வேங்கடம் முதல் குமரி வரை 4/023-032

விக்கிமூலம் இலிருந்து
23. திருநெல்வேலி உறை செல்வர்

ஒரு கவிஞன்; கவிஞன் என்றால்தான் வறுமையும் உடன்பிறந்து வளருமே. அந்த வறுமை காரணமாக வாடுகிறான், வருந்துகிறான். கவிஞனோ அந்தத் திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலிக்காரள். நல்ல தெய்வபக்தி உடையவன். ஒவ்வொருநாளும் அவன் கோயில் சென்று இறைவனை வழிபட மறவாதவன். கோயிலுக்குச் செல்லும் பொழுதெல்லாம் வேணுவனநாதர், நெல்லையப்பரிடம் தன் குறைகளைச் சொல்கிறான். தன் வறுமையை நீக்க வேண்டுகிறாள். ஆனால் நெல்லையப்பரோ இவனது குறைகளைத் தீர்க்கிறவராகக் காணோம். ஏன்? காது கொடுத்துத்தான் கேட்கிறாரா என்பதே சந்தேகம். இப்படிக் கழிகிறது பல நாட்கள். இந்தக் கவிஞன் ஒருநாள் அன்னை காந்திமதியின் சந்நிதிக்கு வருகிறான், அம்மன் கோயில் வாயில் வழி நுழைந்தவன் ஊஞ்சல் மண்டபம், மணி மண்டபம், நடு மண்டபம் எல்லாம் கடந்து கருவறைப் பக்கமே வந்து சேருகிறான். அங்கே நிற்கும் அன்னையைப் பார்க்கிறான். அவளோ, தலையில் வைர மணிமுடி, ராக்காடி எல்லாம் அணிந்திருக்கிறாள். மூக்குப் பொட்டு, மூக்குத்தி, புல்லாக்கு எல்லாம் அழகு செய்கின்றன; மார்பில் நவமணி வடம் புரள்கிறது. அடிகளில் மணிச் சிலம்பு ஒலிக்கிறது. வலக்கையை உயர்த்தி அதில் கிளியுடன் கூடிய செண்டு ஒன்று எந்தி, இடக்கையைத் தாழ்த்தி நிற்கும் அந்த வடிவழகியை ஒரு புதுமணப் பெண்ணாகவே காண்கிறான் கவிஞன். அப்போது தோன்றுகிறது கவிஞனுக்கு ஏன், இந்த அன்னையின் மூலமாகவே தனது விண்ணப்பத்தை அந்த வேணுவன நாதரிடம் சமர்ப்பிக்கலாகாது என்று. அப்படி அவள் தனக்காகத் தன் கணவரிடம் பரிந்து பேச நல்ல வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பதையுமே அறிகிறான். இந்த எண்ணத்திலே உருவாசிறது பாட்டு

ஆய் முத்தப் பந்தரில் மெல்லனை
மீது உன் அருகிருந்து
'நீ முத்தம் தா' என்று அவர் கொஞ்சும்
வேளையில், நித்தநித்தம்
வேய்முத்த ரோடுஎன் குறைகள்
எல்லாம், மெல்லமெல்லச் சொன்னால்
வாய்முத்தம் சிந்தி விடுமோ?
நெல்வேலி வடிவு அன்னையே!

என்று அன்னையிடமே கேட்கிறான். இவ்வளவு ஆத்திரத்தோடு கவிஞன் கேட்டபின் அன்னை சும்மா இருப்பாளா? சிபாரிசு பலமாகத்தான் செய்திருப்பாள். நெல்லையப்பரும் மனைலி உத்தரவுக்குக் கீழ்ப்படியாமலா இருந்திருப்பார்? கவிஞனுக்கு விடிவு காலமும் காலதாமதம் இல்லாமலே வந்திருக்கும். உண்மையிலேயே இப்படியே நடந்தது என்பது அல்ல பொருள். இறைவனையும் இறைவியையும் மனம் ஒத்த காதலர்களாகக் கற்பனை பண்ணி இப்படிக் கவிஞன் பாடுவதிலே ஒரு சுவை கண்டிருக்கிறான். இந்த இறைவனாம் நெல்லையப்பரும் இறைவியாம் காந்திமதி அம்மையும் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் திருநெல்வேலி. அத்தலத்துக்கே செல்கின்றோம் நாம் இன்று.

