கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்/‘கீதாஞ்சலி’ நூலுக்கு நோபெல் பரிசு!

விக்கிமூலம் இலிருந்து

7. ‘கீதாஞ்சலி’ நூலுக்கு
நோபெல் பரிசு!

அரசியலை விட்டு விலகிய கவிஞர் தாகூர், இலக்கிய வெறியோடு ‘கீதாஞ்சலி’ என்ற உள்ளொளி நூலை எழுதினார். ஆனால், அதைத் தன் தாய்மொழியான வங்காள மொழியில் தான் எழுதினார். அதனால், அதை வங்கப் பேரறிஞர்கள் மட்டுமே பாராட்டும் நிலையேற்பட்டது.

தன்னுடைய உடல் நலக் குறைவினால் கிராமம் ஒன்றிற்குச் சென்றார்! உடல் சுகமானதும் சில நாட்கள் ஓய்வெடுத்தார். அந்த நேரத்தில் ‘கீதாஞ்சலி’ நூலை ஆங்கில மொழியிலே மொழி பெயர்த்தார். பொழுது போக்கிற்காக செய்த இந்த மொழி மாற்றப் பணி, அவருடைய புகழை உலக மெல்லாம் பரப்பியது. பொருளாதாரத்தில் நொடிந்து போயிருந்த அவரது வாழ்க்கை அந்த மொழி பெயர்ப்பால் நன்மை பெற்றது; புகழைத் தேடித் தந்தது; உலக அறிஞர்கள் கவிஞர் தாகூரை வானளவாகப் புகழ்ந்து போற்றினார்கள். அவரை அறிவுலகம் தேடிவந்து அணைத்துக் கொண்டது. ஆரத்தழுவி மகிழ்ந்தது.

கவிஞர் தாகூர் 1912-ஆம் ஆண்டில் லண்டன் மாநகர் சென்றார். அப்போது ரோதென்ஸ்டின் என்ற பழைய நண்பரைக் கவிஞர் கண்டார். அந்த நண்பர் ஒரு முறை சாந்தி நிகேதனுக்கு வந்த போது நண்பரானவராவார். அந்த நண்பர் ஆங்கிலத்தில் அருமையாக மொழி பெயர்க்கப்பட்ட கீதாஞ்சலி நூலைப் படித்துப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். அதிலுள்ள ஒவ்வொரு பாடலையும் அவர் திரும்பத் திரும்பப் படித்து, அதன் இனிமையைச் சுவைத்தார். தனது நெருங்கிய நண்பரான யீட்ஸ் என்பவரிடமும் ‘கீதாஞ்சலி’யைக் கொடுத்து படிக்குமாறு கேட்டுக்கொண்டார். மற்றும் பல ஆங்கில நண்பர்களுக்கெல்லாம் ரோதென்ஸ்டின் அந்த நூலைக் கொடுத்து படிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

ரோதென்ஸ்டின் நண்பர்கள் வட்டம் முழுவதும் கீதாஞ்சலி நூலைப் போற்றிப் புகழ்ந்தது. கவிஞர் தாகூரின் நண்பர்களான வெல்ஸ், பெர்னாட்ஷா, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ராபர்ட் பிரிடம்ஜ் போன்ற அனைவரும் அவரது நூலைப் பாராட்டினார்கள். அப்போது ஆண்ட்ஸ் சாந்திநிகேதனின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருந்தார்.

லண்டன் நகர் நண்பர்கள் வட்டம் தாகூருக்கு விருந்தளித்துப் பாராட்டியது. புத்தகமாகிவிட்ட ‘கீதாஞ்சலி’ நூல் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலே அச்சிட்டுப் பரபரப்பாக விற்பனையானது. உலக நாடுகள் எல்லாம் தாகூரையும், அவரது எழுத்தாற்றலையும் புரிந்து கொண்டன.

