இந்தியக் கலைச்செல்வம்/தென்னிந்தியக் கோயில் அமைப்பும் பண்பாடும் - மாளிகைகள்

விக்கிமூலம் இலிருந்து
14
தென்னிந்தியக் கோயில் அமைப்பும்
பண்பாடும் - மாளிகைகள்

ந்து ஆறு வருஷங்களுக்கு முன்பு நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்தேன். அப்போது கலைகளில் ஆர்வமுள்ள நண்பர் ஒருவர் என் வீட்டிற்கு வந்தார். அவரை அழைத்துக் கொண்டு தஞ்சைப் பெரிய கோயிலுக்குப் போனேன். உண்மையிலேயே அக்கோயில் பெரிய கோயில்தான். சோழ மன்னர்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ராஜராஜன் கட்டிய கோயில் அல்லவா அது? அகழி சூழ்ந்தும், அரணால் காக்கப்பட்டும், கோபுரம் வண்ண மாடங்கள் எல்லாம் ஓங்கியும் இருக்கும் அக்கோயிலில் கோளாந்தகன் திருவாசல், ராஜராஜன் திருவாசல் எல்லாம் கடந்து சென்றால் 500 அடி நீளமும், 250 அடி அகலமும் உள்ள வெளி முற்றத்திற்கு வந்து சேர்வோம். அங்குள்ள நந்தி மண்டபம், மகா மண்டபம் எல்லாம் கடந்துதான் கோயிலின் கருவறை வந்து சேரவேண்டும். அங்கு கோயில் கொண்டிருக்கும் பெருவுடையார் பெரிய உருவம் உடையவரே; 54 அடி சுற்றளவும், ஆறு அடி உயரமும் உள்ள ஆவுடையாரின் மேல் 17 அடி உயரத்தில் பெருவுடையார் உயர்ந்திருக்கிறார் என்றால் கேட்பானேன். இந்தக் கருவறைக்கு மேலே 216 அடி உயரத்தில் விமானம் உயர்ந்திருக்கிறது. அதனை ராஜராஜன் தட்சிண மேரு என்றே குறிப்பிட்டிருக்கிறான். இக்கோயில் அடி முதல் முடி வரை கல்லாலேயே கட்டப்பட்ட ஒன்று. விமானத்தின் மேல் வைத்திருக்கும் பிரமாந்திர தளக் கல் 25 சதுர அடியும், 80 டன் நிறையும் உடையது என்கிறார்கள். அதன் மேல் 12 அடி உயரமுள்ள பொன் போர்த்த ஸ்தூபி, ‘உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்’ என்று வள்ளுவர் வகுத்த வழி நின்றல்லவர் இக்கலைக் கோயிலை உருவாக்கி இருக்கிறான், ராஜ ராஜன்! கலை உலகில் தமிழன் எவ்வளவு உயர்ந்தவன் என்பதை அல்லவா இக்கோயில் இன்றளவும். பறை சாற்றிக் கொண்டு நிற்கிறது.