திருநெல்வேலி தென் பாண்டி நாட்டின் தென் பகுதியிலே உள்ள ஒரு பழம் பதி. 'பொன் திணிந்த புனல் பெருகும் பொருதை,' நதிக்கரையிலே உள்ள ஒரு நகரம் திருநெல்வேலி. டவுன் ஸ்டேஷனில் இறங்கினால் வடக்கு நோக்கி நாலு பர்லாங்கு வரவேணும். அப்படி வந்தால் கோயில் வாயில் வந்து சேரலாம் இந்தக் கோயிலிலே ஒரு சம்பிரதாயம், கோயிலுக்கு வருபவர் எல்லாம் முதல் முதல் சென்று தரிசிப்பது காந்திமதி அம்மையையே. ஆம்! மதுரையில் மலயத்துவஜன் மகளான மீனாட்சிக்கு எத்தனை பிராதான்யம் அந்தக் கோயிலில் உண்டோ , அத்தனை இங்கு காந்திமதிக்கும் உண்டு. நெல்வேலி முழுதும் வீட்டுக்கு ஒரு காந்திமதி அல்லது காந்திமதி நாதன் இருப்பார்.

காந்திமதியம்மன் கோயில் வாயில் வழியாகவே நாமும் நுழையலாம். உள்ளே சென்றதும் சந்நிதிக்கு எதிரில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தைக் காணலாம். அதற்கு வடபுறமே பொற்றாமரைக் குளம். மதுரையைப் போல் பெரிதல்ல. ஆயினும் அழகாக இருக்கும். அங்கிருந்தே கோபுர தரிசனம் செய்யலாம். அதன்பின் மகாமண்டபம் எல்லாம் கடந்து அர்த்த மண்டபம் வந்து, அங்கிருந்து காந்திமதியம்மையைக் கண்டு வணங்கலாம். முன்னரே கூறியது போல் அம்மை நின்ற திருக்கோலத்தில் புது மணப் பெண்ணாகவே காட்சி தருவாள். இந்தக் காந்திமதியம்மையின் திருக்கல்யாண மகோத்சவம் கண்கொள்ளாக் காட்சி. கதை நமக்குத் தெரிந்த கதைதான்.

அன்று கைலையில் இறைவன் இமவான் மகளான உமையைத் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானிக்கிறான், அந்தத் திருமணக் கோலங்காண மக்கள் தேவர் நாகர் எல்லோருமே கைலைக்குச் செல்கிறார்கள். அதனால் பாரம் தாங்கமாட்டாமல் தென்கோடு உயர்ந்து வடகோடு தாழ்கிறது. நாட்டைச் சமன் செய்ய இறைவன் அந்தக் குள்ள அகத்தியரையே தேர்ந்தெடுக்கிறான். அவரைத் தென்திசை செல்ல வேண்டுகிறான். அவரோ, 'நான் மட்டும் திருமணக் கோலம் காண வேண்டாமோ?' என்று சிணுங்குகிறார். அவரிடம் இறைவன், தாமே தென் திசை வந்து திருமணக் கோலத்தில் காட்சி கொடுப்பதாக வாக்களிக்கிறார். அதன் பின்னேதான் அகத்தியர் தென்திசை வருகிறார். பொதிகை வந்து தங்குகிறார், தென்திசையும் தாழ்ந்து நாடு சமநிலை எய்து கிறது. மணம் முடித்த புதிய தம்பதிகளாம் அந்த அமர காதலர்களிடையே ஒரு விளையாட்டு. அன்னை, அத்தனின் கண்களைப் பொத்தி, 'யார் பொத்தியது?' என்று கேட்கிறாள். அண்ணலின் கண்கள் பொத்தப் பெற்ற காரணத்தால் அகில உலகமுமே இருளில் ஆழ்ந்து விடுகிறது. இந்தப் பழி அகல அன்னை கம்பை நதிக் கரையில் வந்து தவம் புரிகிறாள். அவள் தவத்துக்கு இரங்கி இறைவன் அங்கு எழுந்தருளிக் காட்சி தருகிறான். மணமும் செய்து கொண்டு அந்தத் திருமணக் கோலத்திலேயே அகத்தியர் முன்பு வந்து நின்று விடுகிறான். ஆனால் அந்தத் திருமண விழாவைத் திருநெல்வேலி அன்பர்கள் அதிலும் பெண் மக்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? அதைச் சொல்கிறார் ஒரு கவிஞர்.