கீதாஞ்சலியை நன்றாக ஊடுருவி வாசித்த சமயச் சார்புடைய சங்கத்தார், ரவீந்திர நாத் தாகூர் வெறும் கவிஞர் மட்டுமன்று; அவர் ஒரு சமயத் தலைவராகவும் காட்சியளிக்கின்றார் என்று அவரை மத பேதமின்றிப் பாராட்டினார்கள். ‘கீதாஞ்சலி’யின் பாடல்கள் அன்புப் பாடல்களே என்று அவர்கள் கருத்தறிவித்தார்கள்.

கவிஞர் தாகூர் லண்டன் மாநகரிலிருந்து அமெரிக்கா சென்றார். அங்கே சில பல்கலைக் கழகங்களது வேண்டுகோள்களுக்கு ஏற்ப, சொற்பொழிவுகளாற்றி அரிய கருத்துகளைக் கூறினார்.

நோபெல் பரிசு பெற்றார் தாகூர்

அமெரிக்காவிலே சொற்பொழிவாற்றி விட்டு மீண்டும் லண்டன் வந்தார் கவிஞர் தாகூர். பிறகு, நேராக 1913-நவம்பர் மாதத்தில் இந்தியா திரும்பினார். சாந்திநிகேதன் வந்து சேர்ந்த கவிஞர் தாகூருக்கு ஓர் அவசர தந்தி வந்தது. அதில், இரவீந்திர நாத் தாகூருக்கு இலக்கியத்துறை பிரிவு சார்பாக நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. சாந்திநிகேதனையே அந்தத் தந்தி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

இந்த நோபல் பரிசு அன்று வரை ஐரோப்பிய அறிஞர்களுக்கே தொடர்ந்து வழங்கி வரப்பட்டது. அந்த பரிசு வழங்கல் மரபை. ‘கீதாஞ்சலி’ உடைத்தெறிந்து விட்டது. ஐரோப்பியர்கள் அல்லாத இந்தியரான ரவீந்திரநாத் தாகூருக்கு அந்த பரிசு வழங்கப்பட்டது.

நோபல் பரிசு பெற்றுவிட்ட ரவீந்திர நாத் தாகூரை வங்க அறிஞர்கள் முன்பைவிட இப்போது மிக மரியாதை கொடுத்துப் பாராட்டினார்கள். வங்காளத்திலே யார் யார் அவரை அவமரியாதையாக அன்று பேசினார்களோ, கேலியும் கிண்டலும் செய்து மிகவும் கேவலமாக நடந்து கெண்டார்களோ, அவர்களனை வரும். இப்போது பாராட்ட வந்த அறிஞர்களோடு சேர்ந்து கொண்டார்கள்.

கல்கத்தா நகரில் நடைபெற்ற ஒரு திருமண வீட்டில் வங்க நாவலாசிரியர் பங்கிம் சந்திர சட்டர்ஜியும், கவிஞர் தாகூரும் சந்தித்துக் கொண்ட நேரத்தில், சட்டர்ஜி தாகூரை புகழ்ந்து போற்றியது நினைவிருக்கலாம். அப்படிப்பட்ட ஒருவர் அத்தனை பெரிய திருமண மண்டபத்தில் அப்போது பாராட்டியதை வங்காளிகள் உணரவில்லை.

ஆனால், ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும், லண்டன் நகரத்தவர்களும் தாகூரைப் பாராட்டிப் பரிசு கொடுத்துப் போற்றிய, பிறகுதான் வங்காளிகள் அவரது அருமையை அறிந்து பெருமை கொண்டார்கள். அதுவரை அலட்சியப்படுத்தியே வந்தார்கள்.

வங்காள மொழியில் பழுத்த புலவர்கள், தாகூரின் பாட்டுக்களையும், எழுத்துக்களையும் குறை கூறி கிண்டலடித்தார்கள். அவர் இலக்கணம் அறியாதவர் என்று இகழ்ந்து எழுதினார்கள். மாணவர்கள் எழுதும் வினாத்தாள்களில், ‘பிழை திருத்துக’ என்ற தலைப்பின் கீழ், தாகூரின் நூல்களில் கண்ட வரிகளைக் கொடுத்து எழுத வைத்தார்கள்.

