நீங்களும் இளமையாக வாழலாம்/இளமைக்கு எதிரிகள்

விக்கிமூலம் இலிருந்து

4
இளமைக்கு எதிரிகள்

ஏன் முதுமையடைகிறோம்? எப்படி இளமை போய்விடுகிறது? எதனால் இந்த மாற்றங்கள்? ஏன் ஏற்படுகின்ற இந்த தடுமாற்றங்கள்? மனமாற்றங்கள் என்ற கேள்விகள், புற்றிலிருந்து புறப்பட்டுப் பறக்கின்ற ஈசல்கள் போல நமக்குள்ளிருந்து கிளம்பிக் கொண்டுதான் இருக்கின்றன.

ஈசலைப் பிடிக்கக் காத்திருக்கும் காக்கையின் சுறுசுறுப்பு போல, நாமும் சுறுசுறுப்படைந்து கொள்வோம். ஏனெனில், எண்ணியதைப் பெற இப்பண்பு நமக்கு என்றும் கைகொடுக்கும் காமதேனுவன்றோ!

இளமையாய் இருக்க உதவுவன என்ன என்று அறிவதற்கு முன், இளமையை அழிக்க வரும் எதிரிகளைப் பற்றி முதலில் தெரிந்து வைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும்.

செல்கள்

இளமைக்கு, எதிரிகளில் முதலாவதாக வருவது. நமது செல்கள் பெறுகின்ற மாற்றங்கள் தான். இளமை ஏன் தேய்கிறது. முதுமை ஏன் வந்து மூடுகிறது என்றால், அது செல்களில் ஏற்படுகின்ற விந்தையான மாற்றங்கள் தான்.

இந்த செல்கள் தான் உடலுக்கு ஆதாரமான அடிப்படைகள். செல்கள் வளர்ந்து, பிரிந்து பிரிந்து வளர்வதால்தான் உடலுறுப்புக்கள் உருவாகி, மெருகேறி, வளம் கூடி வாழ்கின்றன. இந்த செல்களை ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்து சோதனை செய்தபோதுதான். வயதாகும் மர்மம் புரிந்தது என்கிறார்கள் ஆராய்ச்சி நிபுணர்கள்.

செல்கள் இயற்கையாகவே வளர்கின்றன. ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக, நான்கு எட்டாக இப்படியாகிப் பிறந்து பிரிந்து, வளர்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, செல்கள் வளராமல், பிரியாமல் நின்றுவிடுகின்றன. ஏனென்றால், பிளந்து நின்றுபோய் விடுகின்றன. ஏனென்றால் பிறந்து வரும் சக்தியை அவைகள் இழந்து போகின்றன. இந்த நின்று போகும் இழந்துபோகும் சக்திதான் முதுமையின் ஆரம்பம் என்று நாம் அறிந்து கொள்வோம்.

செல்கள் பிரிந்து வளராமல் இருப்பதற்கும் முதுமைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். அங்கே தான் அந்த அதிசயமான ரகசியம் அமிழ்ந்து போய் கிடந்து, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றது.

செல்கள் இந்த சக்தியை இழப்பதனால், உழைப்பினால் மற்றும் பல காரணங்களால் அழிந்துபடுகின்ற செல்களை பழுதுபார்த்து விடவோ, புதுப்பித்து விடவோ முடியாமல் போகிறது. தேய்ந்த செல்கள் தேர்ச்சி பெறா விட்டால், அழிவடைந்த செல்களுக்குப் பதிலாக ஆக்கபூர்வமான புதிய செல்கள் தோன்றாவிட்டால், உடல் நிலை என்ன ஆகும்?

உண்டியலில் காசுகள் போடாமல், உள்ளிருந்த காசுகளை எடுத்துக் கொண்டே வந்தால் உண்டியல் நிலை என்ன? காரில் தேய்ந்து போன உறுப்புக்களை மாற்றாமல், ஓட்டிக் கொண்டே போனால், முடிவு என்ன? இழந்தனவற்றிற்குப் பதிலாக புதியனவற்றைப் பொருத்தாமல் இருந்தால், இழப்பு இழப்புதானே! அழிவுதானே!

