வரலாற்றுக் காப்பியம்/நெற்றிக்கண்

விக்கிமூலம் இலிருந்து

நெற்றிக்கண்


பஃறுளி ஆற்று பழய லெமூரியனை
கல்தோன்றி மண்ணும் தோன்று முன்னே
பிறந்ததொரு பழங்குடி என்று சொன்னார்
இமயத்தைக் கல்லென்றும் இந்து வெளியை மண்என்றும்
சொல்லுவது நம் இலக்கிய மரபு
பண்ணுறத் தமிழாய்ந்த அந்த பழய மகன்
கண்ணுதலில் பெற்றிருந்த கதையுமுண்டு
முன்னை லெமூரியன் கொண்டிருந்த உடலமைப்பில்
இருபுருவத்துக்கும் இடையில் சிறிது மேடாக
வாதுமை வடிவில் புடைத்தெழுந்த நுண் நரம்பு
அகத்துக்கண் ஆனது நெற்றிக்கண் என்றார்
ஐந்து பெரிய அறிவும் தாண்டி
ஆறாவது ஆன மனத்துக்கும் மேலாக
ஒளிகொண்டு ஞானக் கண்ணாக செயற்பட்டது
அ.இ. என்னும் புறச்சுட்டு இரண்டும்
அருகிலும் தொலைவிலும் உள்ளதை அறிவுறுத்தும்
'உ' என்னும் அகச்சுட்டு கண்கொண்டு காணாததை
மனத்துக் கண் கொண்டு காண்பதையும் சுட்டும்
அவ்வாறு தொழிற்பட்ட நெற்றிமேடே நெற்றிக்கண்
புறத்திரண்டு கண்ணோடும் நெற்றிமேட்டை
மூன்றாவதாக எண்ணினார் முக்கண் என்றார்
முன்னை இவரின் பழந்தெய் வங்களூக்கு
முகங்கள் எத்துணை வைத்தாலும்
மூன்று கண்ணும் வைத்தார்.

இந்த மண்ணின் தெங்குக்கும் மூன்று கண்ணுண்டு
அவர் அறிவை வகைப்படுத்திய நுட்பம் பெரிது
ஒன்றாம் அறிவென்பது உற்றறிவது ஆகும்
புல்பூண்டு மரஞ்செடி அந்த வகைப் படும்
சுவைக்கத் தெரிவது இரண்டாம் அறிவு
நந்தும் சங்கும் அந்தவகைப்படும்
நுகரத் தெரிவது மூன்றாம் அறிவு
எறும்புக்கும் சிதலுக்கும் இத்திறன் உண்டு
காணுகின்ற திறனே நான்காம் அறிவு
நண்டுக்கும் தும்பிக்கும் கண்கள் பெரிது
கேட்கின்ற திறனே ஐந்தாவது அறிவு
பாம்பும் பறவையும் மிருகமும் இனப்படும்
மனத்தை ஆறாவது அறிவென்றார் ஆன்றோர்
புலன்வழிச் சென்று பொருளியல் உணர்ந்து
சிந்தனைப் படுவதே அதற்குரிய சிறப்பு
பகுத்தறிவு என்று பகர்ந்தனர் இன்று
புறத்திருக்கும் ஊனக்கண் இரண்டுமே உறங்கும்போது
உறங்காது செயற்படும் ஞானக்கண்
யோகத்தால் அதுவளரும் சுழிமுனை என்றார்
காலவெள்ளத்தில் உடலியல் மாற்றத்தில்
லெமூரியன் நெற்றி மேடிழந்தான்
நெற்றித்திலகமாக நிகழ்த்துகின்றர் இன்றும்
முக்கண்டி காடுவெட்டி என்னும்
திரிலோசனப் பல்லவனுக்கு மூன்றுகண்
காவிரிக்கு கரை எடுக்க வர மறுத்தான்
என்பதால் கரிகாலன் அவன் மூன்றாங்கண்ணைப்
பறித்தானென்று பகரும் கலிங்கத்துப் பரணி.