தாகூரின் வாக்கியங்கள் தவறானவை என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்ற தப்பான பிரசாரத்தைச் செய்தார்கள். ஆனால், அதே புலவர்கள் தாகூர் நோபல் பரிசு பெற்ற பிறகு ஊமைகளாகி விட்டார்கள்.

கல்கத்தா பல்கலைக் கழகம் தாகூரைப் பாராட்டியது. கல்லூரியில் பட்டம் பெறாத அவருக்கு 1913-ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கிப் பெருமை கொண்டது. அதற்குப் பிறகு பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ரவீந்திரரை பட்டமளிப்பு விழா உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டது.

டாக்டர், கவிஞர் இரவீந்திர நாத் தாகூர் அந்த அழைப்பை ஏற்று, தன் தாய்மொழியான வங்காளத்திலேயே பட்டமளிப்பு உரையாற்றினார்! ஆங்கிலத்திலே வழக்கமக உரையாற்றுபவர்களுக்கும் தாய்மொழிப் பற்று வரவேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு முன்னோடியாக விளங்கினார்.

இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசு, டாக்டர் கவிஞர் இரவீந்திரநாத் தாகூருக்கு 1915-ஆம் ஆண்டில் ‘சர்’ பட்டம் வழங்கிப் பாராட்டியதால், டாக்டர் கவிஞர் சர் ரவீந்திர நாத் தாகூர் என்று அவர் மக்களால் அழைக்கப்பட்டார்.

இந்தப் பெரும் பட்டங்கள் எல்லாவற்றையும் மீறிய புகழோடு, உலகப் புகழ்பெற்ற முதல் இந்திய மகாகவியாக தாகூர் விளங்கினார். உலக மக்கள் அவருடைய பாடல்களையும், எழுத்துக்களையும் படிப்பதுடன் மட்டுமல்லாமல் அதை ஆராய்ச்சிகளும் செய்து வந்தார்கள். இதற்கெல்லாம் காரணம் அவரது கீதாஞ்சலி நூல் தான். அதே நேரத்தில் ‘கீதாஞ்சலி’ நூல் வெளிவரக் காரணர்கள் யார் யாரோ அவர்களை எல்லாம் கவிஞர் மறக்கவில்லை. அந்த மொழி பெயர்ப்பு நூலின் உரிமையுரையில், கவிஞர் தாகூர் தனது நண்பரான ரொதென்ஸ்டினுக்குக் காணிக்கை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கவிஞர் தாகூர், சிறுவயதிலிருந்தே இங்கிலீஷ் மொழியை முழுமையாகக் கற்கவில்லை. ஆங்கிலம் கற்பது அவருக்கு வேம்பு போல் கசந்தது; வெறுப்பும் ஏற்பட்டது. பிற்காலத்தில், அவரது கவிதைக்கும், பாடலுக்கும், கதைகளுக்கும் ஆங்கில மக்களிடையே நல்ல செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்த போது, இங்கிலீஷ் மொழியின் பயனை உணர்ந்து தன்னுடைய சொந்த முயற்சியால் அதைக் கற்றுக் கொண்டார். வங்காள மொழியிலே இருந்து எந்தக் கருத்தையும், செம்மையான ஆங்கில நடையில் மொழி பெயர்க்கும் அளவிற்கு நல்ல திறமையையும் வளர்த்துக் கொண்டார்!

‘கீதாஞ்சலி’யை ஆங்கிலத்திலே அவர் மொழிபெயர்த்த போதும் கூட, அதை அவர் நூலாக அச்சிட விருப்பம் காட்டவில்லை. ஆனால், அவரது மொழி பெயர்ப்பை ஆங்கிலேய அறிஞர்கள் பாராட்டுவதை அறிந்த பிறகு தான் அதை நூலாக வெளியிட்டார்.

