கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்/தாகூர் உருவாக்கிய விசுவ பாரதி, ஸ்ரீ நிகேதன்

விக்கிமூலம் இலிருந்து

8. தாகூர் உருவாக்கிய
விசுவ பாரதி,
ஸ்ரீ நிகேதன்

முதல் உலகப்போர் முடிந்ததும், 1918-ஆம் ஆண்டில், கவிஞர் தாகூர் சாந்தி நிகேதனில் விசுவ பாரதி என்ற உலகப் பொது நிலையத்தை, அதாவது உலகக் கலைக் கழகத்தைத் துவக்கினார்.

இந்தியாவில் இருந்த நாளந்தா பல்கலைக்கழகம் எவ்வாறு பழங்காலத்தில் உலகப் பல்கலைக்கழகமாகச் செயல்பட்டதோ அதனைப் போலவே விசுவ பாரதி உலகக் கலைக் கழகமும மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று கவிஞர் தாகூர் விரும்பினார். அவரது நண்பர்களான ஆண்ட்ரூஸ், பியர்கள் என்னும் ஆங்கிலேயர் இருவரும் சாந்திநிகேதனிலேயே தங்கி விசுவபாரதியின் ஆக்கப் பணிகளைக் கவனித்தார்கள்.

கவிஞர் பெருமான் தாகூர் 1920-ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்த போது, உலகக் கலைக் கழகம் தேவை என்பதின் அவசியத்தை உணர்ந்தார். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களின் கலைகள் அதில் எவ்வாறு இடம் பெற்றுச் சிறந்ததோ, அதேபோல, சீனா, ஜப்பான் முதலான கிழக்கு நாடுகளின் கலைகளையும், ஐரோப்பிய நாடுகளின் கலைகளையும் இடம் பெறச் செய்தார் தாகூர்.

ஐரோப்பிய நாடுகளின் நாகரிகத்தை எப்போதும் அவர் புறக்கணித்தது இல்லை. ஆனால், அதற்காக, அந்த நாடுகளின் நாகரிங்களைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதும் தீமை அதுபோலவே அடியோடு அவற்றை ஒதுக்குவதும் நமது வாழ்க்கைக்கு நட்டமே என்று நம்பினார். ஒவ்வொரு நாட்டின் நன்மை-தீமைகளையும் ஆராய்ந்து பார்த்து ஏற்க வேண்டியதை ஏற்றும், தள்ளவேண்டியவற்றைத் தள்ளுவதும் நல்லது என்றார்.

விசுவ பாரதி கலைக் கழகத்தில், எக்காரணத்தைக் கொண்டும் சாதி, சமயப் பிளவு புகுந்து விடாதபடி தாகூர் பாதுகாத்தார். எல்லாச் சமயத்தாரும், எல்லா இனத்தாரும் ‘மனிதர்’ என்ற பொதுத் தன்மையில் விளங்கி வாழ வேண்டும் என்று ஆர்வம் கொண்டார். அதே போல அங்கே இருந்த உணவு விடுதிகளிலே எவ்வகையான வேறுபாடுகளும் புகுந்து பிளவு படுத்தாதபடி எச்சரிக்கையோடு செயல்பட்டார். வழிபாடுபோன்றவற்றிலும் எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், முழு உரிமைகளை அங்கே நிலை நிறுத்தினார் ரவீந்திரர்!

ஜப்பான் பயணத்தில் ஏற்பட்ட கசப்பு

கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் 1916-17ஆம் ஆண்டின்போது ஜப்பான்நாட்டிற்குப் பயணம் சென்றார். அவருக்கு அந்தநாடு சிறப்பான வரவேற்புகளை வழங்கியது. பல கூட்டங்களிலே அவர் சொற்பொழிவாற்றினார். ஜப்பான் தேசத்துக் கவிஞர்களோடும், கலைஞர்களோடும் கலந்துரையாடி நட்புக் கொண்டார்.

