தஞ்சைச் சிறுகதைகள்/விடியுமா?

விக்கிமூலம் இலிருந்து
கு. ப. ராஜகோபாலன்

மிழில் சிறுகதை இலக்கியம் பொற்காலம் காண முன்னுரை எழுதியவர்களில் குறிப்பிடத் தகுந்தவர். கும்பகோணத்தில் வாழ்ந்து கொண்டு அவர் செய்த பணியைச் சின்ன வட்டத்துள் நாம் அடைத்து விடமுடியாது. வசன கவிதை, விமரிசனம், நாவல்துறை இவற்றிலும் கணிசமான அளவு வெற்றி பெற்றவர். ஆனால் சிறுகதையில் அவர் ஸ்தானம் மிகவும் முக்கியமானது. புதுமைப்பித்தன், மெளனி என்பவர்களுடன் சேர்த்துச் சொல்லக்கூடியது.

உண்மையில் கு.ப.ரா. வும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரரான பிச்சமூர்த்தியும் சிறுகதாசிரியர்களாகப் போற்றப்படுவதைக் கண்டு ‘அவர்களை விட என்னால் நல்ல சிறுகதைகள் எழுதமுடியும்’, என்று சொல்லித்தான் மெளனி எழுதவே தொடங்கினார் என்று சொல்லுவார்கள். வ.ரா. கா. சி. வேங்கட ரமணி போன்ற முதுபெரும் எழுத்தாளர்களுக்குச் சகாவாக இருந்தவர் கு.ப.ரா. அவர்களைப் போலவே இவரும் இலட்சியவாதி. பல எழுத்தாளர்களை உருவாக்குவதில் சிரத்தை காட்டியவர் என்று அறிமுகப்படுத்தும் க.நா.சு, கு.ப.ரா வின் சிறுகதைகளைப் பற்றி இப்படி கணிக்கிறார்; ‘புதுமைப்பித்தனைப் பார்க்கிலும் சிறுகதையில் உருவப் பரிசோதனை செய்திருக்கிறார். வெற்றியும் பெற்றுள்ளார்.’

“ஆண், பெண் உறவு என்னும் ஒருமுகப்பார்வை உள்ளதே தவிர பல்வகை காட்டும் பன்முக நோக்கில்லை” என்று குற்றம் சாட்டுபவர்களுக்கு கா. சிவதம்பி, “இலக்கியத்தில் உணர்ச்சி விவரிப்பே உயரியது. இதுவே மனித வாழ்வில் தலையாயது. அதுதான் மனிதனைச் சரியாக எடுத்துக்காட்டுவது என்ற கொள்கை கொண்டவர் கு.ப.ரா. இத்தகைய உணர்ச்சி நிலைகள் தோன்றுதற்குக் களமாய் அமைந்தவற்றுள்ள ஆண், பெண் உறவுக் களத்தினடியாகத் தோன்றுவதன் காரணமே இது...” என்கிறார்.

ஒரு நல்ல சிறுகதை எப்படிச் சிறப்பாக அமையவேண்டும் எனப் படைப்பாளராலும், திறனாய்வாளராலும் எடுத்துக்காட்டப் பெறும் உயரிய கதை ‘விடியுமா?’ ந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்து போனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது.

“சிவராமையர் டேஞ்ஜரஸ்” என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது.

என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்துவிட்டார். ஷயத்தின் சின்னம் கொஞ்சங் கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள்.

ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் பிரமை தட்டிப்போய் உட்கார்ந்திருந்தாள்.

எங்கள் எல்லோருடைய மனத்திலும் ஒரு பெருத்த போர் நடந்து கொண்டிருந்தது. “இருக்காது!”, “ஏன் இருக்கக்கூடாது? இருக்கும்!” என்று இரண்டு விதமாக மனத்தில் எண்ணங்கள் உதித்துக் கொண்டிருந்தன. இருக்கும்! என்ற கட்சி மூலை முடுக்குகளிலெல்லாம் ஓடிப்பாய்ந்து தனக்குப் பலம் தேட ஆரம்பித்தது.

