இயல் தமிழ் இன்பம்/புகு வாயில்

விக்கிமூலம் இலிருந்து

இயல் தமிழ் இன்பம் 1. புகு வாயில்'

முத்தமிழ் என மூன்று பகுதிகள் உடையதாகச் சொல்லப்பெறும் பரந்த-விரிந்த பெருமை தமிழ் மொழிக்கு உண்டு. திருவள்ளுவமாலையில் சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள கீழ்வரும் பாடலில் முத்தமிழைக் காணலாம்:

“மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும்-மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்” (10)

என்பது பாடல். அகத்தியனை ‘முத்தமிழ் முனிவன்’ எனக் காஞ்சிப் புராணம் (வீரராக-6) கூறுகிறது. மூன்றாம் வகுப்புப் பிள்ளைகள் படிக்கும் நல்வழி என்னும் நூலின் காப்புச் செய்யுளாக ஒளவையாரால் இயற்றப்பெற்றுள்ள,

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா”

என்னும் பாடலிலும், முத்தமிழ் என்னும் பொருளில் ‘தமிழ் மூன்று’ எனக் குறிப்பிடப் பெற்றுள்ளது. இன்னும் பல நூல்களிலும் முத்தமிழ் என்னும் வழக்காறு எடுத்தாளப்பட்டுள்ளது. மூன்று தமிழ் என்பன: இயல் தமிழ், இசைத் தமிழ், கூத்துத் தமிழ் (நாடகத் தமிழ்) என்பனவாகும்.

மக்கள் தொடக்கக் காலத்தில் வாயில் வந்தபடி இசைத்துப் பாடியிருப்பார்கள், இப்போதும் அறியாத தொழிலாளர்கள் பாடிக்கொண்டே தொழில் செய்வதைக் காணலாம். எனவே, இசைத் தமிழ்தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும்.

கண்டபடிப் பாடிக்கொண்டிருந்த மக்களுள், மகிழ்ச்சி மேலீட்டால் பலர் சேர்ந்து பாடியபடியே ஆடியிருப்பர். நாளடைவில் ஆடல் பாடலோடு பல கருத்துகள் கூறி நடித்தும் இருப்பர். இதுதான் கூத்துத் தமிழ் (நாடகத் தமிழ்) ஆகும். இசைத் தமிழ் முதலாவ தென்றால், கூத்துத் தமிழை இரண்டாவதாகக் கூறலாம்.

நாடைவில் வாழ்க்கை முறைகளையும் பல அறிவுரைகளையும் அமைத்துப் பாட்டு எழுதலாயினர். இலக்கியம் எனப்படும் இதுதான் இயல்தமிழ் ஆகும். பின்னர், இயல் தமிழை எவ்வாறு எழுதல் வேண்டும் என இலக்கணம் வகுத்தனர். இலக்கணமும் இயல் தமிழைச் சேர்ந்ததுதான். இந்த இயல் தமிழை மூன்றாவதாகக் கொள்ளலாம். ஆகவே, பல கருத்துகள் அமைந்த பாடல்களைப் பாடி ஆடுவதில் முத்தமிழ்க் கூறும் இருப்பதை அறியலாம்.

இயல் தமிழ் மூன்றாம் இடத்தைப் பெறினும், இசைத் தமிழிலும் கூத்துத் தமிழிலும் பல கருத்துகள் பொதிந்து கிடப்பதால், இசைத் தமிழிலும் கூத்துத் தமிழிலும் இயல் தமிழும் உள்ளது-அதாவது-இயல் தமிழ் இல்லாத இசைத் தமிழோ கூத்துத் தமிழோ இல்லை எனலாம்.

பண்டைக் காலத்தில் என்றென்ன! இக்காலத்தும் இலக்கிய விரிவுரையாற்றும் சிலர், பக்க இசை இயங் களுடன் பாடிக்கொண்டும், கைகால்-தலை ஆகியவற்றை அசைத்து ஆடிக்கொண்டும் சொற்பொழிவு செய்வதைக் காணலாம். எனவே, இயல் தமிழ் மற்ற இரண்டு தமிழ்க் கூறுகளிலும் ஊடுருவி இரண்டறக் கலந்துள்ளது என்பது புலனாகும்.

பொதுமக்கள் கூத்தையும் இசையையும் சுவைக்கும் அளவுக்கு, ஆடல் பாடல் இல்லாமல் விளக்கப்படுகின்ற இயல் தமிழாகிய இலக்கிய-இலக்கணங்களைச் சுவைப்பது குறைவுதான்.