ஜப்பானியர்களின் மண்ணாசையையும், பகையுணர்ச்சியையும் அவர் வெறுத்தார்! அதே நேரத்தில் அவர்களது உள்ளத்திலுள்ள அழகுணர்ச்சியைப் பாராட்டினார். சீனர்களிடம் ஜப்பானியர் நடந்து கொள்ளும் மனப்போக்கை எதிர்த்தார். டோக்கியோ பல்கலைக் கழகத்தில் அவர் பேசிய நாட்டுணர்ச்சி உரைகள் நூல்வடிவில் வெளிவந்தன. அது பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தியது.

தேசபக்தி என்ற முகமூடியை அணிந்துகொண்டு நாட்டுக்குச் செய்யும் துரோகத்தனங்களையும், நாட்டு முன்னேற்றத்தை நினையாமல், கேடு பயக்கும் தவறான உணர்ச்சிகளையும் அந்த நூல் சுட்டிக் காட்டியது. ஜப்பான் சென்ற கவிஞர் தாகூர், அவர்கள் நாட்டிலேயே அவர்களது தவறுகளைச் சுட்டிக் காட்டியதால், ஜப்பானியர்களும், அந்த நாட்டு அரசும் அவரை எதிர்த்தனர். அதனால் கவிஞர் தாகூர் தனத பயணத்தை விரைந்து முடித்துக் கொண்டு இந்தியா வந்தார்.

‘சர்’ பட்டத்தை தூக்கி எறிந்தார்!

கவிஞர் தாகூரின் மூத்த மகன், 1918-ஆம் ஆண்டில் மரணமடைந்ததால், தாகூர் பெரும் துயரடைந்தார் சிறிது காலம் எப்பணியிலும் ஈடுபடாமல் மெளனமாகவே இருந்தார்.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸ் நகரருகே, வெள்ளையர் ஆட்சியின் ராணுவ தளபதிகளுள் ஒருவரான ஜெனரல் டயர் என்பன், ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தினான்! அமைதியாகக் கூட்டம் கேட்கக் கூடியிருந்த நிராயுதபாணிகளான பொதுமக்களை, பீரங்கியிலே குண்டுகள் உள்ளவரை, சிட்டுக்குருவிகளைச் சுட்டுத் தள்ளுவதைப் போல கொடூரமாகச் சுட்டுக் கொன்றான் என்பதை அறிந்து கவிஞர் பெருமகன் தாகூர் மீளாத்துன்பமுற்றார்.

வேங்கை ஒன்று கூண்டை உடைத்து வெளியேறுவது போல, கவிஞர் தாகூர் சாந்திநிகேதனை விட்டு வெளியேறி கல்கத்தா நகரையடைந்தார். தனது எதிர்ப்புணர்ச்சியை பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிவித்தார். கூட்டம் போட்டுக் கண்டனம் தெரிவிக்க மக்களைத் திரட்டினார். ஆனால், அரசியல் தலைவர்கள் எல்லாரும் அப்போது அஞ்சினார்கள். ஆனால் நெருப்பு வெப்பம் போல் கோபம் கனன்றதால், தான் மட்டுமே தனியாக நின்று தனது எதிர்ப்பைப் பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிவித்தார்.

இந்திய வைசிராய்க்கு உடனே கடிதம் எழுதி, தனக்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அளித்த ‘சர்’ பட்டத்தை-ஜெனரல் டயர் செய்த மக்கள் கொடுமையை எதிர்த்துத் தூக்கி எறிகிறேன் என்று அவர் தெரிவித்தார். இந்தியன் என்ற உணர்ச்சியோடு மட்டுமன்று, நானும் ஒரு மனிதன் என்ற உணர்ச்சியால், வெள்ளையரின் கொடுமையான ஆட்சியைக் கண்டிக்கின்றேன் என்று அவர் உலகமறிய அறிக்கைவிட்டுக் கண்டித்தார். வெள்ளையர் வழங்கிய பட்டத்தை இனியும் நான் சுமந்தால், அது மனிதாபிமானத்துக்கே பெரும் அவமானம் என்றும் தாகூர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ நிகேதன் உருவானது!