வேணு வனத்து இறைவர் புது
மணம் விரும்பி, விளையாட்டாய்
காணும் உமைப்பெயர் பொருந்தும்
காந்திமதிதனைக் கடிந்து காட்டுக்கு ஓட்டி
தானும் அவள் பின் சென்று நயம் படித்து
பலர் சிரிக்க நலிவே! உற்றால்
வாள்நுதலும் அவர்பின்னே வருவதுவும்
வியப்பாமோ? வசை ஒன்று இன்றி!

கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்ற தலைவியின் பின் சென்று, கெஞ்சிக் கூத்தாடி அவளைத் தம் வீட்டுக்குத் திரும்பவும் அழைத்து வருகிறார் நெல்லையப்பர் என்பது பாமரர் காணும் கதை. ஆம், இந்தக் கதையில் கூடப் பெண்மையின் வெற்றியே மேலோங்கி நிற்கிறது. இப்படித்தான் காந்திமதியாம் வடிவன்ளை முக்கியத்துவம் பெற்று விடுகிறாள். அவள் கருவறையில் கையில் செண்டேந்திக் கொண்டு நின்றால், செப்புச் சிலை வடிவில் ஞான முத்திரையோடு நிற்பாள். உயிர்களுக்கெல்லாம் அருள் புரியும் கோலம் அல்லவா இந்த வடிவுன்னையின் வடிவம்!

இந்த வடிவன்னையை மணந்தவரே நெல்லையப்பர் என்னும் வேணுவனநாதர். இவரது சந்நிதி அம்மையின் இடப் பக்கத்திலே. இவ்விரண்டு கோயில்களும் தனித்தனியே கட்டப்பட்டிருக்க வேணும், பின்னர்தான் இரண்டு கோயில்களையும் இணைத்து ஒரு மண்டபம், பொற்றாமரைக்கு மேல் பக்கம் கட்டியிருக்கிறார்கள். இதனையே சங்கிலி மண்டபம் என்கிறார்கள், இம்மண்டபத்தைக் கட்டியவன் ஒரு தொண்டைமான் என்று அம்மண்டபத்தில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.

இந்த மண்டபம், பிராகாரம் எல்லாம் கடந்தே நெல்லையப்பர் சந்நிதிக்கு வரவேணும். இவர் நெல்லையப்பர் என்றும் ஏன் பெயர்

பெற்றார் என்பதற்கு இரண்டு நல்ல வரலாறுகள் உண்டு. இந்தக்

 

[தட்சிணா மூர்த்தி படம்] (தெளிவாக இல்லை)

 

கோயில் இன்றிருக்கும் இடம் அந்த நாளில் ஒரே மூங்கில் காடாக இருந்திருக்கிறது. ராமக்கோன் என்று ஒருவன். அவன் தினசரி தன்னுடைய மாட்டுப் பட்டிக்குச் சென்று பால் கறந்து அந்தப் பால் நிறைந்த குடத்துடன் தன் இல்லத்துக்குத் திரும்புவான். அப்படி வரும்போது ஒவ்வொரு நாளும் ஒரு மூங்கில் புதரண்டை கால் தடுக்கிப் பால் குடம் விழுந்து பால் முழுதும் சிந்தியிருக்கிறது. சில நாள் இப்படி . நடக்கவே மறு நாள் கோடாரியுடன் வந்து அந்த மூங்கில் புதரை வெட்டி அகற்ற முனைந்திருக்கிறான். அப்படி வெட்டும் போது வெளிப்பட்டவரே வேணு வனநாதர், அவரை முழுவதும் கண்ட ராமக்கோன் (ராம பாண்டிய ராஜா என்று அழைக்கப்படுகிறார் பின்பு) வேண்டியபடியே வளர்ந்திருக்கிறார் இவர். இந்த சுயம்புமூர்த்தியை இன்னும், வேண்ட வளர்ந்த நாயகர் என்றே அழைக்கிறார்கள், இவரே கருவறையுள் வெட்டுப்பட்ட தலையோடு இருக்கிறார். கோயிலின் முதல் பிராகாரத்திலே ஒரு பள்ளமான இடத்திலே மூலலிங்கர் வேறே இருக்கிறார்.