இத்தனை விவரங்களையும் நண்பருக்கு எடுத்துச் சொன்னேன். கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் பண்ணித் திரும்பும்போது நண்பர் கேட்டார்: “இறைவனுக்கு என்று இத்தனை பெரிய கோயிலைக் கட்டிய ராஜ ராஜன் தனக்கு என்றும் ஒரு மாளிகை அரண்மனை கட்டியிருக்க வேண்டுமே? அந்த அரண்மனை எங்கிருக்கிறது? அதையும் பார்த்து விடுவோமே” என்றார். நான் அவருக்கு என்ன சொல்ல, எதைக் கொண்டு காட்ட? ராஜ ராஜன் மாத்திரம் என்ன, அவனுக்கு முன்னும் பின்னும் இருந்த சோழ அரசர்களும் தங்களுக்கு என்று ஒரு அரண்மனை கட்டிக் கொள்ளவில்லையே. ஏதோ ராஜ ராஜனது சகோதரர் ஆதித்த கரிகாலன் காஞ்சியில் பொன் மாளிகை ஒன்று கட்டினான் என்றும், அங்குதான் ராஜ ராஜன் தந்தையாம் சுந்தரசோழன் உயிர்நீத்து, பொன் மாளிகை துஞ்சிய தேவன் என்றும் பெயர் பெற்றிருக்கிறான் என்று சரித்திர ஆசிரியர் கூறுவர். காஞ்சிக்கே போய் இந்தப் பொன் மாளிகையைத் தேடி அலைந்தேன். அங்கும் பொன் மாளிகையையும் காணோம், மண் மாளிகையையும் காணோம். இன்னும் பழையாறைப் பட்டீச்சுரம் என்ற வட்டாரத்தில் சோழ மாளிகை என்று ஒரு கிராமமே இருக்கிறதே என்று கேள்விப்பட்டு, அங்கு நல்ல உச்சி வெயிலில் சென்று சோழ மாளிகையைத் தேடினேன். இந்த முயற்சியும் கானல் நீராகவே முடிந்தது. சொல்லப்போனால், இந்தச் சேர சோழ பாண்டியர்கள், அவர்களை எல்லாம் முந்திக் கொண்டு கோயில் கட்ட முனைந்த பல்லவ மன்னர்கள் எல்லாம் தங்கள் தங்களுக்கு என்று மாளிகைகளே கட்டிக் கொள்ளவில்லை போலிருக்கிறது. எல்லாத் தமிழ் மன்னர்களும் எல்லாம் வல்ல இறைவனுக்குக் கோயில் கட்ட முனைந்திருக்கிறார்களே அன்றித் தங்களுக்கு என்று மாளிகையோ, அரண்மனையோ கட்டிக் கொள்ளவில்லை என்று அறிகிறபோது அவர்கள் நம் உள்ளத்தில் எவ்வளவு உயர்ந்து விடுகிறார்கள்! நித்யத்வம் பெறாத மனிதனுக்கு அரசனேயானாலும், மாளிகை எதற்கு என்றல்லவா எண்ணிவிட்டார்கள். என்றும் நித்தியனாய் இருக்கும் இறைவனுக்கே கோயில்கள் கட்டி, கலை உலகில் நித்யத்வம் பெற்று விட்டார்கள் இவர்கள்.

இந்தத் தமிழ் மன்னர்களுக்குப் பின் தமிழ் நாட்டை ஆளவந்த விஜய நகரத்து நாயக்க மன்னர்களே கோயில்கள் கட்டுவதோடு மாளிகைகளையும் கட்டியிருக்கிறார்கள். அப்படி அவர்கள் கட்டிய கைகளில் ஒன்றிரண்டே இன்று தஞ்சையிலும், மதுரையிலும் நாயக்க மன்னர் மாளிகைகளாகக் காட்சி தருகின்றன. இந்த மாளிகைகளைப் பற்றித் தெரிவதற்கு முன்னாலே நமது பழைய இலக்கியங்களில். சிற்ப சாஸ்திரங்களில் இந்த மாளிகை நிர்மாணத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்தானே?

சங்க இலக்கியங்களைப் புரட்டினால் அங்கெல்லாம் இயற்கை அழகையும், இறைவன் நிறைவையும், ஆடவர் இயல்பையும், மகளிரது. ஒழுக்கத்தையும், அரசர்களது கொடையையும், வீரத்தையும், பெரியோரது சான்றாண்மையையும் குறித்துப் பெரிதும் பேசப்பட்டிருத்தல் காண்போம். மன்னர்களது வாழ்வினைக் குறிக்கும்போது அவர்கள் வாழ்ந்த இடங்களையும் குறித்திருக்கிறார்கள் என்றாலும், பெரிய மாளிகைகளைப் பற்றி விரிந்த விளக்கங்கள் கிடைப்பதில்லை. பஞ்ச காவியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் ஆடகமாடமும், தானிய மாளிகையும் வர்ணிக்கப்படுகிறது. இதில் கூட, ஆடகமாடம் திருவனந்தபுரத்திலுள்ள அனந்த சயனரது கோயிலாகவே இருக்க வேண்டும் என்பர் ஆராய்ச்சியாளர்.

ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த

என்றும்,

ஆடகமாடத்து அரவணை கிடந்தோம்
சேடக்குடும்பியின் சிறுமகள் ஈங்கு உளள்

என்றுமே குறிக்கப்படுகிறது. இவற்றைப் பற்றி எல்லாம் ஆராய்ந்த அறிஞர்கள் ஆடகமாடம் தன்னகத்கே திருமால் கோவிலைக் கொண்ட அரண்மனையின் ஒரு பகுதியே என்று முடிவு கட்டுகின்றனர். இன்னும் ஆடகமாடம் என்பது அரண்மனை மாதர் உறையும் அந்தப்புரம் என்றும் கூறுவர். இதற்கு ஆதாரமாக,

வேடகம் சேர்ந்த வெங்கானம்
விடலைபின் மெல்லடிமேல்
பாடகம் தாங்கி நடந்தது
எவ்வாறு கொல்? பாழிவென்ற
கோடக நீள் முடிகோன்
நெடுமாறன் தென் கூடரின் வாய்
ஆடமாடம் கடந்தறியாத
என் ஆரணங்கே

என்ற இறையனார் அகப்பொருள் பாடலையும் சான்று காட்டுவர். இப்படியே அரண்மனையின் ஒரு பகுதியை தமனிய மாளிகை என்றும், கனக மாளிகை என்றும் குறிக்கின்றனர், வடநாடு சென்று, ஆரிய அரசரை வென்று, கனக விஜயர் தலையில் பத்தினிக் கடவுளின் திருவுருவம் சமைக்க கல்லை ஏற்றி வஞ்சி நகருக்கு வெற்றியோடு திரும்பும் சேரன் செங்குட்டு வனை எதிர்கொண்டழைக்க அரசி அரண்மனைப் பகுதிகளைக் கடந்து வந்தனள் என்பர் இளங்கோவடிகள்.

படுதிறை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்து
இடைநின்று ஓங்கிய நெடுநிலை மேருவிற்
கொடி மதில் மூதூர் நடுநின்று ஓங்கிய
தமனிய மாளிகைப் புனைமணி அரங்கின்

வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதியோர். வண்ணம் காணிய வருவழி

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இக்கனக மாளிகையில் கிடந்த கட்டிலையும் விட்டு விடவில்லை அடிகளார்.

கதிர் செலவு ஒழித்த கனகமாளிகை
முத்து நிரைக் கொடித் தொடர் முடுவது
வணைகிய
சித்திர விதானத்து, செப்பூங்காவின்
இலங்கு ஒளி வைரமொடு பொலந்தகடு போகிய
மடையமை செறுவின் வான் பொற்கட்டில்
புடைதிறை தமனியப் பொற்கால் அமளி

என்றே விளக்கமாக உரைப்பார்.

இப்படித்தான் ஆடகமாடமும் கனகமாளிகையும் குறிக்கப்படுகிறது சிலப்பதிகாரத்தில், மேலும் செங்குட்டுவன் ராஜ சூய யாகம் செய்ய முனைந்தபோது, எல்லா வசதிகளும் நிறைந்த வேள் ஆவிக்கோ மாளிகை ஒன்றையும் குறிப்பிடுகிறான். இது ஆவிக்கோ என்ற பிரபுவின் மாளிகையாக இருக்க வேண்டும் என்றும் கூறுவர். இவ்வண்ணமே மாளிகைகளைப் பற்றிய தகவல்கள் பழம் பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்தில் கிடைக்கின்றன நமக்கு.

