நீங்களும் இளமையாக வாழலாம்/நிச்சயம் வாழலாம்!

விக்கிமூலம் இலிருந்து

10
நிச்சயம் வாழலாம்!

சரித்திரம் இருக்கிறது.

எந்த வயதிலும், எந்த நிலையிலும் நம்மால் இளமையாக வாழ முடியும். இது முடியாத காரியமல்ல...

நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் பலர், நடந்து காட்டிச் சென்ற சரித்திர சுவடுகள் இன்னும் அழியாமலே இருக்கின்றன.

நூறு வயதுக்கும் மேலே நிமிர்ந்து நின்று வாழ்ந்தவர்கள் நீண்ட பல சோதனைகளைக் கடந்து, நிலையான புகழைப் பெற்று உயர்ந்தவர்கள் ஏராளம், ஏராளம்.

கல்யாணம் ஆனவுடனேயே ‘காலம் முடிந்து விட்டது. இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டாலே, எல்லாம் முடிந்தது’ என்று எண்ணுபவர்கள், அறியாமையிலேயே உழல்கின்றார்கள் என்று அர்த்தம்.

முப்பதில் வாழ்க்கை முடிந்து போகிறது என்று முனகுபவர்களை ‘முட்டாள்கள்’ என்று நாம் தைரியமாக அழைக்கலாம். ஏனென்றால், அவர்கள் இயற்கையை என்னவென்று அறிந்து கொள்ளாத, இரண்டாந்தர ஆட்களாவார்கள்.

‘நாற்பதில்தான் வாழ்க்கையே தொடங்குகிறது. என்பது ஒரு மேனாட்டுப் பழமொழி!’

இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த குலாம் காதர் என்பவருக்கு வயது 130. அவருக்குப் புதல்வர்கள், புதல்விகள், பேரன்கள், பேத்திகள் என்று 30 பேர்களுக்கு மேல் உள்ளனர்.

அவருக்கு 3வது முறையாக 130வது வயதில் திருமணம். மணப்பெண்ணுக்கு வயது 37.

கட்டுக்கடங்காத ஆசைக் கனவுகளுடன் கல்யாணம் செய்து கொள்ளும் அவரை பேட்டி கண்டது பாகிஸ்தான் செய்தி ஸ்தாபனம். அந்த 130 வயது இளைஞர் இப்படி கூறுகிறார்.

‘என் உடல் ஒடுங்கியிருந்தாலும், இன்னமும் இளமை வேகம் உள்ளது.’

அவர் கூறும் காரணங்களைக் கேளுங்கள்.

நான் பின்பற்றும் எளிய பழக்கங்களே எனது நீண்ட ஆயுளுக்கும், நலமான தேகத்திற்கும் காரணம். நான் புகை பிடிப்பதில்லை. மது பழக்கம் இல்லை. தினமும் கடைக்குச் சென்று சாமான்கள் வாங்குவது எனக்கு நல்ல உடற்பயிற்சியாக உள்ளது.

ஆகவே, முதுமை என்பது வயதால் வந்து விடுவதில்லை. மனத்தால் தான் என்பது நமக்கு நன்றாகப் புரிகிறது.

முக்கியமான மூன்று

நம்மால் இளமையாக வாழ முடியும் என்றால் எப்படி என்ற வினாவுக்கு, இனி வரும் பகுதிகள்தான் பதிலாக அமைகிறது.

1. மனம், 2. உணவு, 3. பயிற்சி. முதலில் மனதைக் கவனிப்போம்.

இளமையாக என்றும் வாழ மனப்பயிற்சிதான் முதல் தேவை. இவற்றை முன்னரே விளக்கியிருந்தாலும், இங்கு நிறைவு படுத்திக்கொள்வது முக்கியம் என்பதால், எழுதுகிறோம்.

நாம் பிறந்து விட்டோம். இனி ஒருமுறை நமக்குத் தெரிந்து பிறக்கப் போவதில்லை.

இறந்து போவது என்பது உறுதி. ஆனால் எப்பொழுது என்றுதான் தெரியாது.

