பாபு இராஜேந்திர பிரசாத்/விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

விக்கிமூலம் இலிருந்து
2. விளையும் பயிர்
முளையிலேயே தெரியும்

பீஹார் மண்ணில் இராசேந்திர பிரசாத் பிறப்பதற்கு முன்பு அவரது முன்னோர்கள் இந்தியாவின் முக்கிய மாநிலமான உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்து பீகாரில் குடியேறினார்கள். பீகாரில், சார்ண் என்ற மாவட்டத்தில் ஜீராதேயி என்ற கிராமத்தில் அவர்கள் வசித்து வந்தார்கள்.

இராஜேந்திர பிரசாத் பாட்டனார், ஜீராதேயீ கிராமத்துக்கு அருகிலே உள்ள ஹதுவா என்ற சிறு சமஸ்தானத்தில், திவானாகப் பணியாற்றி வந்தார். இவர், புள்ளிக் கணக்கில் வல்லவராக இருக்கும் கணக்குப் பிள்ளை குலத்தில் பிறந்தவராதலால், எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவராக விளங்கியதால், தனது திவான் பணியை ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் செய்து, மக்களிடையேயும், சமஸ்தானத்திலும் புகழ் பெற்றவராக இருந்தார். அவர்களுள் ஒருவரான மகாதேவ சகாய் பெரிய பணக்காரர் அல்லர். ஆனால், ஏழையும் அல்லர்! விளை நிலங்கள் ஓரளவு இருந்தன. ஆனால் வழிவழியாக செல்வாக்குடன் அந்த சமஸ்தானத்திலேயும் கிராமத்திலேயும் பணியாற்றி வாழ்ந்தவர்களாவர்.

மகாதேவ சஹாயருக்கு மகேந்திர பிரசாத் என்ற மகனும், அவருக்குப் பிறகு மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தன. கடைசியாக, இரோஜேந்திர பிரசாத் என்ற ஆண் குழந்தை 1884 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி பிறந்தார்.

இரோஜேந்திரர் தந்தைக்கு மாந்தோப்புகள் சில இருந்தன. நிலங்களில் தானிய வகைகளைப் பயிரிடுவார். கிராமத்தில் அவரைத் தேடி யார் வந்தாலும் அவரவர்களுக்குரிய உதவிகளும் உணவு வகைகளும் பரிமாறப்படுவதுடன் இல்லாமல், வந்தவர் தேவைகளை அறிந்து அதற்கான சிறு சிறு பொருளதவிகளை தங்களது குடும்ப சக்திக்கேற்றவாறு செய்து வந்தார். அதனால் அக்கிராமத்திலும், அதற்கு அக்கம் பக்கத்துக் கிராம விவசாயிகள் இடையிலும், மகாதேவ சஹாய்க்கு நல்ல மதிப்பும் மரியாதையும் வளர்ந்து வந்தது.

மகாதேவ சஹாய் சமஸ்கிருத மொழியில் வல்லவர். பார்சி மொழியில் வித்வான் பட்டம் பெற்றவர். ஆயுர் வேத மருத்துவத்தில் நல்ல பயிற்சி பெற்றவர். யாருக்கு அவர் சிகிச்சை செய்தாலும் அவர்கள் பூரண உடல் நலம் பெற்று விடுவார்கள். இவ்வாறு பலருக்கு மருத்துவம் செய்ததால் அவர் கைராசிக்காரர் என்ற பெயரும், புகழும் பெற்றார்.

வேதம் ஓதுவதும், சோதிடம் பார்ப்பதும் அவருக்குப் பழக்கமாகும். இந்த இரண்டும் அவருக்கு கிராமத்தில் நல்ல பெயரை உருவாக்கித் தந்தன. இவைகட்கான ஆராய்ச்சி நூல்களை அவர் சேகரித்து வைத்திருந்தார். பயிற்சி பெறுவோருக்குத் தேவையான நூல்களை ஆதாரத்துக்கான ஆய்வுக்காக அடிக்கடி கொடுத்து உதவுவார். இதற்காகவே, அந்த சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் தேசாயிடம் வந்து நூல்களைப் பெற்றுச் செல்வார்கள்.

மகாதேவ சஹாய் குதிரைச் சவாரி செய்வதிலும் பயிற்சி பெற்றிருந்தார். குதிரைச் சவாரியில் இன்பம் அனுபவித்த அவர், தனது செல்லக் குமாரனான ராஜேந்திரருக்கும் குதிரைச் சவாரி செய்யப் பழக்கினார். அதுபோலவே, சிறு வயது கிராமத்து விளையாட்டுக்களான சடுகுடு, கில்லிப்புல் ஆட்டம், நீச்சல் விளையாட்டு, மரம் ஏறிப் பிடிக்கும் ஆட்டம் போன்ற ஆட்டங்களையும் ஆடிக் களிப்பார் இராஜேந்திரர்! ஆனால், மரமேறுவதிலும், நீச்சல் கற்பதிலும் அவருக்கு அச்சம் இருந்ததால், அவற்றின் மீது அவர் ஈடுபாடு காட்டாமலே பிள்ளைகள் மத்தியில் பதுங்கி விடுவார்.