கவிச்சக்கரவர்த்தி கம்பனது இராம கதையைப் புரட்டினால், அயோத்தி நகர மாளிகைகளின் வர்ணனைகளைப் பார்க்கலாம். ‘திங்களும் கரிது என, வெண்மை தீற்றிய சங்க வெண் சுதை உடைத் தவள மாளிகையை’ வர்ணிப்பான் ஒருதரம். ‘புள்ளி அம்புறவு இறை. பொருந்தும் மாளிகை தள்ள அரும் தனியத் தகடு வேய்ந்திருந்தது' என்பான் மறுதரம். இன்னும் இம்மாளிகைகள் ‘சந்திர காந்தத்து தாளம் வேய்ந்து, பந்திருக்க தூண்கள் பவளப் போதிகை ஏந்தி நின்றன’ என்பான். அயோத்தியைவிட்டு இலங்கைக்கு வந்தாலோ,

பொன் கொண்டு இழைத்த
மணியைக் கொடு பொதிந்த
மின் கொண்டமைத்த
வெயிலைக் கொடு சமைத்த
என் கொண்டியற்றிய
எனத் தெரிகிலாத
வன் கொண்டல் விட்டு
மதி முட்டுவன மாடம்

என்றே வர்ணிக்க முற்பட்டு விடுவான்.