நோபல் பரிசு கீதாஞ்சலிக்கு கிடைத்த பிறகும் கூட, தான் எழுதிய எல்லா நூல்களையும் தனது தாய் மொழியான வங்களாத்திலேயே எழுதினார். ஆண்ட்ரூஸ் என்ற அவரது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் “உமது தாய் மொழியான இங்கிலீஷில் இயல்பாக, நீங்கள் அழகாக எழுதுகின்றீர்கள். எனக்கு அந்த இயல்பு வரவில்லை” என்று குறிப்பிட்டு, அவரவர் தாய் மொழியின் இயல்பை அவர் பெருமையாகச் சுட்டிக்காட்டினார். இந்த நம்பிக்கையை கவிஞர் தாகூர் தனது இறுதிநாள் வரையிலும் கடைப்பிடித்தார்.

முதல் உலகப் போர் துவங்குவதற்குச் சிறிது காலத்திற்கு முன்னரே, கவிஞர் தாகூர் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்குச் சென்று திரும்பிவிட்டார். அதனால், அந்தந்த நாடுகளிலுள்ள அறிஞர்களுடன் கலந்து உரையாடி நட்பும் வைத்துக் கொள்ளும் வாய்ப்பு அவருக்கு உண்டாயிற்று.

ஐரோப்பிய நாடுகள் தங்களது நாகரிகத்தை வளர்த்துப் பெருக்கிக் கொண்டாலும், அந்த நாடுகள் ஒன்றை ஒன்று அழிக்கும் பகையையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றனவே என்று தாகூர் வருத்தப்பட்டார். காரணம், அந்த நாடுகள் இடையே அன்பும், மனிதநேயமும் போதிய அளவு வளராததால்தான், அவை ஒன்றைக் கண்டு மற்றொன்று அஞ்சும் நிலையிலே உள்ளன. அதற்கு அவர்கள், அவரவர் நாடுகளைத் தற்காத்துக் கொள்ளவே படை திரட்டுகிறோம், பெருக்குகிறோம் என்று பேசுகிறார்கள். அழிவு வேலையில் போட்டியும்-பொறாமையும் வளர்வது நாகரிகமாகாது என்பதை அவர் தெளிவாகவே அந்தந்த நாட்டு அறிஞர்களுடன் பேசும்போது சுட்டிக் காட்டினார்.

கவிஞர் தாகூர் இந்தியா திரும்பி வந்ததும், அவருக்கு நடந்த பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு பேசும் போது மேற்கண்ட கருத்தைக் கூறியதுடன் நில்லாமல், உருவாகும் போர் மயக்கத்தை வேரறுக்க இந்திய நாடுதான் வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தாகூருடைய ஆங்கில நண்பர்களான ஆண்ட்ரூஸ், பியர்சன் என்ற இருவரும் 1914-ஆம் ஆண்டு சாந்தி நிகேதனுக்கு தொண்டாற்ற வந்து சேர்ந்தார்கள்.இவர்கள் சாந்திநிகேதனுக்கு வந்துள்ளதால், இவர்கள் சேவை உலக அமைதிக்கு உதவும் என்று தாகூர் மகிழ்ந்தார். அதுபோலவே, அவர்களுடைய தொண்டுகளால் 1915-ஆம் ஆண்டு தென்னாப்ரிக்க நாடுகளுடன் சாந்திநிகேனுக்கு தொடர்பு உருவானது. தென்னாப்ரிக்காவில் காந்தியண்ணல் ஏற்படுத்திய போனிக்ஸ் பள்ளியின் மாணவர்கள், இந்தியாவிற்கு வந்து சாந்திநிகேதனில் தங்கியிருந்தார்கள். அப்போதுதான், மகாத்மா காந்தியடிகள் சாந்திநிகேனுக்கு வருகை தந்தார்.

கவிஞர் தாகூரும் கூடி அளவளாவிய முதல் கூட்டம் சாந்தி நிகேதன் சந்திப்பாகும். இதற்குப் பிறகுதான். சாந்திநிகேதன் புகழ் உலக அறிஞர்களைக் கவர்ந்தது. தாகூரும் அரசியல் உலகை அறவே மறந்து சாந்திநிகேதன் தொண்டிலே மும்முரமாக ஈடுபட்டார்.