என் சுயசரிதை/எங்கள் இல்வாழ்க்கை

விக்கிமூலம் இலிருந்து

எங்கள் இல்வாழ்க்கை
இல்வாழ்க்கை நடத்துவதில் என் தகப்பனார் ஒரு நல்ல முறையை கடைப்பிடித்து வந்தவர். அவருக்கு நாங்கள் ஐந்து ஆண்பிள்ளைகள் பிறந்தோம் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறேன். ஒவ்வொரு பிள்ளையையும் கூடுமானவரையில் படிக்க வைத்து ஏறக்குறைய படிப்பு முடிந்தவுடன் கலியாணம் செய்வித்து பிறகு அவனை ஏதாவது ஒரு உத்தியோகத்தில் வைத்து உடனே அவனுக்கு ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்து பிரத்யேகமாக அவ்வீட்டில் குடும்பம் வைத்துவிடுவார். இவ்வாறு என் மூன்று தமையன்மார்களுக்கும் செய்தார். ஐயாசாமி என்கிற என் தமையன் ஒருவரை தன் முதிர்வயதில் காப்பதற்காக ஏற்படுத்திக்கொண்டார். அவருடைய அந்திய காலத்தில் என் படிப்பு முடியாது நான் வக்கீல் பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தபடியால் என்னை பிரத்யேக குடும்பஸ்தனாக வைக்கவில்லை. ஆயினும் அவருக்கு பிற்காலம் என் தமையனார் ஐயாசாமி முதலியாரும் நானும், நான் வக்கீலாக சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு ஒரு நாள் டிஸ்டிரிக்ட் முன்சீப்பாயிருந்த அவர் பட்டணத்துக்குவந்து என்னிடம் “சம்பந்தம் தகப்பனார் கட்டளையின்படி, நாமும் பிரித்துக்கொள்வோம். நம்முடைய குடும்ப சொத்தை” என்று சொன்னார்.அதற்கு நான் உடன் பட்டு அன்றைத்தினமே நீங்கள் இன்னின்ன சொத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள். நான் இன்னின்ன சொத்துக்களை எடுத்துக்கொள்கிறேன் என்று சொல்லி அதன்படியே பிரித்துக்கொண்டோம் மறுநாளே ‘பாரீக்கத்து’ ஒன்று எழுதிரிஜிஸ்டர் செய்துகொண்டோம். நாங்கள் இவ்வாறு பிரித்துக்கொண்டது என் தமையன்மார்கள் மூன்று பேர்களுக்குங்கூட சில வருடங்களுக்கு பின்புதான் தெரிந்தது. இவ்வாறு செய்து கொண்டதினால் நாங்கள் அடைந்த பலன் என்னவென்னால் எங்களுக்கும் சகோதர சண்டை ஒன்றும் உண்டாகவில்லை.

ஒருகாசும் கோர்ட் செலவிற்காக செலவழிக்கவில்லை. இவ்விஷயத்தைப்பற்றி என் அருமைத் தந்தையார் பன்முறை கூறிய ஒரு பழமொழி இப்பொழுது ஞாபகமிருக்கிறது. அதாவது “இருபது குடுமிகள் ஒன்றாய் சேர்ந்து வாழும். இரண்டு கொண்டைகள் சேர்ந்து வாழமாட்டா” என்பதாகும். இந்த நன்மையை யோசித்து இதை வாசிக்கும் எனது நண்பர்கள் என் தகப்பனாருடைய கோட்பாட்டைக் கடைபிடித்து நடப்பார்களாக. ஐரோப்பியன் முதலியவர்கள் குடும்பங்களில் அண்ணன் தம்பிகள் சண்டை, ஓரவத்திகள் சண்டை, மாமி மருமகள் சண்டை என்பதே ஏறக்குறைய கிடையாது என்று கூறலாம். ஒரு ஐரோப்பியன் அவன் அரசகுமாரனாக யிருந்தபோதிலும் மணம் செய்து கொண்டவுடன் பிரத்யேக குடும்பஸ்தனாய் வாழவேண்டியதுதான். இக்கோட்பாட்டை கவனியாது என் சொந்த பந்துக்களில் பல குடும்பங்களில், ஒன்றாய் வாழ்ந்து கொஞ்சகாலத்திற்கெல்லாம் சண்டை சச்சரவு நேரிட்டு குடும்பங்கள் அழிந்துபோய் இருக்கின்றன என்று நான் பல உதாரணங்கள் கொடுக்க முடியும். இக்காரணம்பற்றியே இதை சற்று விவரமாய் எழுதினேன். அவிபக்த குடும்பமானது பூர்வகாலத்து நாகரீகத்திற்கு ஏற்றதாயிருந்தது. தற்காலத்திய நாகரீகத்திற்கு தனித்தனி குடும்ப வாழ்வே மிகவும் ஏற்றதானது என்பதற்குத் தடையில்லை.