லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/டால்ஸ்டாயின் 80-வது ஆண்டு விழா

விக்கிமூலம் இலிருந்து

டால்ஸ்டாயின் 80-வது ஆண்டு விழா

னித நேய மகான் டால்ஸ்டாயிக்கு எண்பதாவது வயது பிறந்த நாளை ருஷ்ய மக்கள் மிகக் கோலாகலமாகக் கொண்டாட எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். ஆனால் ஜார் மன்னனது ஆட்சி அந்த விழா நடைபெற விடாமல் தன்னால் இயன்ற தடைகளை எல்லாம் செய்தது. பொது மக்கள் அந்தத் தடைகளை மதிக்கவில்லை.

வயது முதிர்ந்து விட்ட ஒரு மூதறிஞர் விழாவுக்கு அரசு தடை செய்வதா? என்ற மன எரிச்சலோடு அந்த விழாவை முன்னிட்டு ஊர்வலங்களையும், பொதுக் கூட்டங்கயையும் ருஷ்ய நாடெங்கும் மக்கள் விமரிசையாக நடத்தினார்கள். வீதிக்கு வீதி டால்ஸ்டாயின் அரும் பெரும் சமூக சேவைகளை விளக்கிப் பேச விழாக்களை நடத்தினார்கள் அவரால் எழுதப்பட்ட “இன்ப ஒளி” நாடகத்தை நடத்தி அதன் பெருமையைப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

ருஷ்ய நாட்டிலே மட்டுமல்ல, ஐரோப்பாவிலே உள்ள நாடு நகரங்கள் எல்லாம் டால்ஸ்டாயின் பிறந்த நாளைப் பெருமையாக நடத்திப் போற்றின. தொழிலாளர்கள், பொதுமக்கள், மாணவமணிகள், பிரபுக்கள், அறிஞர் பெருமக்கள் அனைவரும் இந்த விழாக்களிலே கலந்து பாராட்டினார்கள்.

டால்ஸ்டாய்க்கு எண்பது வயதாகிவிட்டது. ஆனாால், ஜார் மன்னன் ஆட்சிக்கு மக்கள் இடையே எதிர்ப்பு முதிர்ந்து வலுப்பெற்ற வந்ததனை அந்த விழா உணர்த்திற்று. ஏனென்றால், பல நூற்றாண்டுகளாக நடந்து வந்த ஜார் மன்னன் பரம்பரையினுடைய கொடுங்கோல் ஆட்சி இந்த விழாவிலும் பல முட்டுக்கட்டைகளை போட்டது. இந்த அநீதியான ஆட்சியின் அவலச் செயல்களைப் பார்த்து டால்ஸ்டாய் துன்புற்றார்.

பொது மக்களை ஜார் ஆட்சி திடீர் திடீரென்று கைது செய்து சிறையிலே அடைத்தது. மக்கள் சிலரைத் தூக்கு மேடைகளுக்கும் அனுப்பியது; சைபீரியக் குளிர் காடுகளுக்கு மக்களை நாடு கடத்தியது. இந்த அக்கிரமக் கொடுமைகள் ஜார் ஆட்சியில் வழக்கமாக நடைபெறும் சம்பவங்கள்தான். அந்த அநீதிச் செயல்கள் ஒரு மூதறிஞரது விழாக்களிலும் கூடவா நடத்தப்பட வேண்டும் என்ற கேள்விகளை கல்விமான்கள் அறிக்கைகள் மூலமாகக் கேட்டு எதிர்ப்புக்களை எழுப்பினார்கள். அதனால் டால்ஸ்டாயிக்கும் மனம் பொறுக்க முடியவில்லை.

ஐரோப்பிய நாடுகளிலே இருந்து வெளியான புகழ் பெற்ற பெரிய பத்திரிகைகள் எல்லாம் இந்தக் கண்டனங்களை எழுப்பின. டால்ஸ்டாயும் ஜார் ஆட்சியின் கொடுமைகளை, விழா நேரத்திலே விழாவின் பெயரால் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விடுவதா என்று கடிதங்கள் மூலமாகக் கண்டித்தார். இதனால், ஐரோப்பிய நாடுகளிலே ஜார் ஆட்சிக்கும் துர்நடத்தைகளுக்கும் மேலும் இகழ்வுகளே உருவாகி, கெட்ட பெயரை ஏற்படுத்தின. எனவே, நாட்டிலே நடைபெறும் இந்தச்சம்பவங்கள் எல்லாம் கண்டு டால்ஸ்டாய் வேதனைகளை அடைந்தார்.