செல்கள் அழிந்து போனால், அவற்றைப் புதுப்பிக்கப் புது செல்களை உண்டாக்கப் பலமில்லாத தன்மையை உடல் பெறுகின்றபோது, உடல் முதுமையை அடைந்துபோகின்றது. ஆனால், ஏன் அந்த செல்கள் அத்தகைய நிலையை அடைகின்றன என்றால் யாருக்கும் தெரியவில்லை. என்றாலும் அவை இப்படித்தான் நிகழ்ந்திடவேண்டும் என்று எல்லோரும், அபிப்ராயப்படுகின்றார்கள்.

வளர்ந்து வரும் செல்களிடையே, கண்ணுக்குத் தெரியாத, புலன் உணர்வால் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்குத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அந்தத் தாக்குதல் இயற்கையாக இருக்கலாம் செயற்கை முறை தவறுகளாக இருக்கலாம். எப்படி இருந்தாலும், ஆரம்ப காலத்தில், அதாவது இளமைக்காலத்தில், இந்தத் தவறுகளால் ஏற்படும் தாக்குதல்கள் எல்லாம் செல்களின் பலத்தைப் பாதிப்பதில்லை, பழுதுபடுத்தி விடுவதில்லை. பேராபத்து எதையும் விளைவித்து விடுவதில்லை.

இளமை காலத்தில் எப்படித் தவறுகள் செய்தாலும், இயற்கைக்கு எதிராகத் தகராறுகள் செய்தாலும், செல்கள் தங்களை பத்திரப்படுத்திப் பாதுகாத்துக் கொண்டு, பிரிந்து வளர்ந்து, உடலை செழிப்படையச் செய்து கொண்டே வருகின்றன. ஆனால், தவறுகள் நிறைய குவிந்து விடும்போது தாள முடியாத செல்கள், தங்கள் பலத்தை இழந்து, இயற்கை வளர்ச்சியை, பிரிந்து வளரும் எழுச்சியை இழந்து விடுகின்றன.

தவறுக்குள்ளான செல்களின் தடுமாற்றத்தால் தான் முதுமை வருகின்றது என்று ஒரு முடிவுக்கு வல்லுநர்கள் வந்திருக்கின்றார்கள். இது ஒருகாரணம் தான். இதுவே காரணமல்ல - இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.

செல்களின் செயல் மாற்றமும், செய்யும் தவறுகளால் தாக்கப்பட்டத் தடுமாற்றமும் தான் உடல் முதிர்ச்சிக்குக் காரணம் என்ற ஒரு காரணத்தை முன் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். இது மட்டும் காரணமா என்றால், இன்னும் இருக்கின்றன. அவற்றையும் அறிந்து கொண்டு, அகற்றி விடுவோமானால் அல்லது அந்த சூழ்நிலையிலிருந்து அகன்று கொள்வோமானால், விரைந்தோடி மறைகின்ற இளமையை எளிதாகத் தக்க வைத்துக் கொள்ளலாம் இளமையாய் வாழலாம்.

நெருக்கடிகள்:<
செல்களுக்கு அடுத்த படியாக வருவது வாழ்க்கையின் நெருக்கடிகள் (Stress) நிமிடத்திற்கு நிமிடம் தொடர்ந்து வந்து கொண்டிருப்பன நெருக்கடிகள்தாம். இவை வாழ்க்கையின் சகஜமான வாடிக்கையாகும்.

வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள்தான் அதிகம். எதிர்பார்த்தது கிடைக்காமற் போனால் ஏமாற்றங்களே நிறையும். ஏமாற்றங்கள் இதயத்தை நோகடிக்கின்றன. எண்ண எழுச்சிகளை சாகடிக்கின்றன. இவ்வாறு தொடர்கின்ற ஏமாற்றமும் துன்பமும், கவலையும் கலக்கமும், மனிதனது உணர்வுகளைத் தாக்கும் நெருக்கடிகளாகவே நிறைந்து போகின்றன.

இந்த நெருக்கடிகளும் நேர்முகத் தாக்குதல்களும் வாழ்க்கையில் ஆண்களுக்குத் தான் அதிகம். பெண்களுக்கு சற்றுக் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். அவர்களின் கவலைக்கும் கலக்கத்திற்கும், காரணங்கள் குறைவு. ஆசைக்கும், அனைத்துலக இன்பத்திற்கும் ஆசைப்படாத மனதினால், பல நெருக்கடிகளிலிருந்து அவர்கள் விடுபட்டுப் போகின்றார்கள். அதனால், நெருக்கடிகள் விளைவிக்கின்ற இதயநோய், கேன்சர், வயிற்றுநோய் போன்ற பல நோய்களிலிருந்தும் தப்பித்துக் கொள்கின்றார்கள்.

