என் சுயசரிதை/நான் வணங்கும் தெய்வத்தின் கருணையினால் பெற்ற மரியாதைகள்

விக்கிமூலம் இலிருந்து

நான் வணங்கும் தெய்வத்தின் கருணையினால்
பெற்ற மரியாதைகள்

(1) என்னுடைய 81-ஆம் பிறந்த நாளில் சென்னையிலுள்ள ஏறக்குறைய எல்லா நடிகர்களும் நான் எதிர் பாராத படியான ஒரு பெரிய விழாவைக் கொண்டாடினர். (2) என்னுடைய 85 வயது பூர்த்தியானதும் சென்னை நகராண்மை கழகத்தார் எனக்கு பெரிய மரியாதையை செய்தார்கள். (3} சென்னை மாநில சங்கீத நாடக சபையார் பாராட்டு விழாக் கொண்டாடினர்.(4) இவ்வருடம் (1957) சென்னை அரசியலார் தாங்கள் நடத்திய நமது நாட்டின் நூறாவது விடுதலை விழாவை நடத்திய போது எனக்குப் பெரிய பரிசுகள் அளித்தனர். (5) நான் படித்த மாகாணக் கல்லூரி பாராட்டு விழா ஒன்றை நடத்தியது. (6) நான் படித்த பச்சையப்பன் கல்லூரி ஓர் பெரும் பாராட்டு விழாவை நடத்தியது. (7) சுகுண விலாச சபையார் ஓர் பெரும் கொண்டாட்டத்தை நடத்தி மரியாதை செய்தனர். இன்னும் மது விலக்கு சங்கம், கபாலீஸ்வரர் கோயில் அதிகாரிகள், சில நடிகர் சங்கங்கள் பிரத்யேகமாக மரியாதை செய்தார்கள். மேற் சொன்ன பல கூட்டங்களில் (சென்னையில் உள்ள பல நடிகர் சங்கங்கள் உபசாரப் பத்திரங்கள் வாசித்து மாலை மரியாதைகள் செய்தனர். இவ்வருடம் (1950) டில்லியில் உள்ள மத்திய அரசாங்கத்தார் குடியரசு தினத்தன்று {26--1-59) ‘பத்ம பூஷண்’ பட்டத்தை அன்புடன் வழங்கினர். அன்றியும் டில்லியிலுள் அரசாங்கத்து சங்கீத நாடக சங்கமானது நாடக நடிப்பிற்காக பரிசு வழங்கியது. சென்னை நாட்டிய சங்கமும் ஓர் விழாவில் அன்பளிப்பு அளித்தது. கபாலீஸ்வரர் தேவஸ்தானம் மறுபடியும் மரியாதை செய்தது. இன்னும் சுகுண விலாச சபையார், மதுவிலக்கு சங்கம் முதலிய குழுவினர் மரியாதை செய்துள்ளார்கள். சென்னை சங்கீத நாடக சபையும் ஓர் பாராட்டு விழா நடத்தியது. இவைகளை யெல்லாம் பற்றி என் சரிதையில் நானே விவரங்களை எழுதுவது மரபு அன்று என்று எழுதவில்லை. ஆயினும் எனக்கு மரியாதை செய்த ஒவ்வொரு சங்கத்திற்கும் அந்தந்த சங்கத்தின் அங்கத்தினருக்கும் என் நன்றியையும் வத்தனத்தையும் இந்த எழுத்தின் மூலமாக நான் தெரிவிப்பதன்றி நான் வேறு என்ன கைமாறு செய்யக்கூடும்? ஒரு வேளை மறு பிறப்பில் தான் செய்யக் கூடுமோ என்னவோ?

இவ்வருஷம் (1959) நான் முடித்த நூல்கள் ‘மன ஆரோக்கியமும் நீடித்த ஆயுளும்’ இந்த ‘என் சுய சரிதை’ யுமாம். மன ஆரோக்கியமும் நீடித்த ஆயுளும், என்னும் நூல் இன்னும் அச்சிடப்படவில்லை.

தன் சுயசரிதையை எழுதும் ஒருவன் - தான் பிறந்தது வளர்ந்தது படித்து, பெரியவனானது கலியாணம் செய்து கொண்டது, உத்தியோகம் செய்து பொருள் சேர்த்தது இப்படிப்பட்ட விஷயங்களைப்பற்றி மாத்திரம் எழுதிக்கொண்டு போவானானால் அச்சரித்திரம் யாருக்கு என்ன பயனைத்தரும். மேற்சொன்ன அவனது ஆயுளைப்பற்றி எழுதும் விஷயங்களோடு ஒவ்வொரு நிலையிலும் தான் இன்னின்ன நல்ல வழக்கங்களை கடைப்பிடித்து நடந்ததினால் தனக்குண்டான நன்மைகளைப்பற்றியும், தான் அப்போதைக்கப்போது ஏதாவது கெட்ட பழக்கங்களை யுடையவனாயிருந்தால் அவைகளின் பயனாக தான் அனுபவித்த கஷ்டங்களையும், நிஷ்டூரங்களையும் ஒன்றும் ஒளியாது எழுதிக்கொண்டு வருவானானால் அவன் சரித்திரமானது மற்றவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு உபயோகப்படும் என்பது திண்ணம். அப்படி செய்யும் ஒவ்வொருவனும் தனக்கென்று மாத்திரம் வாழாமல் பிறர்களுக்கும் வாழ்ந்தவனாகிறான் என்பதற்கு சந்தேகமில்லை; ஆகவே நான் இதுவரையில் எழுதிய என் சரிதையில் எனது நன்னடக்கையால் அனுபவித்த நன்மையையும் கெட்ட நடத்தையால் அநுபவித்த கஷ்டங்களையும் ஆங்காங்கு கூறியிருக்கின்றேன் என்பதை இதை படித்த புத்தி கூர்மையுள்ளவர்கள் இலேசாக கண்டுபிடித்திருப்பார்கள் என்பதற்கு ஐயமில்லை. ஆகவே இனி இதுவரையில் எடுத்துக்கூறாத மற்ற விஷயங்களிலும் நான் மேற்சொன்ன கோட்பாட்டை கடைபிடித்த சில விஷயங்களை எடுத்து எழுத விரும்புகிறேன்.