கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/13

விக்கிமூலம் இலிருந்து

13. கான்பூர் காங்கிரஸ் சரோஜினிதேவி தலைவர்
சரோஜினிதேவி காங்கிரஸ் மகாசபை பிரச்சாரத்துக்காக அவர் செல்லாத இடமில்லை; அவர் பேசாத அயல் நாட்டுக் கூட்டங்கள் இல்லை; அவரைப் பாராட்டாத தலைவர் இல்லை; என்ற அளவில், அவர் பல ஆண்டுகளாக உலகத்தைச் சுற்றிச் சுற்றிப் பிரசாரம் செய்தார்.

அப்படிப்பட்ட ஒரு தலைவரை, ஆற்றல் மிக்க வீராங்கனையை, பெண் சிங்கச் சேவையைப் பாராட்டிப் பெருமைப் படுத்திட இந்தியாவும், அகில இந்திய காங்கிரசு மகாசபையும் விரும்பியது.

தொடக்கக்காலம் முதல் சரோஜினிநாயுடு தாய்க்குல முன்னேற்றத்துக்காகக் கடுமையாக உழைத்தவர். அப்படிபட்டவரை மக்களும், மகாசபையும் 1925-ம் ஆண்டு கான்பூரில் நடந்த அகில இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபைக்குத் தலைவராக்கிப் பெருமை பெற்றது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து பல சாதனைகளைச் செய்து, அங்குள்ள இந்தியர்களுக்கு பெருமையை, உரிமையை, தனி மனித சுதந்திரத்தைப் புதையலாக்கிக் கொடுத்து விட்டு, 1913-ம் ஆண்டு இந்தியா வந்த காந்தியடிகள், இங்கும் உண்ணாவிரதம் சத்தியாக்கிரகம், கிளர்ச்சி, போராட்டம் போன்ற ஆக்கப்பணிகளிலே அயராது, ஓய்வு ஒழிச்சலின்றி ஈடுபட்டு, உருவாக்கி மக்களை வேலை வாங்கிக்கொண்டே இருந்தார்.

அத்தகைய மகாத்மாவை வெள்ளை அரசு புறக்கணித்தாலும், அந்த மகானை மாபெரும் அரசியல் ஞானியாவே இந்தியத் தலைவர்கள் ஏற்று இவருடைய தலைமையின் கீழ் பணியாற்றிப் பெருமை பெற்று வந்தார்கள்.

எப்போது சுதந்திரம் பெறுவோம், எப்படிப்பட்ட அறப்போர்களைச் செய்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்ற எண்ணங்களே மக்களிடையே ஓங்கி வளர்ந்து வந்திருந்தன. இதற்கான திட்டங்கள் என்ன என்பதை வரையறுக்கவே கவிக்குயில் சரோஜினிதேவி தலைமையில் காங்கிரஸ் மகாசபை கான்பூர் நகரில் கூடியது.

சரோஜினி தேவி தனது தலைமை உரையிலே பேசும்போது:

"நாடு விடுதலை பெற வேண்டும் என்பதிலே நமக்குள் எந்தவிதக் கருத்து வேறுபாடும் கிடையாது ஆனால், விடுதலைப் பாராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளைக் கண்டு அச்சப் படவோ, அஞ்சவோ கூடாது. அப்படி பயத்து செத்தால், அவர்கள் மன்னிப்பே வழங்கப்பட முடியாத மாபெரும் துரோகம் செய்தவர்கள் ஆவார்கள்.

நாட்டின் விடுதலைக்காக தாம் செய்ய வேண்டிய தியாகம் என்ன? அதற்காகக் கடக்கவேண்டிய தூரம் எவ்வளவு? என்றெல்லாம் சுதந்திரக் கணக்கை போட்டு மனக்களைப்பும், சோர்வும் கொள்வது ஒரு விடுதலைக் போராட்டதுக்கு அழகாகாது.