அதன் காரணமாக, அவர்கள் 65 வயதுக்கு மேற்பட்ட போதிலும் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்குகின்றார்கள். சொல்லாலும் செயலாலும் அவர்கள் சுகமாக வாழ்கின்றார்கள். இந்த உதாரணமானது. இளமையாக வாழ்வதற்கு, முதலில் வாழ்க்கை நெருக்கடிகளை சமாதானத்துடன் சமாளிக்கின்ற குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே கொடுக்கப்பட்டிருக்கிறது.

சூழ்நிலை
மூன்றாவது காரணம் சூழ்நிலையாகும். ஒவ்வொருவரும் வாழ்கின்ற தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றாற் போலவே, உடல் அமைப்பு மாறுபடுகின்றது. அதிக சூரிய வெப்பம் உள்ள இடங்களில் வாழ்கின்றவர்களுடைய தோலானது அதிகமாகப் பாதிக்கப்படுகின்றது. தோலின் மேற்பகுதி வறட்சித் தன்மை உடையதாகவும், பிறகு சுருக்கங்கள் விழுந்து முதிர்ச்சியுற்றது போலவும் தோற்றமளிக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டு வெயில் படாமல் உடைகள் மறைந்திருக்கின்ற உடல் பகுதியையும், ஆராய்ச்சி செய்த மருத்துவ வல்லுநர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றார்கள். அதாவது அதிகம் வெயிலால் பாதிக்கப்படுகின்ற உடற் பகுதி, சற்று வயதானதாகவே தோற்றம் அளிக்கிறது.

ஆகவே, வாழ்கின்ற ஊரின் அடிப்படை சீதோஷண நிலைகளுக்கு ஏற்ப, ஒருவரின் உடல் அமைப்பு வயது தோற்றமும் விளங்குகிறது என்பதற்கு, அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா எனும் பகுதியை சான்று காட்டுவார்கள். அந்தப் பகுதி மிகவும் கடுமையான உஷ்ணம் நிறைந்ததாகும். அங்குள்ள உஷ்ணத்தின் பாதிப்பால், அங்கு மக்களின் சராசரி வயது 66.4 சதவீதம் என்றும், நல்ல சீதோஷ்ண நிலை உள்ள நெப்ராஸ்கா என்ற இடத்தில் உள்ளவர்களின் சராசரி வயது 71.9 என்றும் கூறுவதை நாம் அறியும் பொழுது, இளமைக்கு எதிரிகளான குறிப்புக்களை, இன்னும் விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.

இளமை என்பது வளர்ச்சியாகும் உடல் உறுப்புக்களின் ஒருங்கிணைந்த, ஒப்பற்ற எழுச்சிமிக்க செயல்திறன்களாகும். வயதானது என்பதானது தோலிலே வறட்சி நிறைவது சுருக்கம் கொள்வது. எலும்புகளும் திசுக்களும் தசைகளும் முற்றிப்போய் விடுகிறது. ஆக்கபூர்வமான செயல்களின் வேகத்தில் தளர்ச்சியடைவது போன்றவையாகும்.

இவ்வாறு நேரத்தினை ஒட்டி, உடல் உறுப்புக்கள் மாற்றம் பெற்றுக் கொள்வதானது இயற்கையின் சட்டமாகும். அதாவது மனித உடலின் அமைப்புத் திட்டமுமாகும்.

இளமைக்காலத்தில் நிகழ்கின்ற மாற்றங்களைப் பாருங்கள். சரியான வயது வரும் பொழுது பற்கள் தானாகவே முளைத்துக் கொள்கின்றன. குழந்தைகள் குப்பறிப்பதும். உட்காருவதும். நிற்பதும், நடப்பதும் எல்லாம் இயல்பாகவே நடைபெறுகின்றன. குறிப்பிட்ட காலத்தில் உணர்வுகள் செழிக்கின்றன. காதல் நினைவுகள் எழுகின்றன. உறுப்புக்களில் மலர்ச்சி விளைகின்றன.

முதுமை என்ற நிலை வரும் பொழுது, எல்லாமே நின்று போய் விடுகின்றன. உடலால் மட்டுமா இந்த நிலை? இல்லை. உணர்வால் கூட மாற்றங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படக்கூடிய காரணங்கள் என்ன? இதற்கு ஒரு காரணத்தைக் கூறுகின்றார்கள் வல்லுநர்கள்.