உரைநடை எழுதப்படாத பண்டைக் காலத்தில், எழுதப்பட்டுள்ள இலக்கியங்களில் உள்ள பாட்டுகள், இன்றும் இசையுடன் பாடிக் காட்டி வகுப்புகளில் விளக்கப்படுவதை அறியலாம். பாடுவதே பாட்டு. எனவே, எல்லா இலக்கிய வகைப் பாடல்களுமே, கருத்துக்கு ஏற்ற மெய்ப் பாடுகளுடனும்-அதாவது-உறுப்புகளின் அசைவுடனும் உரிய இசையுடனும் பாடப்பட்டன என்பது புலனாகலாம். பாட்டுகளுக்குக் கருத்துக்கு ஏற்ற இசை அமைக்கப்பட்டதும் ஈண்டு எண்ணத்தக்கது.

பண்டு, பாட்டு எழுதிய அளவுக்கு உரைநடை இல்லை. பாடல்களை விளக்கும் உரை (நடை)களே இருந்தன. பிற்காலத்தில்-அதாவது-கடந்த இரண்டு நூற்றாண்டு காலமாகத் தமிழில் உரைநடை நூல்கள் எழுதப்படலாயின. இந்த உரைநடைகளும் இலக்கியம் என்னும் பெயரில் படித்துச் சுவைக்கப்படுகின்றன. உரைநடையில், புதினம் எனப்படும் தொடர் கதைகள் இப்போது பெற்றிருக்கும் இடம் மிகுதி.

‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்’ என்னும் முன்னோர் மொழிப்படி இலக்கணம் எழுந்தது. வாழ்க்கைக்கு வழிகாட்ட எழுந்த அறநூல்களைப் போல, மொழிக்கு (இலக்கியத்திற்கு) இலக்கண நூல்கள் தோன்றின. இலக்கணம் அறியாத கல்வியை ஒரு கல்வியாக அறிஞர்கள் கருதுவதில்லை. இங்கிலாந்தில் உள்ள தொடக்கப்பள்ளிகட்கு Grammar Schools (இலக்கணப் பள்ளிகள்) என்ற பெயர் சூட்டப்பட்டதாம்.

பல்வேறு தொழில் பள்ளிகளில் கற்றுத் தருவதற்காக எழுதப்படும் நூல்களையும் இயல் தமிழில் ஒருவிதமாக அடக்கலாம். பண்டு பல்வேறு தொழில்களையும் கலைகளையும் பற்றிய செய்திகளும் பாடல்களாகவே எழுதப்பட்டுள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

ஆடல் பாடல்களையே மிகுதியாகச் சுவைத்து வந்த மக்களிடையே, இயல் தமிழையும் சுவைக்கும் பழக்கம் இப்போது பெரிதும் காணப்படுகிறது. சிலருக்கு இட்லி-தோசைக்குத் தொட்டுக் கொள்ள, குழம்பு - சாம்பார் - கொசுத்து - கடப்பா - வெங்காயச் சட்னி கொத்துமல்லிச் சட்னி - தேங்காய்ச்சட்னி - சர்க்கரை - ஆகியவற்றுள் சில பிடிக்கலாம். இவ்வளவு இருப்பினும் பிடிக்காமல், மிளகாய்ப் பொடிமீது தீராக் காதல் கொண்டு கேட்டு வாங்கித் தொட்டுக் கொண்டு இணையிலா இன்பம் எய்துபவர் சிலரும் உளர். அதுபோல், பல்வேறு துறைகளில் இன்பம் காண்பவர்போல் இலக்கணத்தில் இன்பம் காணும் மேதைகளும் உளர், ‘சரியான முறையில் விளக்கப்படின், இலக்கிய இன்பத்திற்கு இலக்கணம் துணை செய்வதை அறிந்து சுவைக்க இயலும்.

எனவேதான், இந்த நூலில், அற இயல், வாழ்வியல், சமூக இயல், ஒருமைப்பாட்டு இயல்-கல்வி இயல், வழிபாட்டியல் முதலியவை தொடர்பான இலக்கிய விளக்கங்களும் உரைநடையில் தரப்பெற்றுள்ளன. இயல் தமிழ் இன்பம் பெறுவதற்காகவும், பெற்றுப் பின்பற்றுவதற் காகவும் எழுதப்பட்டதாதலின், இந்நூலுக்கு ‘இயல் தமிழ் இன்பம்’ என்னும் பெயர் சூட்டப் பெற்றுள்ளது.

அடியேனது இந்த நூலில் ஆய்வுக் கருத்துகள் சிலவும் எண்ணத்தைக் கிளறும் புதிய கருத்துகள் சிலவும் உள்ளன. அனைத்தையும் அறிஞர்களின் - தமிழ் அன்பர்களின் மதிப்பீட்டிற்கு விட்டு விடுகிறேன். நன்றி வணக்கம்.