கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/06

விக்கிமூலம் இலிருந்து

6. “கெய்சர் ஹிந்த்” பதக்க வழங்கி பிரிட்டிஷ் பாராட்டு!
கவிக்குயில் சரோஜினி நெஞ்சிலே தைத்திட்ட அந்த நெருஞ்சி முள் நெருடல் எது?

ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்பதும், நாட்டுப் பற்றோடு மக்களுக்குத் தொண்டாற்றி, அவர்களை வீறு கொள்ளச் செய்து வீர உணர்வுகளை உருவாக்குவதும், இந்திய சுதந்திரத்தைப் பெற்றிட சோர்விலாமல் உழைத்து நாட்டை விடுவிப்பதும் தான் அந்த நெருஞ்சி முள் நெருடலாகும்.

சுயராஜ்ய உணர்வுகளை மக்களிடம் எவ்வாறு ஊட்டுவது என்று சிந்தித்தார். கவிதைகளைப் புனைந்து அதன் மூலம் மக்களைத் தட்டி எழுப்புவது ஒன்றுதான் அதற்குரிய வழியென்று கண்டார்.

மேடைகள் தோறும் ஆங்கிலேயர் அராஜக ஆட்சியின் கொடுங்கோன்மைகளை விளக்குவது மற்றொரு வழி! மூன்றாவதாக, மக்களது அடிமை மனப்பான்மையை அகற்றி, இந்திய நாகரீகப் பண்பாடுகளை, பழம் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துக் கூறி, அவர்களை உணர்வு பெறச் செய்வது என்ற மூன்று வழிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டார் கவிக்குயில்.

ஏழை மக்கள் நிர்கதியாகத் தவிப்பதை மக்களுக்கு உணர்த்தும் கவிதையை எழுதினார் சரோஜினி தேவி. இதோ அந்தக் கவிதையின் இரக்க உருக்க வடிவம்!

"கிழவி ஒருத்தி-
இளமையில் சணல்களையும் குழந்தைகளையும் உறவினரையும்
பேணிக் காத்தவளே; அவள்-
இன்று ஆதரவற்று ஆலமரத்தடியில் அமர்ந்து,
இறைவனின் திருப்பெயரால் இறைஞ்சுகிறாள்
இரக்கம் உடையோர் ஈந்து நடக்கின்றனர்;
மற்றோர் ஈயாமல் நீங்குகின்றனர்;
அதுவும் பொருளன்று; இதுவும் பொருளன்று அவளுக்கு

ஆண்டவன் திருநாமமே அவளுக்கு;
வறுமையின் வன்மை, வன்மை, ஒண்மை!...”

-என்று கவிதை மூலம் பேசுகிறார் கவிக்குயில் சரோஜினி தேவி! கவிதை எமக்குத் தொழில் என்று அவர் சும்மா இருந்துவிடவில்லை.

தேசத்துக்கும், ஏழை மக்களுக்கும் எப்படியாவது, எந்த வழியிலாவது சேவை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உந்தியது.

மக்கட் தொகையில் சரி பாதியுடைய பெண்ணினம், கல்வியில் மட்டும் தாழ்வுற்றுக் கிடப்பது ஏன்? என்ற கேள்வியை தாய்க்குலம் சார்பாக எழுப்பினார். பெண் கல்விக்கு இடையறாத முயற்சிகளை சமூகம் மூலமும், அரசு வாயிலாகவும் ஏற்பாடு செய்தார்.

ஐதராபாத் நகரைச் சூழ்ந்து விட்ட வெள்ளக் கொடுமையைக் கண்டு மன வேதனைப்பட்டதோடு நிற்கவில்லை! அச்சேவையிலே சரோஜினி நேரடி பங்குகொண்டு பணியாற்றினார்.

பணக்காரர்கள் பண உதவிகனைச் செய்தாலும், அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்தாலும், அவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்மணியாக சரோஜினி தேவி இல்லை. எந்த உதவியும் நம் கையாலேயே செய்யப்படவேண்டும் என்ற நோக்குடையவர் ஆனார்.