இத்தகைய மாற்றங்களையும் ஏற்றங்களையும் நிகழ்த்துவன நமது உடலுக்குள் உள்ள சுரப்பிகள் (Glands) தான். இந்த சுரப்பிகள் என்பவை, இயற்கையாகவே, பல்வேறு சக்தி உள்ள அமிலங்களை உற்பத்தி செய்து, அதனை இரத்த ஓட்டத்தில் கலக்கச் செய்கின்றன. இவ்வாறு செய்வதால், செல்கள் அமிலங்களைப் பெறுகின்றன. அதன் மூலமாக என்னென்ன காரியங்கள் நடைபெற வேண்டுமோ அவற்றை முறையோடு செய்து வளர்க்கின்றன.

வியர்வைச் சுரப்பிகள், உமிழ் நீர் சுரப்பிகள் போன்றவைகள் நீங்கள் அறிந்ததுதான். அது போலவே, ஜீரணத்திற்காக சுரக்கின்ற சுரப்பிகளும் உண்டு. இவைகள் நல்ல முறையில் செயல்படும் வரை, உடலில் வளர்ச்சியுண்டு, மலர்ச்சியுண்டு எழுச்சியுண்டு.

சுரப்பிகள் ஆற்றலில் குறையும் பொழுது, செயல்களில் தடுமாறும் போது, எல்லாம் தடை பட்டுப் போகின்றன. சுரப்பிகள் தான் உடலுறுப்புக்களைக் கட்டுப்படுத்துகின்றன. செயல்களில் இயங்க வைக்கின்றன. அவைகள் தான் இப்படி உடலில் மாற்றத்தையும் உண்டாக்குகின்றன. என்றால், ஏன் அப்படி?

இதற்கு பலர் கூறுகின்ற விடைகள் திருப்திகரமானதாக இல்லை. செல்கள்தான் மாற்றம் கொள்கின்றன என்றால், எப்படி என்பதாக யாரும் தெளிவான விளக்கம் தரவில்லை. ஆனால் நாம் இப்படி கூறலாம்.

சுரப்பிகள் முதிர்ச்சியடைந்து, இயல்பாக சுரக்கும் ஆற்றலை இழந்து போவதால்தான், முதுமை வருகிறது என்ற ஒரு பதிலை நாம் பெறுகிறோம். அப்படியென்றால், அப்படிப்பட்ட சுரப்பிகளை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிப் புதிதாக வைத்து விட்டால் மீண்டும் இளமையை அடைந்து விடலாமே என்று எண்ணுவோரும் உண்டு. இது நியாயமான ஆசைதான். ஆனால், சுரப்பிகளின் அமைப்பு அப்படி அல்லவே!

எந்த ஒரு சுரப்பியும் தனியாக இயங்கவில்லையே! சுரப்பிகள் அனைத்தும் ஒன்றையொன்று தழுவியும். ஒன்றுக்கொன்று ஆதாரமாகவும் தான் விளங்குகின்றன. ஒற்றுமையுடன் செயல்படுகின்றன. வயதாகும் பொழுது எல்லா சுரப்பிகளுமே முதிர்ந்து போகின்றன. அவற்றில் எது ஆற்றல் உள்ளது. எவை ஆற்றல் இழந்தன என்று எப்படி கண்டுபிடிப்பது?

குறிப்பிட்ட ஒரு சுரப்பி செயல்பட முடியாமற் போகிறது என்றால், அது குறிப்பிட்ட ஒரு நோயினால் தாக்கப்பட்டு, பாதிக்கப்பட்டிருக்கிறது. என்பதுதான் அர்த்தம். ஒன்றை நாம் மாற்ற முயன்றால், மற்ற எல்லா சுரப்பிகளின் தன்மைகளும் மாறிப்போனாலும் போகுமே!

ஆகவே மீண்டும் இளமையைக் கொண்டு வர முயல்வது என்பது முட்டாள்தனமான ஆசையாகும். உதாரணத்திற்கு ஒன்று, ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு நின்று போகிறது. அதை மாற்றி மீண்டும் அது ஏற்பட முயற்சி செய்வது, இயற்கையான உடல் இயக்கத்திற்கு எதிராகச் செய்கின்ற தீங்காக அது அமையும். ஆகவே, இயற்கையோடு இயைந்து நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.