மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/சிக்கனமாக இருப்பது எப்படி?

விக்கிமூலம் இலிருந்து
60. சிக்கனமாக இருப்பது எப்படி?

தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்து, அவனைத் தனிக்குடித்தனம் நடத்துமாறு சொல்லி, வருமானத்துக்கான வழியையும் அவனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார் தந்தை

வாரம் ஒரு முறை தந்தை வந்து மகனை பார்த்துச் செல்வது வழக்கம்.

ஒரு முறை தந்தை வந்திருந்தார். இரவு நேரம் தந்தையும் மகனும் பேசிக்கொண்டு இருந்தனர்.

“அப்பா! நீங்கள் எப்படி பணக்காரராக ஆனீர்கள்? என்னுடைய வருமானத்தோடு உங்களுடைய உதவி இருந்தும், எனக்கு பற்றாக் குறையாகவே இருக்கிறதே!” என்று கேட்டான் மகன்.

“மகனே எதுவும் சுலபம் அல்ல! வாழ்க்கையில் மிகவும் கவனம் தேவை. தேவையற்ற செலவைச் செய்யக் கூடாது. வீட்டில் வெளிச்சத்துக்கு ஒரு விளக்கே போதும் என்றால், மற்றொரு விளக்கை எதற்காக எரிய விட வேண்டும்?” என்று கேட்டார் தந்தை.

உடனே மகன் எழுந்து தேவை இல்லாமல் எரிந்து கொண்டிருந்த மற்றொரு விளக்கை அணைத்தான்.

தந்தை எப்படி சிக்கனமாக இருந்து பணக்காரர் ஆனார் என்பதையும் புரிந்து கொண்டான்.

★★★★★