ஆகவே, வந்த பிறப்பும், இனி வரப்போகின்ற இறப்பும் என்பது பற்றி நமக்குத் தெரியாது என்பதால், அவற்றைப்பற்றி நமக்கு அக்கரையில்லை. அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அதற்கு அவகாசமும் இல்லை.

இருக்கின்ற காலத்தில் இன்பமாக வாழ வேண்டும். என்பது தான் முக்கியம். அதுவே இலட்சியம்.

மகிழ்ச்சி என்பது மனதால் கிடைப்பது. மனதுக்குத்தான் மகிழத் தெரியும். மாறாத இனிய நிலைகளில் வாழத் தெரியும்.

வயதாகிக் கொண்டிருக்கிறதே என்று கவலைப்படுவது வீண்வேலை, வயது ஏறிக்கொண்டிருப்பது என்பது காலத்தின் கட்டளை.

ஏறிக் கொண்டிருக்கும் வயதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். மாறிக் கொண்டு வரும் உடல் தோற்றத்தையும் மனப்பூர்வமாக அங்கீகரித்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

ஆகவே, வயதாவதைப் பற்றிய வீண் மனப் புரளியை முதலில் விரட்டியடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நமக்கு வயதாகி விட்டால், மற்றவர்கள் விரும்பமாட்டார்களே, மதிக்க மாட்டார்களே என்ற கற்பனை பயத்தைக் கனவிலும் கருதாதீர்கள்.

பூவும் கனியும்

ஒரு மரத்தில் பூத்த மலர் காயாகிறது என்றால் கனியாவதையும் மக்கள் விரும்புகின்றார்களே! அது ஏன்? பழம் பயன்படும் என்பதால் தான்.

ஒருவருக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்றால், அவர் அனுபவப் பழமாக அறிவுக்கனியாக அல்லவா விளங்குகிறார்!

வெம்பிப்போன காயையும் கனியையும் தான் மக்கள் வெறுப்பார்கள். அதுபோலவே, வீணாகிப் போன வயதானவர்களைத் தான் மற்றவர்கள் விலக்குவார்கள். விவேகம் உள்ளவர்களை ஏற்றுக் கொள்வதோடு, போற்றி வாழ்வது என்பது காலங்காலமாக வரும் சமுதாய தர்மம்.

ராமன் கீமன், மாடு கீடு, என்றெல்லாம் பலர் கேலியாகப் பேசுவது உண்டு. அதாவது ‘கீ’ எனும் எழுத்தைக் கூட்டிச் சொல்வது. அதாவது நல்லவார்த்தைக்கு மாறாகப் பேசும் கேலி முறை இது.

வயதில், அறிவில், உருவில் உயர்ந்து ஜொலிப்பவர்களைப் ‘பழம்’ போன்றவர்கள் என்று கூறுவது மரபு. ஆனால் ‘கிழம்’ என்று கூறுகின்றார்களே! யாரை? ஒன்றுக்குமே பயன்படாத உதவாதவர்களைத்தான்.

பண்பட்டவர்களை, பயன்படுபவர்களைப் பழுத்த பழம் என்கிறார்கள். பயன்படாத முதியவர்களைத் தான் கிழம் என்கிறார்கள்.

வயதாகும் பொழுதே, நாம் பழமாகப் போற்றப்பட வாழ்வதற்கு நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டாமா?

வெறுங்கல்லை யார் மதிப்பார்கள்! துதிப்பார்கள்! ஒருகல் விரும்பப்படும் சிலையாவதற்கு எத்தனை சிரமங்களை ஏற்றுக் கொள்கிறது.

வயதான காலத்தில் நாம் நமது குடும்பத்திற்கும் நமது சமுதாயத்திற்கும், நமது தாய் நாட்டிற்கும் உதவுவதுபோல் வாழ்ந்து கொண்டிருந்தால்தானே மற்றவர்கள் மதிப்பார்கள்!

இதற்கும் இளமைக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆஸ்பர்ன் செகன்பர்க் என்ற ஆராய்ச்சி நிபுணர் ஒருவர், 1200 கிழவர்களை அதாவது நூறு வயதுக்கும் மேற்பட்டவர்களை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். அதாவது, “ஒருவர் தாம் செய்கின்ற வேலையில் மகிழ்ச்சியும் மன நிறைவும், மீண்டும் மீண்டும் செய்கின்ற மன உறுதியும் உள்ளவரே நீண்ட ஆயுளுடன். நல்ல இளமை உணர்வுடன் வாழ்கின்றார்கள்” என்பது தான் அவரது கண்டுபிடிப்பு.