தந்தியில் கண்டிருந்ததைத் திரும்பத் திரும்பப் படித்தோம். அதில் ஒன்றும் பிசகு இருக்கவே முடியாது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து தான் வந்திருந்தது; சந்தேகமில்லை. காலையில் அடித்திருக்கிறார்கள்; குஞ்சம்மாள் பேருக்குத்தான். தவறு எப்படியிருக்க முடியும்?

ஆனால், இவ்வளவு சிக்கிரத்தில் என்ன நேர்ந்திருக்க முடியும்? மூன்று நாட்களுக்கு முன்புதானே கடிதம் வந்தது? ஏதாவது உடம்பு செளகரியமில்லாமல் இருந்தால் அதில் எழுதாமல் இருப்பாரோ?

என் தமக்கையும், நானும் சாயந்திரம் ரயிலில் சென்னைக்குப் புறப்பட்டோம். அதுதான் அன்று கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப் போகும் முதல் வண்டி. புறப்படுவதற்குமுன் நல்ல வேளை பார்த்துப் பரஸ்தானம் இருந்தோம். சாஸ்திரிகள், “ஒண்ணும் இருக்காது. கிரகம் கொஞ்சம் பீடிக்கும்; அவ்வளவு தான்!” என்றார். அம்மா, தெய்வங்களுக்கெல்லாம், ஞாபகமாக ஒன்றைக்கூட விடாமல், பிரார்த்தனை செய்துகொண்டு மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்துவைத்தாள். குஞ்சம்மாளுக்கு மஞ்சள் கிழங்கு, குங்குமம், புஷ்பம், வெற்றிலைபாக்கு, சேமதண்டு எல்லாம் மறந்து போகாமல் மடி நிறையக் கட்டிக் கொடுத்தாள். பசியுடன் போகக்கூடாது என்று புறப்படும்பொழுது கட்டாயப்படுத்தி இருவரையும் சாப்பிடச் செய்தாள்.

குஞ்சம்மாள் இயந்திரம்போலச் சொன்னதையெல்லாம் செய்தாள்; “சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணு” என்றதும் போய் நமஸ்காரம் செய்தாள்.

அவள் கதிகலங்கிப் போயிருந்தாள் என்பது அவன் பேச்சற்றுப் போயிருந்ததிலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அவளுடைய கலகலப்பு முதல் தடவையாக அன்று எங்கோ அடங்கிவிட்டது.

அம்மா வாசலில் போய்ச் சகுனம் பார்த்தாள். திவ்வியமான சகுனம்; காவேரியிலிருந்து அடுத்தவீட்டுச் சுந்தரி ஜலம் எடுத்துக்கொண்டு எதிரே வந்தாள்.

“ஒண்ணும். இருக்காது! நமக்கேன் அப்படியெல்லாம் வரது? நாம் ஒத்தருக்கு ஒண்ணும் கெடுதல் எண்ணல்லே” என்றெல்லாம் அம்மா அடிக்கடி தன்னையும், பிறரையும் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

ரயில் ஏறுகிறபொழுது மணி சுமார் எட்டு இருக்கும். இரவு பூராவும் போயாக வேண்டுமே என்று துடித்தோம். போய் இறங்குவதற்குமுன் செய்வதற்கு ஒன்றுமில்லை யென்றதால், கொஞ்சங் கொஞ்சமாகத் துடிப்பும் கலக்கமுங்கூட மட்டுப்பட்டன. இரண்டு ஜன்னல்களின் அருகில் நேர் எதிராக இரண்டு பெஞ்சுகளில் உட்கார்ந்தோம்.

“நீ புறப்படுகிறபோது ஒன்றுமே இல்லையே, அக்கா?” என்றேன், ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டுமென்று.

