள்ள பல மாநிலங்களுக்குச் சென்று பணம் சேகரித்தார். அறுபது வயதில் அவர் நிதி திரட்டிட ஊர் ஊராக அலைந்து திரிந்து அரும்பாடுபட்டார். தனது எழுபத்தைந்தாம் வயதில் காந்தியடிகளிடம் அவர் பெற்ற கடைசி நிதியோடு அதை முடித்துக் கொண்டார்.

தாகூர் பாடல்களின் கற்பனை வளத்தை உலக அறிஞர்களில் ஏராளமானவர்கள் போற்றினார்கள்; புகழ்ந்தார்கள்; பாராட்டு விழா கூட்டங்களை நடத்திக் கவுரவித்தார்கள். கவிஞர் தாகூரிடம் அதிகமான உயர்வு நவிற்சி அணி இராது; கண்டதை கேட்டதை, உணர்ந்ததை மட்டுமே கூறுவார். அவரது எழுத்தோவியங்களைக் கற்போர் மனக் கண்ணிற்கு புரியும் வகையில் எழுதுவார். அதற்கு இதோ இரண்டு அஞ்சல்கள்;

வெட்ட வெளியில் கிடைக்கும் கடல் அலைந்து புரண்டு நுரைக்கிறது. அதைப் பார்க்கும் போதெல்லாம், கட்டுண்டு வருந்தும் பெரிய பூதம்போன்ற தோற்றம் மனத்தில் எழுகின்றது. அந்தப் பூதத்தின் அகன்ற வடிவான வாய்க்கு எதிரே, கடற்கரையில் நாம் நம் வீடுகளை அமைத்துக் கொண்டு ஆது புரள்வதைப் பார்க்கின்றோம். என்ன

வலிமை! அளவற்ற பலம்! ஒர் அரக்கனுடைய தசைநார்களைப் போல அல்லவா அலைகள் எழுந்து எழுந்து அசைகின்றன.

படைப்புக்காலம் முதல் நிலத்திற்கும் நீருக்கும் இந்தப் போர் நடந்தே வருகிறது. உலர்ந்த நிலம் மெல்ல மெல்லத் தன் பகுதியை விரிவு படுத்திக் கொள்கிறது. தன் குழந்தைகளாகிய உலக மக்களுக்கு வாழ்விடம் பெருக்கித் தருகிறது. ஆனால், நீர்ப் பகுதியாகிய கடலோதன் இடம் பறிபோவதை உணர்ந்து பின் வாங்கிச் சென்று கூக்குரலிடுகிறது; விம்மி அழுகிறது. துயருற்றுத் தன் மார்பை அடித்துக் கொள்கிறது.

ஒரு காலத்தில் கடலே எல்லாமாக, தனிச் செங்கோலோச்சி, முழு உரிமையோடு விளங்கியது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நிலம், கடலின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தை, தாயின் அரியணையைக் கைப்பற்றிக் கொண்டது; அது முதல் பெற்ற தாய், பித்துப் பிடித்தவளாய் நுரை நுரையாய் கக்குகிறாள். ஓயாமல் அழுது விம்முகிறாள்; தன்னந்தனியே புயலில் சிக்குண்டு வருந்திய லியர் மன்னன் போல் துயருறுகிறாள்.

(1885-ஆம் ஆண்டு அக்டோபரில் எழுதிய கடிதம்)

புருவத்தில் தீட்டப்பட்ட மை!

“மாலையில்; மாடியின் மேல்; தனியாக நிலா முற்றத்தில்; உலாவுவது! நேற்றுப் பிற்பகலில் வீட்டிற்கு வந்தவர்களை அழைத்துச் சென்று, இந்த இடத்தின் இயற்கைக் காட்சிகளைக் காண்பிக்க வேண்டியது என் கடமை என்று உணர்ந்தேன்!

ஆனால், அகோர் என்பவனை வழிகாட்டியாக அழைத்துக் கொண்டு அவர்களோடு வெளியே புறப்பட்டுச் சென்றேன்.

வானத்தின் அடிவாரத்தில், தொலைவில் கண்ட மரங்களின் உச்சி நீல நிறமாகத் தோன்றிய திசையில், கரு நீலமான மேகத்தின் மெல்லிய ஒழுங்கு அந்த மரங்களின்மேல் அழகாக விளங்கியது. நான், கற்பனை உணர்வோடு விளக்க முயன்றேன். அழகிய நீலநிறக் கண்ணின் மேல் புருவத்தில் தீட்டப்பட்ட மை போல் விளங்குவதாகக் கூறினேன்.

என் நண்பர்களில் ஒருவருக்கு அது கேட்கவில்லை.இன்னொருவர்க்கு அது விளங்கவில்லை. மற்றொருவர், “ஆமாம்! மிக மிக அழகானது” என்று சொல்லி முடித்து விட்டார். அதற்கு மேல் கவிதை உணர்வோடு எண்ணவும் பேசவும் எனக்கு ஊக்கம் பிறக்கவில்லை.

(1892ஆம் ஆண்டு, மே 12இல் பூரிலிருந்து எழுதிய கடிதம்)