மாவீரன் சிவாஜிக்கு அவரது தாயார் பாரத ராமாயணக் கதைகளைக் கூறி புத்தி புகட்டியதைப் போலவும், மகாத்மா காந்தியடிகளாருக்கு அவரது அன்னையார் அரிச்சந்திரன் மற்றும் பாரத ராமாயண நீதிக்கதைகளை விளக்கிக் கூறுயதைப் போலவும், ராஜேந்திரன் அம்மாவும், அம்மம்மாவும் ராமாயண, பாரதக் கதைகளைக் கூறி நீதிகளை விளக்குவார்கள். இந்து மத ஆன்மீகப் பாடல்களைப் பாடிக் காட்டி, பொருளுரைத்து மகிழ்வார்கள்.

குளிர்காலம் வந்து விட்டாலே போதும், ராஜன் பாபு விடியலில் எழுவார் நீராடுவார்; வெள்ளையாடைகளை அணிவார்; உடன் தனது தாயாரையும் தூக்கத்தை விட்டு எழுப்பி விடுவார்; அந்த அம்மையாரும் குளித்து, உடை பூண்டு, சுத்தமாக பூஜை அறைக்குச் சென்று சிவ பஜனைப் பாடல்களைப் பாடிப் பூஜிப்பார்; சில நேரங்களில் இதிகாசக் கதைகளைப் பிரசங்கம் செய்வது போல தனது பிள்ளைகளுக்குப் போதிப்பார். அந்தப் பஜனைகளைக் கேட்டு, கதைகள் நெறிகளை உள்ளத்தில் பதித்துப் பேரானந்தம் அடைவார். தாயாரும். பாட்டியும் மாறி மாறிக் கூறும் கருத்துக்கள் எல்லாம் பாபு உள்ளத்தில் பசுமரத்து ஆணிபோல பதிந்து விட்டன.

அக்காலத்தில் இந்து - முஸ்லீம் மக்களிடையே எந்த வித இன, மத பேதமும் எப்போதும் எழுந்ததில்லை. இந்துப் பண்டிகை என்றால் முஸ்லீம்கள் குடும்பத்தினருடன் சென்று.கோலாகலமாகக் கொண்டாடி, உடுத்தி, உண்டு மகிழ்ந்து நன்றி கூறி அவரவ்ர் வீடு செல்வார்கள்.

அதே போன்றே, முஸ்லீம்கள் விழா என்றாலும், இந்துக்கள் அவரவர் குடும்பத்தினருடன் சென்று கலந்து, மகிழ்ந்து, விருந்துண்டு களித்து, அவரவர் இல்லம் போய், உண்டு பெற்ற உற்சாகத்தை அடிக்கடி நினைத்து உறவு முறை கொள்வார்கள்.

குழந்தை இராஜேந்திரருக்கு ஐந்து வயதானது. இந்துக்களானாலும் சரி, முஸ்லீம்களானாலும் சரி, அப்போதெல்லாம் இந்து - முஸ்லீம் என்ற வகுப்புணர்வு பேதம் இல்லாமல், பெரும்பாலான பள்ளிகளில் முஸ்லீம் மெளலவிகளே, இந்துக் குழந்தைகளுக்கும் அட்சராப்பியாசம் செய்து வைப்பார்கள். எழுத்தறிவித்தவன் இறைவனல்லவா? அதனால், எழுத்துக்களைப் போதிக்கும் மெளலவிகளுக்கு குரு காணிக்கை வழங்கிக் குருகுலம் போல பாடம் கற்றுக் கொள்வார்கள் இந்துக் குழந்தைகள். ஏன் மெளல்வியையே குருவாக ஏற்பார்கள் என்றால் அக்காலத்தில் பிள்ளைகளை நேராகப் பள்ளிகளில் சேர்க்க முடியாது. மெளலவியிடம் ஓரெல்லைவரை கட்டாயம் படித்தாக வேண்டும். ஆனால், படிக்கப் போகும் ஹதுவா சமஸ்தானத்துப் பள்ளிகளில் முதலில் கற்பிக்கும் எழுத்தே பார்சி மொழி எழுத்துக்களாகவே இருந்தன. அதனால், அதற்குரிய ஆசான்கள் மெளல்விகளே என்று கருதி இந்துக்களும் - அவரவர் குழந்தைகளை அப்பள்ளிகளுக்கே அனுப்பி வைப்பார்கள்.

இராஜேந்திர பாபு மட்டும் தனியே பள்ளிக்குச் செல்லவில்லை. அவருடைய பெரியப்பா மகன்களும் அவருடன் கூடிச் சென்று வந்தார்கள். பெரியப்பா மகன்கள் பாபுவுக்குச் சகோதரர்கள் தானே! அதனால், அவர்கள் செய்யும் போக்கிரித்தனத்தையும், குறும்புகளையும், விஷம வேலைகளையும் பாபு பெற்றோரிடம் கூறமாட்டார்; அந்தச் செயல்களில் கலந்து கொள்ளவும் மாட்டார். அவ்வளவு அமைதியாகப் பள்ளிக்குப் போவார், வருவார். ஒரு மெளலவி எழுத்துக்களைக் கற்பித்தவுடன் - வேறோர் மெளலவி பார்சி பாடங்களை நடத்த வருவார். இவ்வாறு பார்சி பாடங்களை எல்ல்ாம் மெளலவியே கற்றுக் கொடுத்து விடுவார்.