இலக்கிய உலகில் இருபெரும் புலவர்களாம் இளங்கோவும் கம்பனும் குறிக்கின்ற மாளிகையைப் பார்த்தோம். இனி விஸ்வகர்ம வாஸ்து சாஸ்திரத்தில் இம்மாளிகை அமைப்பு எப்படி இருக்கிறது என்றும் பார்த்துவிடலாமே! அரசர்கள் வசிக்கத் தகுந்த அரண்மனைகள், மற்ற பிரமுகர்கள் வசிப்பதற்கென கட்டும் மாளிகைகள் என்று இரண்டு பிரிவில் இக்கட்டிடக் கலை விவரிக்கப்பட்டிருக்கிறது. அரண்மனைகள் நகர மத்தியில் அல்லது அதற்கென ஒதுக்கப்பட்ட தனி இடத்தில் கட்டப்பட வேண்டும். அநேகமாக அரண்மனை சதுரமாகவே இருத்தல் வேண்டும். நீண்ட சதுரமாகவும் இருக்கலாம். நகரத்தின் அளவில் எட்டில் ஒரு பங்குக்கு மேற்படாத எல்லைக்குள்ளே தான் கட்டப்பட வேண்டும். நீள அகலம் 500 தண்டங்களுக்கு, அதாவது ஆயிரம் கெஜத்துக்கு மேற்பட்டிருத்தல் கூடாது, கட்டிடத்துக்கு மாடிகள் இருக்கலாம். விசாலமான கூடங்களும், அரண்மனைக் கட்டிடத்திற்கு முன்னாலே அகன்ற முற்றமும், அரண்மனை வாயிலில் ஒரு பெரிய போர்டிகோவும் அமைத்தல் வேண்டும். அரண்மனையின் உள்ளே விசாலமான, பெரிய பெரிய அலங்காரத் தூண்களோடு கூடிய, வரவேற்பு மண்டபம் இருக்க வேண்டும். கல்லிலோ மரத்திலோ அல்லது சுதையிலோ செய்த தூண்களாக இருக்கலாம். அங்கு கண்ணாடிகள், ஆசனங்கள் எல்லாம் சிறப்பாக அமைய வேண்டும். சிம்மாசனத்தைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். ஏழு வகை சிம்மாசனங்கள் வர்ணிக்கப்படுகின்றன. சிம்மாசனம், பத்ராசனம், கூர்மாசனம், வீராசனம், மனாசனம், விஜயாசனம், பாண்யாகாசனம் என்பவை அவை. சிம்மாசனத்தின் கைபிடிகள், பிரபாவலி எல்லாம் சிறந்த வேலைப்பாடு உடையனவாக இருத்தல் வேண்டும். அடுத்து முக்கிய கவனம் செலுத்த வேண்டுவது அரண்மனைப் பெண்கள் தங்கும் அந்தப்புரம். அங்கு அமைக்கும் ஜன்னல்கள் எல்லாம் உள்ளேயிருந்து. வெளியே நடக்கும் காரியங்களைப் பார்க்கக் கூடியவைகளாகவும், வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளே இருப்பவர்களைக் காண முடியாத வகையிலும் அமைந்திருக்க வேண்டும். இப்படி ஒன்பது வகை சன்னல்கள் சாளரங்கள் அமைப்பது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. பத்ம பத்ரம், கஜநேத்ரம், கடம், தனுபாதம், மிருசிநேத்ரம், பர்வதம், சுகநாசம், பஹீரந்திரம், துர்காஸ்யம் என்பன அவை. இன்னும் படுக்கை அறைகளைப் பற்றியும் விரிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அவை அரண்மனைக் கட்டிடத்தின் முன் பகுதியிலேயே இருக்கலாம். வேனல் காலத்தில் குளிர்ச்சி உடையதாகவும், குளிர் காலத்தில் வெப்பமுடையதாகவும் இருக்க வேண்டும். ஆம்; Air Condition எல்லாம் பண்ணத் தெரியாத காலத்தில் எழுதி வைக்கப்பட்டதல்லவா இது. சன்னல்கள், கட்டில்கள், மெத்தைகள், விரிப்புகள், விளக்குகள் எல்லாம் எப்படி எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் விஸ்தாரமாகவே கூறப்பட்டிருக்கின்றன. அரண்மனையில் வஸந்த மாளிகை என்ற பகுதியும் இருத்தல் வேண்டும். இதுதான் அரசர்களது ‘சம்மர் ரிஸார்ட்.’ அரண்மனை வாயில்கள் எவ்வளவு சிறப்பாக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா? நன்கு அகன்று உயர்ந்து சிறந்த வேலைப்பாடுகளுடன் அமைய வேண்டும். பன்னிரெண்டு வகை வாயில்களைப் பற்றி வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. லக்ஷ்மி துவாரா, கந்தர்வ துவாரா, விஸ்வதர்ம துவாரா, வைசிராவண துவாரா, வகுண துவாரா, வாசவ துவாரா, சங்கர துவாரா, விஷ்ணு துவாரா, பிரம்ம துவாரா, ஆரிய துவாரா, சந்திர துவாரா, ரிஷி துவாரா என்பவை அவை. எந்த எந்தப் பகுதிக்கு எந்த எந்த வாயில்கள் அமைக்க வேண்டும் என்றும் நியதி உண்டு. இவைகளை விவரிப்பது இந்தக் குறைந்த காலத்தில் இயலாத காரியம். பிரதான வாயில்களில் எல்லாம் வெள்ளித் தகடு, பொன் தகடு போர்த்தலாம். சிறந்த வேலைப்பாடுகளையும் செய்யலாம். வாயில்களின் பேரில். அமைக்கும் தோரணங்களில் தான் எத்தனை எத்தனை வகை. அரண்மனை அமைப்புக்களைப் பற்றி மானசாரம், காஸ்யப், சில்பம், மாய மதம், நாரத சில்ப நூல்கள் விரிவாகக் கூறுகின்றன, அவகாசமுள்ளவர்கள், ஆர்வமுள்ளவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம். அரண்மனையை அடுத்தே வங்கி என்னும் பெயரில் சேனாதிபதியின் மாளிகையும் அமைத்தல் வேண்டும். அரண்மனை வைத்தியர்கள், புரோகிதர்களுக்கும் தனிக் கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும். நியாயஸ்தலம் கூட அரண்மனைக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே இருப்பது நல்லது. ஈசான திசையிலே அரண்மனையைச் சேர்ந்த தனிக் கோயில் எழ வேண்டும். இன்னும் கஜானா, காவற்கூடம், யானை கட்டுந்தறி, குதிரை லாயம், ஏனைய பிறவும் இருத்தல் வேண்டும். இத்தனையையும் சுற்றி ஒரு கோட்டை அக்கோட்டையைச் சுற்றி ஒரு அகழியும் அமைக்க வேண்டும். கோட்டைச் சுவர்கள், வாயில்கள், காவலாளர் தங்குமிடம், அகழியின் பேரில் உயர்த்தவும் தாழ்த்தவும் கூடிய தொங்கு மரப் பாலங்கள் அமைத்தல் எல்லாவற்றைப் பற்றியும் கூறப்பட்டிருக்கின்றன.