"ஒண்ணும் இல்லையே! இருந்தால் புறப்பட்டு வருவேனா?” என்று அவள் ஏக்கம் நிறைந்த குரலில் பதில் சொன்னாள்.

“அதற்குள் திடீரென்று ஒன்றும் ஏற்படுவதற்குக் காரணமே இல்லையே!”

எது எப்படியானாலும், மனத்தைச் சில மணி நேரமாவது ஏமாற்றித் தத்தளிப்பைக் கொஞ்சம் குறைத் துக் கொள்ளலாமென்று நினைத்ததுபோலப் பேச்சு வெளிவந்தது.

“நான் இந்த நோன்பிற்காக இங்கே தாமதம் செய்யாமல் போயிருக்காமல் போனேன்!”

‘ஒருவேளை, அக்கா, நோன்பிற்காக நீ இங்கே இருந்துவிட்டதுதான் அத்திம்பேருக்குக் கோபமோ? அவர் உடனே வரும்படியாக எழுதியிருந்தார். நாம் ஒரு வாரத்தில் வருவதாகப் பதில் எழுதினோம். அதற்காகத்தான் இப்படித் தந்தி அடித்துவிட்டாரோ?”

“ஆஸ்பத்திரியிலேயிருந்து வந்திருக்கே?”

“ஆஸ்பத்திரிப் பேரை வைத்து அத்திம்பேரே அடிக்கக்கூடாதா?”

“அப்படி அடிக்க முடியுமோ?" குஞ்சம்மாள் குரலில் ஆவல் இருந்தது.

“ஏன் முடியாது? தந்தியாபீஸில்.”

“ஒருவேளை அப்படியிருக்குமோ?” என்று கேட்ட பொழு குஞ்சம்மாளின் முகம் கொஞ்சம் மலர்ந்துவிட்டது.

“அப்படித்தான் இருக்கவேண்டும். இப்படித் திடீரென்று ஒன்றும் ஏற்படக் காரணமே இல்லை. முந்தாநாள் தானே கடிதாசு வந்தது!”

“ஆமாம்! அதில் ஒடம்பைப் பத்தி ஒண்ணுமே இல்லையே?” -

“தந்தி யடித்தால் நாம் உடனே புறப்பட்டு வருவோம் என்றுதான் அடித்திருக்கிறார். வீட்டிலிருந்து அடித்தால் கூட அவ்வளவு தாக்காது என்று ஆஸ்பத்திரிப் பேரை வைத்து அடித்திருக்கிறார்.”

“அப்படி அடிக்க முடியுமாடா, அம்பி! அப்படியிருக்குமா?” என்று மறுபடியும் குஞ்சம்மாள் சந்தேகத்துடன் கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்டபொழுது, முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தால்கூடச் சொல்ல மனம் வந்திருக்குமோ, என்னவோ?

“நீ வேண்டுமானால் பாரேன்! எழும்பூர் ஸ்டேஷனில் வந்து இருக்கப் போகிறார்” என்றேன்.

மனத்தில், ஆழத்தில் பீதி அதுபாட்டிற்குப் புழுப்போலத் துளைத்துக்கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம். கொஞ்சநேரத்திற்கு ஒருதரம் அந்தத் திகில் மேல்மட்டத்திற்கு வந்து தலையெடுக்கும்; உடம்பு பதறும்; நெஞ்சு உலரும்; அடிவயிறு கலங்கும்; முகம் விகாரம் அடையும். மறுபடியும் மெதுவாகச் சமாதானத்தின் பலம் அதிகமாகும்; பயத்தைக் கீழே அமுக்கிவிடும்.

சுகமோ துக்கமோ, எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபாவத்தில் இதுவும் ஓர் அத்தாட்சியோ?

ரயில்வண்டி வெறிபிடித்ததுபோல் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தது; எங்கேயோ சென்னையில் விடியப்போகும் ஒரு காலையை நோக்கிக் கனவேகமாகப் போய்க் கொண்டிருந்ததுபோல் இருந்தது.