கற்றுக் கொடுத்தப் பாடங்களை எல்லாம் மாணவர்கள் மனனம் செய்ய வேண்டும்; ஒப்பிக்க வேண்டும்; இது பிள்ளைகளுக்குத் துன்பம் என்பதால், ஆசானை எவ்வாறு ஏமாற்றலாம் என்பதற்கான சூழ்ச்சிகளை அவரவர் அறிவுக்கேற்றவாறு செய்து கொண்டே இருப்பார்கள்.

இளமைப் பருவம் முழுவதும் இராஜேந்திரர் தனது சொந்தக் கிராமத்திலேயே பெற்றோர்களுடன் இருந்தார். அந்தக் கிராம மக்களது சூழ்நிலைதான், அவரது வாலிபம், வயோதிகம், பதவிக்காலம் எல்லாவற்றிலும் எளிமையினையே கடைப்பிடிக்கும் வழக்கமானது.

கிராமங்கள் பெரும்பாலும் எந்தப் பொருட்களையும் வெளியே இருந்து வாங்குவதில்லை. ஆனால், கிராமப் புற பேரூர்களில் வாரத்துக்கு ஒருமுறை சந்தை கூடும். கிராமத்திலே உள்ள குழந்தைகளுக்கு அன்று ஒரே ஆரவார மகிழ்ச்சிதான். இதுபோலவே, ராஜேந்திரர் கிராமத்திலும் திருவிழா போல ஒரு நாள் சந்தை கூடுவதுண்டு. அங்கே ஏராளமான பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், சந்தை விற்பனைக்காக வரும். அதற்குப் பிறகும் சிறுவர்களது உற்சாகத்துக்குச் சொல்ல வேண்டுமா? ஒரே ஆரவாரக் கொண்டாட்டம் தானே!

கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்ற தமிழ்நாட்டுப் பழமொழிபோல, வடநாட்டுக் கிராமங்களிலும் பல சிறு சிறு கோயில்கள் உண்டு. அங்கு காலை,மாலை நேரங்களில் பூசைகள் நடக்கும்; மணி ஒலிக்கும்; சங்கு ஊதுவார்கள். ராம நவமி, ஜன்மாஷ்டமி காலங்களில் கோயில்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்து திருவிழா கொண்டாடுவார்கள். ராஜேந்திரர் மற்றக் குழந்தைகளோடு சேர்ந்து இந்த அலங்கார வேலைகளைச் செய்வார். இந்தத் திருவிழா நாட்களில் அவர் விரதமும் இருப்பார். ஆலய வழிபாடுகளுக்குச் செல்வார். தரிசனம் செய்வார். இறுதி வரை ஆழ்ந்த ஆன்மிகப் பற்றோடும், நம்பிக்கையோடும், இறையுணர்வோடும் அவர் வாழ்ந்தவர் என்பதற்குரிய அடையாளமாகவே அவர் வாழ்ந்து காட்டினார்.

கிராம மக்களது நன்மை தீமைகள், வாழ்வு சாவுகள், திருமணம் திருவிழாக்கள் போன்ற எல்லாவற்றிலும் ஒவ்வொரு வீட்டாரும் கலந்து கொண்டு பங்கேற்பார்கள். அது போலவே ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பாபுவும் கலந்து கொண்டு பங்கேற்பார். அந்தப் பழக்க வழக்கங்கள் ஒவ்வொருவரையும் உறவின் முறையாக்கிக் கொள்வதுமுண்டு. இதனால் கிராமவாசிகள் உண்மையானவர்களாகவும், உழைப்பாளிகளாகவும், சூதுவாது, கபடமற்றவார்களாகவும் இருப்பார்கள். இராஜேந்திரரிடமும் இதே கிராமீயப் பண்பாடுகள் மிக அதிகமாகக் குடிகொண்டு ஒரு கிராமத்ததானைப் போலவே உருவாக்கி விட்டது எனலாம். அதனால்தான், பாபு சாகும் வரை கிராம மக்களின் மனிதாபிமானத்தைப் பெற்ற ஒரு தனி மனிதராகவே காட்சி தந்து மறைந்தார்.

எனவே, ரஜேந்திர பிரசாத்தின் கிராமக் கல்வி, கிராம ஆன்மீகம், கிராம விவசாயம், கிராமப் பழக்கவழக்கங்கள், கோயில், திருவிழா, சந்தை, கொண்டாட்ட ஆரவாரக் கோலாகலங்கள், தெய்வீக உணர்வுகள் அத்தனையும் அவரிடம் இறுதிவரை குடிகொண்டிருந்தன.