எப்போதுமே கவிஞர் தாகூருக்கு, கிராம மக்கள் மீதும், கிராமத் தொண்டுகள் மேலும் ஒரு வித பாச உணர்ச்சி உண்டு. அதை நன்கு புரிந்து கொண்ட கவிஞரின் மூத்த மகன், தனது தந்தையார் தாகூரை அமெரிக்காவிற்கு அனுப்பி கிராம முன்னேற்றம் பற்றி அறியச் செய்தார். தாகூருடன் எல்மிர்ஸ்ட் என்ற ஆங்கிலேயரும் துணையாகச் சென்றார். அவர் கிராமத் தொண்டுகள் செய்து பழக்கப்பட்டவராவார்.

இந்தியா கிராமங்கள் நிறைந்த ஒரு விவசாய நாடு. இங்கே கிராமங்கள் முன்னேறா விட்டால் இந்தியா முன்னேறுவது என்பது வெறும் பகற்கனவு என்று நம்பியவர் தாகூர். விசுவபாரதி என்ற கலைக்கழகத்தில் ‘கிராமத்தொண்டு’ என்பதையும் மாணவர்களுக்குரிய ஒரு பாடமாக வைத்தார்.

சாந்திநிகேதன் அருகில், இரண்டு மைல் துரத்தில் ‘இருள்’ என்ற சிற்றுரில் தனக்குரிய வீட்டைத் தலைமை நிலையமாகக் கொண்டு, ‘ஸ்ரீநிகேதன்’ என்ற கிராமத் தொண்டு நிலையத்தை 1922-ஆம் ஆண்டு தொடங்கினார் தாகூர்!

அந்தத் தலைமை நிலையத்தைச் சுற்றி நூல் நிலையம், அலுவலகம், தொண்டர்களுக்குரிய வீடுகள் போன்ற வசதிகளைத்தாகூர் அமைத்தார் உழவுத்துறையில், அவ்வூரைச் சுற்றியுள்ள கிராம மக்கள் முன்னேற வேண்டும் என்றார். நெல்லும், கரும்பும் சிறப்பாகப் பயிரிடப்பட்டன. மரங்கள் நடப்பட்டுச் செழித்தன! கிராம மக்களுக்கான கூட்டுறவுக் கழகங்கள் பல உருவாயின.

கிராம மக்கள் அனைவரும் அக் கழகத்தில் உறுப்பினரானார்கள். இந்த கழகத்தின் மூலம் கிராம சுகாதாரத்திற்கும், மருத்துவமனைக்கும் நிதி ஒதுக்கி செலவிடப்பட்டன. வைத்தியத்திற்கு என்று கட்டணம் கட்டத் தேவையில்லை. மருந்துவர்கள் அந்தந்தக் கிராமத்திலே கிராம மக்களுள் ஒரு குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். நோய் வந்த பிறகு மருந்து தரும் பணியில் ஈடுபடாமல், வருவதற்கு முன்னரே மக்களுக்கு மருந்துகள் வழங்கப்படும் வழக்கம் வளரலாயிற்று.

இதுபோன்ற சுகாதாரச் சீர்த்திருத்த ஏற்பாடுகளால்.அப்பகுதியிலே மலேரியா போன்ற கடும் நோய்களிலே இருந்துமக்கள் காப்பாற்றப்பட்டார்கள். ஒவ்வொரு குடும்பமும் உடல் நலத்தோடு வாழ்வதற்காக கூட்டுறவுக் கழகத்தில் மருத்துவக் கட்டணத்தொகையையும் சேர்த்துக்கட்டிய காரணத்தால் உடல் நலத்தைக் காப்பதில் டாக்டர்கள் முழுக்கவனம் செலுத்தி நோயே வராமல் செய்தனர். கிராம மருத்துவர்களும், மக்களுடன் கிராமங்களிலே வாழ்ந்து தொண்டாற்றி வந்தார்கள்.