துக்கத்தில் தலையெடுக்கும் தைரியம் போலத் தொலை இருளில் அந்த ஒளித்தொடர் விரைந்து சென்று கொண்டிருந்தது. சென்னை போய்ச் சேரும்பொழுது, எங்கள் கவலையும் அந்த இருளைப்போலப் பின்தங்கிவிடாதா? நிம்மதி, காலையைப்போல அங்கே எங்களை வந்தடையாதா? இருள், நிச்சயம் கூட வராது! சென்னையில் காலைதான்! இவ்வாறெல்லாம் பேதைமனம் தன்னைத் தேற்றிக்கொண்டே இருந்தது.

குஞ்சம்மாள் மூட்டையிலிருந்து வெற்றிலை பாக்கை எடுத்து எனக்குக் கொடுத்துத் தானும் போட்டுக் கொண்டாள்.

எங்களவர்களுக்குள்ளேயே குஞ்சம்மாள் அதிக அழகு என்று பெயர். நல்ல சிவப்பு; ஒற்றை நாடித் தேகம்; அவளுக்குத் தெருவிலேயே ஒரு செல்வாக்கு உண்டு.

அன்றென்னவோ, இன்னும் அதிகமாக அவள் ஒளிர்ந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் என்றுமே இல்லாத ஓர் ஏக்கம் அன்று முதல்முதலாகத் தென்பட்டதாலோ என்னவோ, அவன் அழகு மிளிர்ந்து தோன்றினாள்.

குஞ்சம்மாளுக்குப் புஷ்பம் என்றால் பிராணன். யார் கேலி செய்தாலும் அலட்சியம் செய்யமாட்டாள். தலையை மிஞ்சிப் பூ வைத்துக்கொள்ளுவாள்; ஆனால் அன்று அவள் தலையில் வைத்துக்கொண்டிருந்த பூவைப்போல, வேறு என்றும் எதுவும் சோபித்ததில்லை என்று என் கண்களுக்குப்பட்டது. வெற்றிலைக் காவி அவளுடைய உதடுகளில் அன்றுதான் அவ்வளவு சிவப்பாகப் பிடித்திருந்தது போலிருந்தது.

சோர்வில்தான் செளந்தரியம் பரிமளிக்குமோ? அல்லது கடைசியாக, அணைவதற்கு முன்னால், விளக்கு...? இல்லை! இல்லை!

குஞ்சம்மாள் அன்றென்னவோ அப்படியிருந்தாள்.

வெற்றிலையைப் பாதி மென்றுகொண்டே, “அம்பி, ஓங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?” என்றாள் குஞ்சம்மாள்.

அவளுடைய கண்களில் ஜலம் மள மள வென்று பெருகிற்று.

“என்னிக்கும் பிடிவாதம், என்னிக்கும் சண்டை; நான் அழாத நாள் உண்டா? என் வாழ்வே அழுகையாக...” என்று உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்தாள் சட்டென்று நிறுத்திக்கொண்டாள். “எதிலாவது நான் சொன்ன பேச்சைக் கேட்டதுண்டா? எப்படியோ ஆயுசுடன் இருந்தாற் போதுமென்று தோன்றிவிட்டது போனதடவை உடம்புக்கு வந்தபோது...”

இருவரும் வெகுநேரம் மெளனமாக இருந்தோம். ஆனால் மனசுமட்டும் மெளனமாக இருக்கவில்லை.

நல்ல நிசிவேளை, வண்டியில் ஜனங்கள் உட்கார்ந்து கொண்டும், படுத்துக்கொண்டும் அநேக தினுசாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வண்டி ஒரு சின்ன ஸ்டேஷனில் நின்றதும், சிலர் எழுந்து இறங்கிப் போவார்கள். மெளனமாகப் பிசாசுகள் போல, அப்பொழுதுதான் தூங்கி எழுந்த சிலர், “இதென்ன ஸ்டேஷன்?” என்று தலையை வெளியே நீட்டிக் கேட்பார்கள். போர்ட்டர் ஒருவன் ஏதாவது ஒரு ஸ்டேஷன் பெயரை அரைகுறையாகத் தூங்கி விழுந்துகொண்டே சொல்லுவான். மறுபடியும் வண்டி பூரான் மாதிரி ஓட ஆரம்பிக்கும்.