இந்த வேணுவன நாதர் எப்படி நெல்வேலி நாதர் ஆனார்? வேத சர்மா என்று ஓர் அர்ச்சகர். கோயில் பூசைக்கு வேண்டிய நெல்லை எடுத்துத் தம் வீட்டின் முற்றத்தில் வெயிலில் உலர்த்தி விட்டு ஆற்றுக்குக் குளிக்கச் சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் பெருமழை பெய்திருக்கிறது. உலர்த்திய நெல் எல்லாவற்றையும் வெள்ளம் வாரிக்கொண்டு போய்விடுமே என்னும் ஆதங்கததோடு அர்ச்சகர் வீடு நோக்கி ஓடி வருகிறார். அர்ச்சகரின் அன்பினையும் ஆதங்கத்தையும் அறிந்த இறைவன், அந்த நெல்காய்ந்த இடத்தில் ஒரு துளி மழையும் விழாமல் காத்திருக்கிறார். அப்படி அவர் வேலி போல் நின்று காத்த தன் காரணமாக நெல்வேலி நாதன் என்று பெயர் பெறுகிறார். நெல்வயல்கள் ஊரைச் சுற்றி நாலு பக்கங்களும் பரவி நிற்கிறதைப் பார்த்தவர்கள் இந்த ஊருக்கு நெல்வேலி என்ற பெயர் பொருத்தமே என்று ஒப்புக் கொள்வார்கள்.

இத்தலத்துக்கு ஞானசம்பந்தர் வந்து பாடிப் பரவியிருக்கிறார்.

மதுரையைத் தலைநகராகக் கொண்ட அந்த நின்ற சீர்நெடுமாறனே இக்கோயில் கட்டினான் என்பது வரலாறு. இவனையே 'நிறைகொண்ட சித்தையன் நெல்வேலி வென்ற சீர்நெடுமாறன்' என்று சமய குரவரில் ஒருவரான சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் பாடியிருக்கிறார். நெடுமாறனோ முதலில் சமணனாக இருந்து பின்னர். சம்பந்தரால் சைவனாக்கப்பட்டவன் என்பது பிரசித்தம். . இவனது காலம் சி.பி. ஏழாம் நுற்றாண்டு. இவனுக்குப் பின் வந்த பாண்டியர்கள். நாயக்க மன்னர்கள் எல்லாம் கோயிலை உருவாக்கியிருக்கிறார்கள்.

கி.பி. 950 இல் இருந்து அரசாண்ட வீரபாண்டியன் சோழர்களை வென்ற வரலாற்றைக் கூறுகிறது சில கல்வெட்டுக்கள், பதின்மூன்று பதிநான்காம் நூற்றாண்டுகளில் இருந்த மாறவர்மன் சந்தர பாண்டியன், மாறவர்ம குலசேகர தேவன் முதலியவர்களது சாஸங்கள் பல கிடைக்கின்றன. இக்கோயிலில். இக் கல்வெட்டுக்களில் இறைவனைத் திருநெல்வேலி உடையார் என்றும் இறைவியைத் காமக்கோட்டமுடைய நாச்சியார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாயக்க மன்னர்களோ திருநெல்வேலியையே தலைநகராகக் கொண்டு கோயிலைப் புதுப்பிப்பதில், மண்டபங்கள் கட்டுவதில் எல்லாம் மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார்கள். இப்படிப் பாண்டியர், நாயக்கர்களோடு, மகம்மதிய பக்தர் ஒருவருமே சேர்ந்து கொள்கிறார். முகம்மது அலியின் தானாதிபதி அன்வர்டிகான் என்பவரது மனைவியின் தீராத நோயைத் தீர்த்திருக்கிறார் இந்த நெல்லையப்பர். அந்த ஞாபகர்த்தமாக அன்வர்டிகான் ஒரு லிங்கப் பிரதிஷ்டை செய்திருக்கிறான். அன்வர்டிகானால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இன்று நல்ல தமிழில் அனவரத நாதனாகவே விளங்குகிறார். கோயிலின் தென் கிழக்கு மூலையில்.

இந்த நெல்லையப்பர் கோயில், ஐந்து கோபுரங்கனோடு விளங்கும் ஒரு பெரிய கோயில்; ஊருக்கு நடுவில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்ட. ஒரு விரிந்த இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இறைவன் சந்நிதிக் கோபுரத்தை விட, இறைவி சந்நிதிக் கோபுரமே அழகு வாய்ந்தது. கோயிலுள் இருக்கும் பொற்றாமரைக் கரையில் நின்று பார்த்தால் அதன் காம்பீர்யம் தெரியும். இக்கோயிலின் சிற்புச் சிறப்புக்கள் எல்லாம் பிரசித்தம். நாயக்கர் காலச் சிலா வடிவங்கள் அனந்தம். மகா மண்டபத்திலே வீர பத்திரன், அர்ச்சுனன், கர்ணன் முதலியோர் சந்நிதி, வாயிலையே அணி செய்கின்றனர். ஆண்மைக்கு எடுத்துக்காட்டாக வீரபத்திரன் சிலை அமைந்திருக்கிறது. பெண்மைக்கு எடுத்துக்காட்டாகக் குழந்தையை ஏந்தி நிற்கும் தாயொருத்தி ஒரு தூணை அலங்கரிக்கிறாள்.