கிராமங்களில் கல்வித் தொண்டு

கிராமத்துப் பள்ளிக் கூடங்களிலே பணியாற்றிடும் ஆசிரியர்களது குறைகள் என்ன என்று உணர்ந்து, அவர்களுக்குரிய தேவைகளைச் செய்து, அவர்களுடைய கல்வித் தொண்டு வளருமாறு கவிஞர் தாகூர் திட்டமிட்டுப் பணியாற்றினார். கிராம முன்னேற்றத் தொண்டர்களுக்கும், கிராம ஆசிரியர்களுக்கும் இடையே தொடர்பு இருக்குமாறு தாகூர் திட்டம் அமைத்தார்.

கிராமப் பள்ளிகளது மாணவர்களுக்கும், கிராமத்தொண்டர் படைகளுக்கும் இடையே தொடர்புகள் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கவிஞர் தாகூர், தொண்டர் படையை அமைத்துக் கொடுத்தார். மாணவர்கள் அந்தத் தொண்டர் படையில் சேர்ந்து கூட்டுறவு அடிப்படையில் அவரவர்களுக்குரிய நன்மைகளைச் செய்து கொள்ள முடிந்தது.

இந்தத் தொண்டர் படையினர் கடைப்பிடிக்கும் விதிகளைச் சுருக்கி நான்கே நான்கு வரிகளில் கவிஞர் தாகூர் ஒரு பாடலை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தார். துன்பங்கள் கிராம மக்களுக்குச் சூழும் போதெல்லாம், அக்கிராமத்து தொண்டர் படை ஓடிவந்து உதவும் மனப்பாங்கை அவர் உருவாக்கினார். மாணவர்களும், பயனுள்ள துறைகளில் பழகிவந்தார்கள். அதனால், அவர்களது உடலும் தூய்மையானது; உள்ளமும் தூய்மை பெற்றது.

மரம், செடி, கொடி, தோட்டம் ஆகியவற்றை மாணவர் படையினர் வளர்த்தார்கள் பயிரிட்டார்கள் தோட்டத்தின் காய்கறிகளை தமக்கும், ஊராருக்கும் வழங்கி நன்மை பெற்று, நல்ல பெயரடைந்தார்கள்.

கிராம மக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும், அதாவது ஒவ்வொரு தொண்டர் வீட்டிலும் ஒவ்வொரு காய்கறித் தோட்டம் இருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாயிற்று. பொதுத் தோட்டத்து விளைச்சலைச் சந்தையில் விற்றுப் பள்ளி மாணவர்களுக்குப் புத்தகங்களை வாங்கினார்கள். மருத்துவர்களிடமிருந்து மருந்துகளை வாங்கிக் கொண்டு போய் நோயாளிகளுக்குக் கொடுப்பதும், வேறு சில வேலைகளை கிராம முன்னேற்றத்துக்காகச் செய்வதும் தொண்டர் படையினர் பணிகளாகும். இவை மட்டு மல்லாமல், பொழுது போக்குகளுக்கும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொண்டர் படையினதும். கிராம மக்கயினதும் மகிழ்ச்சிகளுக்காக, விளையாட்டுக்கள், நாடகங்கள், கதைகள், பாடல்களைக் கொண்ட நிகழ்ச்சிகளும் நடந்து வந்தன.

தேர்வு முறையற்ற கல்வி

மேற்கண்டவாறு ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெற்றதால், அவற்றிலே தேர்வும், பண்படும் மனமும் அமைந்த மாணவர்கள், தலைமை நிலையமான ஸ்ரீ நிகேதன் வர வேண்டும். அங்கே கொஞ்சக் காலம் தங்கிப் பயனடைவது பழக்க வழக்கமானது.

