வரலாற்றுக் காப்பியம்/குமரிக்கண்டம்

விக்கிமூலம் இலிருந்து

குமரிக்கண்டம்


பூசம் முதலாக புளர்ப் பூசம் ஈறாக
எண்ணுகின்ற இருபத்தேழு நட்சத்திரங்களும்
சூரிய சந்திரரை உள்ளிட்டு சனிவரை
சொல்லுகின்ற ஏழு கோள்களும்
சுழன்று கொண்டு இருப்பதே இந்த பேரண்டம்
சூரியனிலிருந்து புறப்படும் சுடரொளி
பூமியை வந்து தொட ஐநூற்று வினாடி
வினாடிக்கு அதன்வேகம் லட்சத்து எண்பத்து
ஆறாயிரம் மைல் என்று அறுதியிட்டார்
பூமிக்கும் சூரியனுக்கும் இடையிட்ட தூரமோ
கோடியில் ஒன்பதும் லட்சத்தில் முப்பதும்
சுருதிகள் சொல்லுகின்ற சுழலும் கணக்கிற்கு
சூரிய சந்திர கிரகணமே சான்று
புவிக்குரிய அச்சின் மேலுச்சியை
வானியலார் மேருஎன்று வழங்கினார்
நிலவியலார் வடதுருவம் என்று சொன்னார்
புராணகாரர் இமயத்தை மேருவென்று எழுதிக்கொண்டார்
சுற்றுகின்ற வேகத்தில் பம்பரத்தின் மேல் உச்சி
தலை சாய்ந்து வரும் அதுபோலே
பூமியும் சுழன்று வரும் வேகத்தில்
தலை உச்சி கொம்பு சுற்றி வரும்
அதனையே கதிபேத மென்று கணக்கிடுவார்
கதிரவன் இழுத்துப் பிடிக்கும் ஆற்றலினால்
புவியோட்டத்தின் தூரமும் மாறுபடும்

கோடையும் மழையும் குளிரும் பனியும்
மாறிவரும் பருவமும் வேறுபடும்
செங்கதிரை வலமாக சுற்றுகின்ற
நிலமகளும் தடம்புரளும் நிலைமையினால்
அலை கடலும் இடம் பெயரும் பிரளயம் என்பார்
இந்தப் பெரிய இயற்கைக்கும் மேலாக
வானத்து கொள்ளி ஒன்று வீழ்ந்தது பூமியிலே
ஆஸ்திரேலிய பெருந்தீவு ஆயிற்று
அந்தப் பேர் அதிர்ச்சிக்கு ஆளானது லெமூரியா
மலை தகர்ந்தது கடலலை சூழ்ந்தது
நெடு நிலம் பெயர்ந்து சிறுசிறு தீவானது.
ஆக லெமூரியப் பெருநிலம் சிதறுண்டு
மாய்ந்தது போக மீந்ததே குமரிக்கண்டம்
சாத்திரக்காரர் சரித்திரக்காரர் கணக்குப்படி
மூன்றாவது ஊழி முடிந்தது முடிந்தது
வானத்துக் கொள்ளி வந்து வீழ்ந்த வரலாற்றை
மேற்புலத்தார் லோத்தின் நாளில் ஒரு கொடிய
நெருப்பு மழை பொழிந்து உலகை எரித்ததென்றார்
தென்புலத்தில் அன்றிருந்த மன்னவனே ஆதிமனு
சத்திய விரதனென்று சாற்றுவதும் அவனையே
வைகைக் கரையில் தவமிருந்து அரசிருந்தான்
வைகையைக் கிருதமாலை என்று வந்தவர் சொன்னார்
மீன்வடிவில் ஒருதோணி கொண்டு
பெரிய வெள்ளத்துக்குப் பிழைத்துச் சென்றதால்
மீனவன் என்றும் அவனைச் சொன்னார்

அந்த மனுவுக்கு ஒரு மகனிருந்தான்
அவன்பேர் இயமன் மகளிருந்தாள் அவள் பேர்-இழை
இயற்கையின் சீற்றத்தில் இழந்தபகுதி
இயமன் பங்கு ஆதலின்
அழிவுக்கும் சாவுக்கும் அவன்பேர் ஆனான்
எஞ்சியபங்கு இழையின் பங்கு
குமரிக்கு உரியதால் குமரிக்கண்டம் என்றார்
பெண்வழியே மண்ணுரிமை கொண்டது அவள் மரபு
தாயாதி தாயபாகம் என்ற வழக்காறும்
மருமக்கள் தாயமென்ற வழிமுறையும்
இழையின் பேரால் ஏற்பட்டது
குமரிஆற்று நாகரிகச் சுவடு அதுவே
குமரியாறும் கோடும் அழிந்தபின்
கொல்லங் கரைக்கு குடிபெயர்ந்தார் ஆயினும்
மருமக்கள் தாயத்தை மறக்கவில்லை
அதங்கோட்டு அரசரும் கொச்சிக் கோமக்களும்
கொண்டிருந்த வழிமுறை உரிமை அதுவே.