அச்சத்தை அகற்ற வேண்டும், அயர்வைத் தூக்கி எறிய வேண்டும்; நம்பிக்கை நமக்கு உடல் நரம்பாக அமைய வேண்டும். துணிவே துணை என்ற மந்திரத்தைச் சதா சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். தமக்குள் ஒற்றுமை உருவாக வேண்டும்; எல்லோரும் சகோதரர்களே என்ற எண்ணம் எழுச்சிப் பெற்றால், நாம் ஒரு புதிய மகத்தான் சக்தியைத் தோற்றுவித்தவர்கள் ஆவோம்!

வெளிநாடுகளில் உள்ள நமது இந்தியர்களும் நாமும் ஒன்றுபட்டு நமக்குப் பூட்டப்பட்ட அடிமைச் சங்கிலியின் ஒவ்வொரு இரும்பு வளையத்தையும் நொறுக்கி உடைத்தாக வேண்டும்.

பெருமைக்குரிய தமது பாரதமாதா காங்கிரஸ் கொடியை ஊர்தோறும் உயர்த்திப் பிடித்து, அதற்கான கொள்கைப் பிரச்சாரங்களைச் செய்யவேண்டும். மக்களை மகாசபை உறுப்பினர்களாக்க தாம் அயராது உழைத்தாக வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை ஏந்துவேன் காங்கிரஸ் கொடியை உயர்த்திப் பிடித்து படை நடை போடுவேன்; கொடியைத் தாழ்த்தமாட்டேன். மற்றவர் தாழ்த்தினாலும் பொறுக்க மாட்டேன். வீரசுதந்திரம் பெறும் வரை ஓய மாட்டேன். என்னைப்போல நீங்களும் ஊர்தோறும் ஏறுநடை வீறுடன் செயலாற்றுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

தாய்மார்களே! வீட்டுப்பணிகளை திறமையாகச் செய்பவர்கள் நீங்கள் நம் நாட்டுப் பணியையும் தீவிரமாகச் செய்திட முன்வந்தாக வேண்டும். இந்தியாவின் மூலப் பொருள்களையும், மூலதனங்களையும் காப்பாற்றும் உரிமை தமக்கு வேண்டாமா?

பாரதமாதாவின் பக்தி மிக்கப் புதல்வி என்ற முறையில், எல்லாப் பணிகளையும், அவை எவ்வளவு கடினமானவையாக இருப்பினும் கடுமையாகச் செய்து காட்டுவேன்! மகாசபை அன்பர்களிடம் பேசி கட்சிப் பூசல்கள் என்ற வேரை அறுப்பேன்.

பிரிவினையாகாத ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை போல் ஒன்றுபட்டு, பகைவிட்டு பசுமையாக வாழவேண்டி நாம், நமக்குள்ளே சாதிப்பகைகளையும், மதப்பகைகளையும், மறந்தும் மூளவிடவேண்டாம். என்று கேட்டுக் கொள்கிறேன்.

காந்தியடிகள் நமக்கு மகான். அவர் காட்டும் வழியில் நடப்போம். வலியவரும் மெலியவரும், நலிந்தவரும் நயந்தவரும் சரிநிகர்ச் சமானமாக வாழவேண்டும் என்ற புதுமுறையை, புனிதவழியை நமக்கு அண்ணல் காட்டுகிறார்.

சமத்துவம், சகோதரத்துவம், இந்தியாவிலே உள்ள மக்களுக்கு மட்டுமல்ல; இந்தியாவைத் தாய் நாடாக கொண்ட அயல்நாட்டு இந்தியர்களுக்கும் அந்த தத்துவங்கள் பயன்படப் பாடுபடவேண்டும் என்று மகாசபை மக்களை அழைக்கின்றேன்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முப்பெரும் ஜனநாயகத் தத்துவங்களை கவியரசி சரோஜின் தேவி எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கனவு கண்டார். சுதந்திரம் நமக்கு வந்து ஐம்பதாண்டுகள் ஆகின்றன. இன்னும் சரோஜினி அன்று கண்ட கனவு கனவாகவே கலையாமல் இருக்கின்றது.