பொதுப் பணிகளுக்குப் பொருள் திரட்டும் பணியில் களைப்பே இல்லாமல் உழைக்கும் மன அறம் கொண்டார். எத்தகைய இரும்பு நெஞ்சனையும் இளக வைக்கும் நெருப்புலையாகப் பாடுபட்டார்.

காந்தியடிகளுக்கு அவரது தாயார் புட்லி அம்மையார் அரிச்சந்திரன் கதை கூறி அற மனதை வளர்த்ததைப் போல, சிவாஜியின் தாயார் பவானி தேவி அருள் பாலிப்பு கதைகளைக் கூறி வீரம் ஊட்டியதைப் போல, கவியரசி சரோஜினி புராண, வரலாற்றுப் கதைகளைக் கூறித் தாலாட்டித் தனது குழந்தைகளை வளர்க்காமல், தான் எழுதிய பாடல்கலைப் பாடியே தூங்க வைப்பார்.

அவரது ஆராரோ பாடிடும் தாலாட்டுப் பாடல்களின் கருத்துக்களை ஒரு முறை படியுங்கள். அப்பாடல்கள் எவ்வளவு வித்தியாசமானவை என்று விளங்கும்

"இன்னமுதே! வயல்கள், தாமரைத் தடாகங்கள், வான்முட்டும் மலைச் சிகரங்களில் இருந்து உனக்காக எனது ஆசைக் கனவுகளை ஏந்தி வந்திருக்கிறேன். கண்ணே சலிக்கும், உனது கண்களை மூடி உறங்கு’ நான் கொண்டு வந்த எல்லாக் கருத்துக்களும் உனது கனவுகளிலே வந்து இன்பமூட்டும்.

"கண்ணின் மணியே! பளபளவென்ற ஒளியோடு பறக்கும் மின்மினிப்பூச்சி, செடிகளுக்கு இடையே பறந்து செல்வதைப் பார். கொடிகளிலும், செடிகளிலும் பூத்துச் சிரிக்கும் பல வண்ணப் பூக்களில் இருந்தும் உனது மனதுக் இனிய கனவுகளைக் களவாடிக் கொண்டு வந்திருக்கிறேன். என்னை அன்போடு பார்க்கும் உனது விழிகளை மூடித் தூங்கு, நான் திருடி வந்த கனவுகள் உன்னைத் தூக்கத்தில் இன்பப்படுத்தும்."

"அன்பே நிலா விண்வெளியில் உலா வருகிறது; விண்மீன்கள் ஒளி உதறுகின்றன; இரவு வந்துவிட்டது! விழித்திருந்து மற்றவர்களுக்கு இன்னல்களைத் தராதே. நீலமணிக்கு நிகரான உனது கண்மணிகளை மூடித்தூங்கு. எனது பாடல்கள் உனது செவியில் இசைப்பது போல் உனக்குக் கனவுகள் வந்து மகிழ்வூட்டும்."

மேற்கண்டவாறு தாலாட்டுக் கவிதைகளையும், இயற்கை அற்புதங்களை வருணனை செய்யும் பாடல் களையும், கவிக்குயில் சரோஜினி எழுதிச் குவித்தார். இந்தப் பாடல்கள் மக்கள் இடையே செல்வாக்குப் பெற்றுப் பரவின.

ஐதராபாத் நகரை விட்டு பம்பாய் வந்தார். அங்கே 'தாஜ்மகால் மாளிகை' என்ற உணவு மனையில் தங்கினார். உலகளாவிய போக்கோடும், சிந்தனையோடும், தனது பொதுத் தொண்டு பற்றியும் இலக்கியச் சேவையைப் பற்றியும் சிந்தித்தார்.