சுமார் ஒரு மணிக்கு வண்டி விழுப்புரம் ஸ்டேஷனுக்குள் ஆர்ப்பாட்டத்துடன் போய் நின்றது. அதுவரையில் வண்டியில் அமைதியும் நிசப்தமும் இருந்தன. அந்த ஸ்டேஷனில் கூட்டமும், கூக்குரலும் அதிகமாயின; அதுவரையில் காலியாகவே வந்த எங்கள் பலகைகளில் சாமான்கள் நிறைந்தன. நகரத்தார் இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருத்தி, பெண்குழந்தையும் பெட்டியுமாக என் தமக்கையின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். அவள் அணிந்திருந்த முதல்தரமான வைரங்களுடன் அவள்முகமும் ஜொலித்துக்கொண்டு இருந்தது. ஏதோ ஓர் உள்ளப் பூரிப்பில் அவள் தன்னையே மறந்து தன் குழந்தையுடன் கொஞ்சினாள்.

வண்டி புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம், என் தமக்கையின் பக்கம் தன் புன்னகை பூத்த முகத்தைத் திருப்பி, “எங்கிட்டுப் போறிய அம்மா?” என்று கேட்டாள்.

என் தமக்கை சுருக்கமாக, “பட்டணம்” என்றாள். “நானும் அங்கேதாம்மா வாரேன்!” என்று ஆரம்பித்து, அந்தப் பெண் வரிசையாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். பிறகு தன் பக்கத்திலிருந்த ஓலைப் பெட்டியிலிருந்து கொஞ்சம் மல்லிகைப்பூ எடுத்துக் குஞ்சம்மாளுக்குக் கொடுத்தாள். என் தமக்கை மெய்சிலிர்த்துப் போனாள். வெகு ஆவலுடன் அந்தப் பூவை வாங்கி ஜாக்கிரதையாகத் தலையில் வைத்துக்கொண்டாள். அம்பாளே அந்த உருவத்தில் வந்து தனக்குப் பூவைக் கொடுத்து, “கவலைப்படாதே! உன் பூவிற்கு ஒருநாளும் குறைவில்லை!” என்று சொன்னது போல எண்ணினாள்.

அதுவரையில் அவளுக்கு ஒவ்வொரு வார்த்தை பதில் சொல்லிக்கொண்டு வந்தவள், உடனே இளகி அவளிடம் சங்கதி முழுதும் சொன்னாள்.

“மகாலட்சுமி போலே இருக்கீங்கம்மா! ஒங்களுக்கு ஒண்ணும் கொறவு வராது!” என்று அவள் சொன்னதைத் தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டுவிட்டாள் குஞ்சம்மாள். அந்த ஆறுதலில் கொஞ்சநேரம் அவளுடன் கவலை மறந்து பேசிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று ஞாபகம் வந்துவிட்டது. எதோ பெருத்த குற்றம் செய்தவன் போலத் திகிலடைந்தாள், ‘ஐயையோ! பைத்தியம்போல் இப்படிச் சிரிச்சுண்டு பேசிண்டிருக்கேனே!’ என்று எண்ணினவள் போல அவள் கலவரமடைந்தது நன்றாகத் தெரிந்தது. வண்டிபோன வேகத்தில் விர்ரென்று அடித்த காற்றிலும் அவளுடைய முகத்தில் வியர்வை தென்பட்டது.

