என் சுயசரிதை/தினசரி பட்டி

விக்கிமூலம் இலிருந்து

தினசரி பட்டி

1928-வது வருடம் நான் நீதிபதி வேலையினின்றும். விலகின பிறகு அநேக நண்பர்கள் “உங்கள் நாட்களை எப்படி கழிக்கிறீர்கள்” என்று கேட்டிருக்கின்றனர். இது ஒரு முக்கியமான கேள்வியாம். அநேக உத்யோகஸ்தர்கள் பென்ஷன் (Pension) வாங்கிக்கொண்ட பிறகு தங்கள் காலத்தை எப்படி கழிப்பது என்று திகைத்திருக்கின்றனர். காலத்தை சரியாக கழிக்கத் தெரியாமல் வீட்டிலேயே மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மூச்சு விட்டுக்கொண்டிருந்தால் அது ஒருவன் உடல் நலத்திற்குக் கெடுதியைத்தான் தரும். ஆகவே 1928-ஆம் வருஷம் முதல் இதுவரையில் என் காலத்தை எப்படி கழிக்கிறேன் என்பதைப் பற்றி விவரமாய் எழுதுதல் இதை வாசிக்கும் எனது சில நண்பர்களுக்காவது பிரயோசனப்படும் என்றெண்ணி இதைப்பற்றி கொஞ்சம் விவரமாய் எழுதுகிறேன். காலையில் ஆறுக்கு எழுந்திருப்பேன் (நான் பரிட்சை களுக்குப் போயிருந்த காலத்தில்கூட முன்பாக எழுந்ததில்லை) விழித்தவுடன் நான் வணங்கும் தெய்வங்களை தொழுதுவிட்டு அரை மணி நேரம் உலாவுவதிலும் வியாயாமம் எடுத்துக் கொள்வதிலும் காலம் கழியும், நான் எடுத்துக்கொள்ளும் வியாயாமத்தைப்பற்றி அறிய விரும்பும் நண்பர்கள் எனது ‘நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்’ என்னும் நூலில் நான் இதைப்பற்றி எழுதியதை படித்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். அவைகளையெல்லாம் பற்றி இங்கு எழுதுதல் என்றல் இச்சிறு நூல் மிகவும் பெரிதாகி விடும். அதில் எது தவறினாலும் ஒன்று மாத்திரம் தவறமாட்டேன். அதாவது ஐந்து நிமிஷம் எடுத்துக் கொள்ளும் பிராணாயாமமாம். இது மிகவும் முக்கியம் என்று நான் வற்புறுத்துகிறேன். இது முடிந்தவுடன் என் காலைக் கடன்களை எல்லாம் தீர்த்துக் கொண்டு என் காலை பிரார்த்தனையை முடிப்பேன். இதெல்லாம் முடிவதற்கு சுமார் 2 மணி நேரமாகும். பிறகு என் காலை சிற்றுண்டியை அருந்துவேன். ஏதாவது கொஞ்சம் பட்சணமும் ஒரு பழமும் நான் அருந்தும் சுக்கு காப்பியுமாம். சுக்கு காப்பி என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்றி னால் ஆனதாம், நான் காப்பி சாப்பிடுவதை விட்டு 50 வருடங்களுக்கு மேலாயது. இதன் பேரில் 9 மணி முதல் 11 மணி வரை நான் ஏதாவது எழுத வேண்டிய நாடகத்தையோ கதையையோ கட்டுரையையோ எழுதுவதில் காலங் கழிப்பேன். பிறகு என் நித்ய பூஜையை முடித்துக்கொண்டு உணவு கொள்வேன். இது எல்லாம் முடிவதற்கு ஏறக்குறைய ஒரு மணியாகும். ஒரு மன முதல் இரண்டு மணி வரையில் மெத்தையின் பேரில் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு முழு ஓய்வு எடுத்துக் கொள்வேன். பிறகு இரண்டு மணி முதல் 4 மணி வரையில் மறுபடியும் ஏதாவது எழுதுவதிலோ அதற்கு ஏதாவது படிக்க வேண்டியதிலோ என் காலத்தைப் போக்குவேன். நான்கு மணிக்கு மேல் ஏதாவது ஒரு சிறு பழமும் (முக்கியமாக பேரிச்சம் பழமும்) பாலும் அருந்துவேன் பிற்பாடு சுகுண விலாச சபைக்கோ, S.I.A.A-வுக்கோ, மது விலக்கு சங்கத்துக்கோ போய் அங்கு ஏழரை மணி வரையில் சீட்டாடுவதிலோ நண்பர்களுடன் பேசுவதிலோ காழங்கழிப்பேன் 8 மணிக்குள் வீடு திரும்பி விடுவேன். இரவு பூஜையை முடித்துக் கொண்டு 9 மணிக்குள் சாப்பிட்டு விட்டு உறங்கப் போவேன்.

மேற்சொன்ன தினசரி நடவடிக்கைகள் என் கண் பார்வை சுமாராய் இருந்த போது; பிறகு என் கண் பார்வை முற்றிலும் குறைந்த போது அந்த நடவடிக்கைகளில் சிலவற்றை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. (1) காலையில் 9 மணி முதல் 11 மணி வரையில் என் பேரன் ஒருவனை ஆங்கிலத்தில் படிக்கச் சொல்லி கேட்டு வருவேன் அல்லது அவனுக்கு ஆங்கில பாடம் கற்பிப்பேன். (2) 2 மணி முதல் 4 மணி வரையில் நான் காலையில் யோசித்திருந்த நாடகத்தையோ, கதையையோ, கட்டுரையையோ என் பேத்தி ஒருத்திக்குச் சொல்ல, அவளை எழுதிக் கொள்ளச் சொல்வேன். (3) சாயங்காலம் வெளியில் போகாதவனாய் வீட்டிலேயே 6 மணி வரையில் உலாவி வியாயாமம் எடுத்துக் கொள்வேன். (4) 6 மணி முதல் 7½ மணி வரை என் சிறிய பேரனை படிக்கச் சொல்லி தமிழ் பாடம் கற்பிப்பேன். புதன் கிழமைகளில் மாத்திரம் மது விலக்கு சங்கத்திற்கு ஒரு ரிக்ஷாவில் மற்றவர்கள் உதவியினால் ஏறிக்கொண்டு போய் வருவேன்.