அவரது ஆழ்ந்த கவனத்துக்குப் பம்பாய் நகரமே ஐதராபாத் நகரைவிட சிறப்பாக இருந்தது. காரணம், பல நாட்டு அறிஞர்களும், வணிக மக்களும், அரசியல் பணியாளர்களும், கட்சித் தலைவர்களும் நாள்தோறும் வந்து போகும் இடமாகப் பம்பாய் இருந்ததால், அவருக்கு பிறநாடுகளின் முக்கியஸ்தர்கள் தொடர்பும் ஏற்பட்டது.

அதே நேரத்தில் இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக உழைக்கும் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களின் சந்திப்பும் நட்பும்-தொடர்பும் ஏற்பட வசதியாகப் பம்பாய் நகரம் இருந்தது.

இதனால், கவிதைகள் எழுதிய நேரம் போக, மற்ற நேரங்களில் எல்லாத்துறை நண்பர்களையும், நாட்டு நடப்புக்களையும் அறிந்திட வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டார்.

பம்பாய் நகரிலே இருந்து வெளிவந்த இவரது கவிதை நூல்கள், பிறநாடுகளின் தொடர்பையும், நட்பையும் அவருக்கு உண்டாக்கியது. இவரது கவிதைப் புத்தகங்களைப் படித்து ரசித்த பன்னாட்டு அறிஞர்கள், கவிக்குயில் சரோஜினி ஷெல்லி, கீட்ஸ், டென்னிசன் போன்ற மேனாட்டுப் பெருங்கவிஞர்களது சிந்தனைகளோடு ஒப்பிட்டுப் பாராட்டி கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தார்கள். அதனால், அவருக்குக் கவியரசி என்ற பட்டத்தையும் அவர்கள் வழங்கிப் போற்றினார்கள்.

கவிதைகள் படைப்பால் உலகத்தையே ஈர்க்கலாம், வெல்லலாம், இறைவனையுமே வசப்படுத்தலாம் என்ற அவரது எண்ணத்திற்கேற்ப, பிற நாட்டு மேதைகள் அவருக்குக் கவியரசி என்ற பட்டத்தைத் தந்ததோடு இல்லாமல், 'கவிக்குயில்' என்ற பட்டத்தையும் வழங்கிப் பாராட்டலானார்கள்.

பம்பாய் மாநகர் வந்ததற்குப் பிறகு, கவிக்குயில் சரோஜினி தேவிக்கு உலகளாவிய பாராட்டும், பட்டங்களும் தேடிவந்தன; ரசிகர் பெருமக்களும் கவிகுயிலை நேரில்கண்டு பாராட்டிட வந்தவண்ணம் இருந்தார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சி கவிக்குயிலின் மக்கள் செல்வாக்கைக் கூர்ந்து கவனித்தது; தினந்தோறும் சரோஜினி பாடல்கள் ஏதாவது ஒரு நாட்டின், ஏதாவது ஒரு பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருப்பதையும் நோக்கமிட்டார்கள். அதனால், பிரிட்டிஷ் அரசு சரோஜினி தேவியின் புகழ் குவியும் துவக்கக் காலத்திலேயே அவரது அறிவையும், புலமையையும் பாராட்டிட முன்வந்தது.

இந்தியாவின் மாபெரும் கவிஞராக அப்போது போற்றப்பட்டு கொண்டிருந்த கவிஞர் இரவீந்த்ரநாத் தாகூருக்கு "கெய்சரீ ஹிந்த்" என்ற பட்டத்தைக் கொடுத்துப் பிரிட்டிஷ் அரசு பாராட்டியதைப் போல, அதே பட்டத்தை கவிக்குயில் சரோஜினிதேவிக்கும் அரசு சார்பாக வழங்கப்பட்டது. சரோஜினி தேவியின் புகழ் வெளி நாடுகளில் மென்மேலும் வளர்ந்து, உயர்ந்தது.

கவிக்குயில் சரோஜினி தேவிக்கு அரசு சார்பாகக் கெளரவித்து பட்டம் வழங்கி, பிரிட்டிஷ் அரசும் பெருமை தேடிக்கொண்டது குறிப்பிடத்தக்க ஒரு சம்பவமாகும்.