ஆனால் எவ்வளவு நேரந்தான். கவலைப்பட முடியும்? கவலையால் ஏற்பட்ட அசதியிலேயே எங்களை அறியாமல் கண்ணயர்ந்தோம். துக்கத்தில் நித்திரையும் நினைவு மறதியும் சேர்ந்துதான் வாழ்க்கைக்கு ஒரு போதையாகித் தாபத்தைத் தணிக்கின்றனவோ?

வண்டி செங்கற்பட்டை நெருங்குகிற சமயம் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தோம். கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்தது. வண்டி ஏதோ ஒரு கிராமத்தைச் கடந்து போய்க் கொண்டிருந்த பொழுது கோழி கூவியது கூடக் காதில் வந்துபட்டது.

‘அப்பா! விடியுமா?’ என்கிற நினைப்பு ஒரு பக்கம்.

‘ஐயோ! விடிகிறதே! இன்னிக்கி என்ன வச்சிருக்கோ !’ என்ற நினைப்பு மற்றொரு பக்கம்.
இரவின் இருட்டு அளித்திருந்த ஆறுதலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்டிய வெளிச்சம் பறிக்க வருவது போல் இருந்தது.
எங்கேயோ, கண்காணாத தூரத்தில் உருவடைந்த ஒரு காட்சியில் ஈடுபட்டவளாய் நிலைகுத்திய பார்வையுடன் குஞ்சம்மாள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.
“செங்கற்பட்டில் பல் தேய்த்துக் கொண்டு காபி சாப்பிடுவோமா?” என்று கேட்டான்.
“எல்லாம் பட்டணத்தில் தான்!” என்று சொல்லிவிட்டாள் குஞ்சம்மாள், பக்கத்தில் நகரத்தார் பெண் கவலையற்றுத் துாங்கிக்கொண்டிருந்தாள்.
"இதோ ஆயிற்று, அதோ ஆயிற்று” என்று சொல்வது போல வண்டி தாவிப் பறந்து கொண்டிருந்தது.
ஆனால் எங்களுக்கென்னவோ பட்டணம் நெருங்க நெருங்க, வேண்டுமேன்றே வண்டி ஊர்வது போல இருந்தது. எழும்பூர் வந்தது கடைசியாக.

ஸ்டேஷனில் யாரும் இல்லை; அதாவது எங்கள் அத்திம்பேர் இல்லை. எல்லோரும் இருந்தார்கள். ‘ஆனால் அவர் ஸ்டேஷனுக்கு எதற்காக வர வேண்டும்? அங்கே எதிர்பார்ப்பது சரியில்லைதான்’ என்று அப்பொழுது தோன்றிற்று.

வீட்டுக்குப் போனோம், வீடு பூட்டியிருந்தது.

உடம்பு சௌகரியமில்லைதான்! சந்தேகமில்லை, இப்பொழுது!

ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போனோம். அரைமணிநேரம் துடித்த பிறகு குமாஸ்தா வந்தார்.

“நீங்கள் கும்பகோணமா?” என்றார். "ஆமாம்” என்றேன்.

“நோயாளி- நேற்றிரவு- இறந்துபோய்விட்டார்' என்று குமாஸ்தா சாவதானமாகச் சொன்னார்,

“இறந்து.? அதெப்படி? அதற்குள்ளா?” அப்பொழுதும் சந்தேகமும் அவநம்பிக்கையும் விடவில்லை .

“சிவராமையர்?”

“ஆமாம், ஸார்!”

“ஒரு வேளை”

“சற்று இருங்கள். பிரேதத்தைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் குமாஸ்தா தம் ஜோலியைக் கவனிக்கப் போனார்.

கொஞ்சநேரம் கழித்துப் பிரேதத்தைப் பெற்றுக்கொண்டோம்.

அப்பொழுது, அதைப் பார்த்தவுடன், நிச்சயமாயிற்று!. ஒருவழியாக மனத்திலிருந்த பயம் தீர்ந்தது; திகில் தீர்ந்தது.

பிறகு?

விடிந்துவிட்டது!