நாட்டின் நிலைதான் இவ்வாறு இருந்தது என்றால், தனது வீட்டின் சூழலாவது அமைதியாக இருந்ததா எனில் இல்லை. அவரது மனைவி பணத்தாசையால் அவர் மனதை நாள்தோறும் வருத்தி வந்தாள். இத்தனைக்கும் டால்ஸ்டாயின் மனைவி படித்தவள்; நாட்டுக்கு அவர் செய்து வந்த பணிகளில் சமபங்குடன் ஒத்துழைத்து வந்தாள். ஆனாலும், அவர் ஏன் மக்களுக்காக இப்படியெல்லாம் சேவை செய்கிறார் என்ற எண்ணத்தை அவளால் புரிந்து கொள்ள முடியாததால் அவரை இவ்வாறெல்லாம் வேதனைப் படுத்தி வந்தாள்.

டால்ஸ்டாய் பணத்தை மதிப்பவர் அல்லர்; மக்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதிலே நாட்டம் கொண்டவர் அவர். பண ஆசையும், வெறியும் அவர் மனைவிக்கு அளவுக்கு மீறி இருந்தது. அதனால் மக்களுக்கு அவர் செய்யும் தியாகத்தின் அருமை அவளுக்குத் தெரியவில்லை. அவருடைய இரக்க குணமும், மனிதாபிமானமும் அவளுக்கு மன எரிச்சலை உருவாக்கிவிட்டன.

தனது சொத்துக்களை எல்லாம் டால்ஸ்டாய் மக்கள் தொண்டு என்ற பெயரில் வீணாகச் செலவழித்து விடுவாரோ, பிறகும் தானும் தனது பிள்ளைகளும் அனாதையாக வாழும் நிலை ஏற்பட்டு விடுமோ என்ற கவலை அவளை நாள் தோறும் அரித்துக் கொண்டே வந்தது. ஆனால் அவருடைய மனைவியும் மக்களும் தங்களது பணத்தைக் கண்டபடி செலவு செய்து பாழ்படுத்தி வந்தார்கள். இவற்றைக் கண்ட அவர் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினார். வீட்டை விட்டு எங்காவது அவர்களுடைய பார்வையில் படாமல் போய்விடலாமா என்று அடிக்கடி யோசித்து வந்தார்.

வீட்டில் மனைவி மக்கள் நடந்து கொள்ளும் போக்கு அவருக்கு ஒத்துவரவில்லை. கணவன் தான் கூறுகின்றபடி நடக்க வேண்டும் என்பது அந்த அம்மையாரின் ஆசை. ஆனால், அவர் மனச் சாட்சி என்ன சொல்கின்றதோ அதற்கேற்ற படி நடந்து வந்தார். இதனாலே இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அடிக்கடி ஏசிப்பேசி மன எரிச்சல் அடைந்து வந்தார்கள்.

டால்ஸ்டாய் எழுதிய புத்தக விற்பனை உரிமைகள் எல்லாம், தனக்கும் - தனது மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அவரது மனைவி அவரைக் கேட்டுத் தினந்தோறும் நச்சரித்தாள். ஆனால், அவர், தனது நூல்களது விற்பனைப் பணமெல்லாம் நாட்டின் ஏழை மக்களுக்குப் பயன்பட வேண்டு என்று விரும்பினார்.

இதனால், கணவன் மனைவி இடையே சச்சரவுகள் வலுத்து. கலவரம், ரகளை, குடும்பப் போராட்டம், அக்கம் பக்கம் வாழ்வோர் பஞ்சாயத்து போன்ற அவல நிலைகள் உருவாகின.

தனது குடும்ப மானம் மற்றவர்களிடம் அடிபடுகின்றதே என்ற கோபம் டால்ஸ்டாயிக்கு மானம் போனாலும் பரவாயில்லை, பணம் தன்னிடமே இருக்கவேண்டும் என்ற பேராசைக் குணம் அவளிடம். ஆனாலும் மனைவியின் ஆணவத்துக்கும் ஆர்ப்பாட்ட ஆத்திரத்துக்கும் சண்டை சச்சரவுக்கும், அழுகுரல் ஒப்பாரிக்கும் டால்ஸ்டாய் அடிபணியவில்லை. இதனுடைய உச்சக்கட்டமாக அவள் பிள்ளைகளையும் சாகடித்து விட்டுத் தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினாள்; பயமுறுத்தினாள். ஆனாலும் அக்கம் பக்கத்தார் இருவருக்கும் புத்திமதியும் ஆறுதலும் கூறினார்கள். தனது குடும்ப கெளரவம் இவ்வளவு கேவலச் செயலுக்கு வந்த பிறகு, இதற்குமேல் இவளுடனும், பிள்ளைகளுடனும் இணைந்து வாழ வேண்டுமா? என்ற முடிவுக்கு வந்தார் டால்ஸ்டாய். அதனால், தனது தாய் நாட்டையும், குடும்பத்தையும் விட்டு விட்டு மனம் போனபடி எங்கேயாவது வெளியேறி விட வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.