அரண்மனைகளைத் தவிர மற்ற மாளிகைகள் கட்டுவதைப் பற்றியும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. சாதாரண மாளிகையை பவனம் என்றும், கொஞ்சம் பெரியதை ஹர்மயம் என்றும் மிகப் பெரியதை பிரசாதம் என்றும் அழைத்திருக்கிறார்கள். தேவப் பிரசாதம் என்றால் கோயில் என்று பொருள்படும் என்பதையும் அறிகிறோம். அரண்மனைகளை விவரித்தது போலவே மாளிகைக் கட்டிட நிர்மாணமும் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த அரண்மனை மாளிகைக் கட்டிட நிர்மாணத்தை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு செஞ்சிக் கோட்டையில் உள்ள அரண்மனைகள், மாளிகைகள், கல்யாண மகால்களைப் பார்க்கலாம். கன்யாகுமரி மாவட்டத்திலே உள்ள பழைய பத்மநாபபுரம் அரண்மனையையும் அதையடுத்த மாளிகைகளையும் பார்த்துத் தெரிய வேண்டியவைகளைத் தெரிந்து கொள்ளலாம். மைசூரில், திருவனந்தபுரத்தில், புதுக்கோட்டையில் கட்டியிருக்கும் அரண்மனைகள் எல்லாம் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டின் கட்டிடக் கலைச் சிறப்பைக் காட்டுவன. பழைய கட்டிடக் கலை நிாமாணத்திற்கு எடுத்துக் காட்டாக இலங்குபவை அல்ல.

இவைகளைத் தவிர, இன்று நம் கண் முன் நிற்கும் ஒரு சில மாளிகைகள், நாயக்க மன்னர்கள் கட்டிய மாளிகைகள். இவைகளைப் பற்றிக் கூறாவிட்டால் இந்தப் பேச்சு பூரணத்வம் பெற்றதாகாது. சேர சோழ பாண்டியர்கள், பல்லவ மன்னர்கள் எல்லாம் கோயில்களைத் தேவப் பிரசாதமாகக் கட்டி முடித்தார்களே ஒழிய, தங்களுக்கும் தங்கள் சந்ததிக்கும் தனி மாளிகை, கட்டிக் கொள்ளவில்லை என்பதையும் அறிகிறோம். ஆனால், பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்கள் கோயில்களைக் கட்டியதோடு, கோயிலுக்கு கோபுரம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம் எல்லாம் அமைத்ததோடு, தங்களுக்கு மாளிகைகளும் கட்டத் தவறவில்லை. இவர்கள் கட்டிய அரண்மனைகளும், மாளிகைகளும் இன்றைய மைசூர், பரோடா, ஜெய்ப்பூர், உதயப்பூர் முதலிய மன்னர்கள் கட்டியிருப்பவைகளைப் போல பெரிய மாளிகை அல்லதான்.