இங்கு மனம் தான் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அடுத்து, வயதாகி விடுவதாலே, மற்றவர்கள் நம்மை விலக்கி விடுவார்கள். மற்றவர்களுடன் உள்ள தொடர்பு துண்டித்துப் போய் விடுகிறது. நமது உழைப்பை மற்றவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று எண்ணுவதால் தான், மனம் பேதலித்துப் போய் விடுகிறது.

“மற்றவர்களுடன் சகஜமாக உறவாடுபவர்களும், வாழ்க்கையில் திருப்தி கொண்டவர்களும் தான் நன்றாக வாழ்கின்றனர்” என்று செகன்பர்க் சொல்லியிருப்பதை மீண்டும் கவனிப்போம்.

அவருக்கு அவரே எதிரி

நாம் தனிமைப்படுத்தப் படுவோம் என்ற நினைவைத் தவிர்ப்பது மனதுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு செயல்படுவது மனதுக்கு இன்பம் அளிக்கும். அதனால் மனதுக்கும் திருப்தி கிடைக்கும். திருப்தியே தெம்பைக் கொடுக்கும். அந்தத் தெம்புதான் ஒருவரை இளமையாக வாழச் செய்கிறது.

‘வயதாகி விட்டது. முதுமை வந்து விட்டது’ இனி, ஓரம் கட்டிக் கொண்டு வாழ்வோம், என்று யார் ஒதுங்கிப் போகின்றாரோ, அவர்தான் அவருக்கு எதிரி.

வீட்டில் உள்ளவர்களோடு உணர்வால் பங்கு பெறுவது, மகிழ்ச்சியுடன் கலந்துறவாடுவது, அவர்கள் கடமைகளுக்கு உதவுவது; அவர்கள் இன்ப துன்பங்களில் பங்கு பெறுவது, இவையெல்லாம் மனதை மகிழ்விக்கும். திருப்தியை அளிக்கும்.

இறுதியில் மனம் பற்றி ஓர் உண்மையை உணர வேண்டும். வயதானவர்களின் உடல் மற்றும் மனநிலைகளில் ஏற்படும் சில நலிவுகள் தான் அவர்களை வயதானவர்களாக்கிக் காட்டி இளமை உணர்வுகளைத் துண்டித்து விடுகின்றன.

அதனால், நமது மனம் உலைச்சல் படாதவாறு பக்குவமாக வாழப் பழகிட வேண்டும். அந்த மனப்பயிற்சிதான் என்றும் இளமையான உணர்வை அளிக்கிறது.

நாம் இளமையாக இருக்கிறோம் என்ற மன உணர்வு தான், நம்மை இளமையாக வாழும் அடிப்படைத் தெம்பை அளிக்கிறது.

நம்மால் இளமையாக வாழ முடியும் என்ற நம்பிக்கைதான், நினைவுகளில் லயித்து நின்று, நரம்புகளில் பெருக்கெடுத்தோடி, செயல்களில் செழிப்பேறி நிற்கின்றன. அந்த நினைவு என்றும் அமிழ்ந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

நிமிர்ந்த நடை, நிமிர்ந்த தோற்றம், நிமிர்ந்து உட்காருதல் போன்ற நிமிர்ந்த நினைவுகள்தான், முதுமைக் கவலையை விரட்டி இளமைக் கோலத்தைத் திருப்பித்தருகிறது.

எத்தனை குடும்பக் கவலைகள், எத்தனை பணத் தொல்லைகள் வந்தால் என்ன? வாழ்க்கைத் துன்பங்கள் வேறு. மனப்பண்புகள் வேறு, அதற்கான மனப்பயிற்சியை வளர்த்துக் கொண்டு வாழ்பவர்களே, என்றும் இளமையாக வாழ்கிறார்கள், இதற்கிடையே நோய்கள் வேறு, அவற்றையும் அலசிப் பார்ப்போமே!