ஸ்ரீ நிகேதன் நிலையத்தைச் சுற்றி, பல கிராமங்களுக்குப் பொதுவான உயர்நிலைப் பள்ளியும், உணவு விடுதியும் அமைந்தன. எட்டு அல்லது ஒன்பது வயதில் அங்கு வந்து சேரும் மாணவர்கள், பதினைந்து, பதினாறு வயது வரைக்கும் தங்கிக்கற்றார்கள். வங்காள இலக்கியமும், வங்காள வரலாறும் அங்கே கற்பிக்கபப்பட்டது. உலகச் செய்திகளை அறிந்தும், வாழ்க்கை வரலாறுகளைப் படித்தும் மாணவர்களின் அறிவு வளர ஏற்பாடு செய்தார்கள். கைத் தொழில்கள் கற்பிக்கப் பட்டன. ஆனால், மதிப்பெண்கள் பெற்றுத் தேற வேண்டிய பொதுத்தேர்வு முறையை தாகூர் அங்கே நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏன் கவிஞர் தாகூர் தேர்வு முறையை அங்கே நடத்தாமல் விட்டு விட்டார்? காரணம், தேர்வுமுறை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இடையூறானது; முட்டுக் கட்டை போட்டு ஓடும் தேரை நிறுத்துவது போன்ற ஒரு மனத்தடங்கல் கல்வி முறை அது என்பது கவிஞரின் கொள்கை. அதனால் அங்கே அவர் தேர்வு முறையை நடத்தவில்லை.

அறிவை வளர்ப்பதில் உணர்ச்சியே மிக முக்கியமானது. கல்வி என்பது கட்டாய உணவு அல்ல என்று கவிஞர் உணர்ந்தார்.

சாந்தி நிகேதன் பள்ளியில் மற்றவர்களது விருப்பத்திற்கு இணங்கி, ஆரம்பத்தில் மெட்ரிகுலேஷன் தேர்வுத் திட்டத்தின்படி கல்வி முறையை அமுலாக்கினார். ஆனால், முதலில் இருந்தே அவருடைய மனத்தில் தேர்வு முறையை எதிர்த்துப் போராட்டம் நடந்து வந்தது.

சில ஆண்டுகள் நடைமுறையில், அதன் தீமைகளை உணர்ந்தபின்பு, மெட்ரிகுலேஷன் தேர்வோடு சாந்திநிகேதன் மாணவர்களுக்குத் தொடர்பே கூடாது என்ற முடிவிலே கவிஞர் நின்றார். அப்போது மற்றவர்கள் கவிஞர் எண்ணத்திற்கு இணங்கவில்லை. மீண்டும் பொறுத்தார்.

கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் 1920-ஆம் ஆண்டு மீண்டும் ஐரோப்பா நாடுகளுக்குப் பயணம் சென்றார். கப்பல் ஏறிய பிறகுதான். சாந்திநிகேதன் ஆசிரியர்கள் கவிஞருடைய உணர்ச்சியை, எண்ணத்தை, உள்ளக் கருத்தை உணர்ந்தார்கள். அவர் முடிவுக்கேற்ற படியே நடத்த முன்வந்தார்கள்.

கப்பலில் பயணம்சென்றுகொண்டிருந்த கவிஞர் தாகூருக்கு அஞ்சல் வாயிலாக அச்செய்தியை சாந்திநிகேதன் பொறுப்பாளர்கள் அனுப்பியபோது, அதைப் பெற்ற கவிஞர் பெருமான் தாகூர் சொல்ல முடியாத மகிழ்ச்சியைப் பெற்றார். சாந்திநிகேதனின் கல்வி முறையிலே இருந்த பெருங்குறை அகன்று விட்டதாக அகமகிழ்ந்தார்.