இந்திய நாட்டிலேயே மொகலாய மன்னர்கள் காலத்தில்தான் இந்த மாளிகை கட்டும் கலை சிறப்பாக வளர்ந்திருக்கிறது. காதற் கனவான தாஜ்மகால் ஆக்ராவிலும், செங்கோட்டை டில்லியிலும் அங்கிருந்து அரசாண்ட அந்த மன்னர்களின் கலை ஆர்வத்திற்கு இன்றும் சான்று பகர்கின்றன. இவைகளை எல்லாம் இந்தியப் பண்பாட்டிற்கு எடுத்துக்காட்டாகக் கூற முடியாது. இவர்கள் கையாண்ட முறையெல்லாம் சார் சானிக் பாணி என்பார்கள். தமிழ்நாட்டில் இருந்த நாயக்க மன்னர்கள், இந்தியப் பாணியையும் சார் சானிக் பாணியையும் கலந்தே தம் மாளிகைகளை அமைத்தார்கள். இந்த முறையில் அமைத்த மாளிகைகளில் நம் கண் முன் இன்றிருப்பவை எல்லாம் தஞ்சை அரண்மனையும், மதுரை திருமலை நாயக்கர் மகாலும்தான். தஞ்சை அரண்மனைக்குள் நுழைந்ததும் நாம் காண்பது கோணலும் மாணலுமான அறைகளும், அழகே இல்லாத வளைவுகளும் (ஆர்ச்சுகளும்) தான். வெளி முற்றத்தைக் கடந்து அரண்மனை தர்பார் ஹாலுக்குப் போகுமுன், ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி அதைச் ‘சோழபங்க்’ என்பார்கள். இருட்டடித்துக் கிடக்கும். அந்த அறை சோழ சாம்ராஜ்யத்துக்கோ அல்லது புகழ் பெற்ற சோழ மன்னர்களுக்கோ பெருமை தருவதாக இல்லை. தர்பார் ஹால் வேண்டுமானால் பார்க்கத் தகுந்ததாக இருக்கும். நாயக்க மன்னர்களில் பிரசித்தி பெற்ற ரகுநாத நாயக்கர். சேவப்ப நாயக்கர், விஜயராகவ நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இவர்களில் விஜயராகவ நாயக்கர் சோழர் அடியொற்றி பழையபடி கோயில்கள் கட்டுவதிலேயே முனைந்திருக்கிறான். மாயூரத்து புஷ்ய மண்டபம், திருவிடை மருதூரில் வீர சோழன் ஆற்றங்கரையில் கட்டப்பட்ட மண்டபம், மன்னார்குடி ராஜகோபாலன் கோயில் மண்டபங்கள் எல்லாம் இவன் கட்டியவையே என்று சரித்திரம் கூறும். தஞ்சை அரண்மனையில் உள்ள காவல், கூடமும் எழு நிலை மாடமும் கம்பீரமானவை. இவைகளை எல்லாம் தூக்கி அடிப்பதே அங்குள்ள சங்கீத மகால். சேவப்ப நாயக்கர் காலத்தில் கட்டப் பட்டிருக்க வேண்டும். மைக் முதலிய கருவிகளின் துணையில்லாமலேயே ஹால் முழுவதும் ஒருபடித்தாய் இசை கேட்கும் முறையில் கட்டப்பட்டிருக்கிறது. ரகுநாத அத்பூதயம் என்ற நூலிலே இம்மாளிகையின் வனப்பு பலப்படப் புகழ்ந்து பேசப்பட்டிருக்கிறது. கட்டிடக் கலையில், அதிலும் சினிமாக் கொட்டகை கட்டும். கலையில் ஆர்வம் உடையவர்கள் சென்று காண வேண்டிய ஒன்று.

மதுரை திருமலை நாயக்கர் மகாலைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். பெரிய பெரிய பிரமாண்டமான தூண்கள், அழகான ‘ஆர்ச்சுகள்’, விதானங்கள் எல்லாம் அமைந்தவை. மதுரை மீனாட்சி கோயிலை விரிவு செய்து புது மண்டபம் முதலியனை கட்டும்போதே இந்த மஹாலையும் திருமலை நாயக்கன் கட்டியிருக்க வேண்டும். பதினேழாம் நூற்றாண்டின் கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இவற்றை எல்லாம் பார்த்த பின்தான் இன்று கட்டிடக் கலை எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறது என்பது தெரியும், சிமெண்டும். கர்டரும் கான்கிரீட்டும் வைத்து மொட்டை மொட்டையாய் கட்டடம் கட்டவே கற்றிருக்கிறார்கள் நமது கொத்தர்கள். பழைய பாணிகள் இவர்களுக்கு அழகாகப்படுவதில்லையோ, அல்லது கட்டும் திறமையை இழந்துவிட்டார்களோ அறியோம். கலை அழகோடு கூடிய பழைய பாணியையும் புதிய முறைகளையும் கலந்து கையாளத் தெரிந்தால் கட்டிடக் கலை வளரும். வளர வேண்டும் என்றே தமிழர்கள், தமிழ்க் கலைஞர்கள் விரும்புகிறார்கள்.