இக்கோயிலில் உள்ள கற்சிலைகளைவிடச் செப்புச் சிலைகள் மிக மிக அழகானவை. இங்குள்ள நடராஜரும் சிவகாமியும் உருவிலே பெரியவர்கள். ஏன்? திருவிலேயும் பெரியவர்கள்தான். அவர்கள் இருக்குமிடமே பெரிய சபை. கிட்டத்தட்ட ஆறு அடி உயரத்திலே நடராஜர் என்றால் ஐந்து அடி உயரத்திலே சிவகாமி, இருவரும் இருக்க வேண்டியது, தலத்துக்கே சிறப்பான தாமிர சபையில். ஆனால் எடுக்க வைக்க இருக்கும் சிரமம் கருதித் தனிக் கோயிலிலே மூலமூர்த்திகளாகவே இவர்கள் செப்புச் சிலை வடிவில் இருக்கிறார்கள். விரித்த செஞ்சடையோடு ஆடவில்லை இந்த நடராஜர். பாண்டிய மன்னர்கள் வடித்த நடராஜர் சிலாவடிவங்கள் எல்லாவற்றிலுமே கட்டி முடித்த சடைதான். இன்னும் ஓர் அதிசயம் இக்கோயிலிலே, வேணுவனநாதனின் கருவறையை அடுத்த வட பக்கத்திலே நெல்லைக் கோவிந்தர் நன்றாகக் காலை நீட்டிப் படுத்திருக்கிறார். அவர் பக்கத்திலே கரகம் ஏந்திய கையராய் மகாவிஷ்ணு நின்று கொண்டிருக்கிறார். தங்கையை மணம் முடித்துக் கொடுக்கும்போது தாரை வார்த்துக் கொடுக்க வந்த அவசரம் போலும். நல்ல அழகான வடிவம், இந்த நெல்லை கோவிந்தரின் செப்புச்சிலை. இன்னும் ஆறுமுகனுக்கு ஒரு பெரிய சந்நிதி, அவனைச் சுற்றி வந்து ஆறு முகங்களையுமே கண்டு களிக்க வசதி செய்திருக்கிறார்கள் நிர்வாகிகள்.

புராணப் பிரசித்தியும், சரித்திரப் பிரசித்தியும் உடைய இக்கோயில் நல்ல இலக்கியப் பிரசித்தியும் உடையது. தலபுராணம் ஒன்று இருக்கிறது. அழகிய சொக்கநாதப்பிள்ளை பாடிய காந்தியம்மை பிள்ளைத் தமிழ் படிக்கப் படிக்க இன்பம் தருவது. நெல்லை மும்மணிக்கோவை, நெல்லை வருக்கக் கோவை, நெல்லை அந்தாதி என்ற இலக்கியங்கள் பெற்றது. நெல்லையப்பர் கோயிலில், காந்திமதியம்மை சந்நிதி வழியே நுழைந்தோம். திரும்பும்போது அவள் சந்நிதி சென்று வணங்கித் திரும்பலாம்.

ஏர்கொண்ட நெல்லை நகர் இடம் கொண்டு
வலங்கொண்டு அங்கு இறைஞ்சுவோர்கள்
சீர்கொண்ட தன் உருவும் பரன் உருவும்
அருள் செய்து நாளும்
வேர்கொண்டு வளர்ந்தோங்கும்
வேய்ஈன்ற முத்தைமிக விரும்பிப்பூணும்
வார்கொண்ட களபமுலை வடிவுடைய
நாயகிதாள் வணங்கி வாழ்வோம்.

என்ற பாடலைப் பாடிக்கொண்டே வாழலாம் தானே! அப்படியே வாழ்கிற நான், ஒரு திருநெல்வேலிக்காரன் என்பதில் எப்போதும் கர்வம் கொள்கிறவன் ஆயிற்றே! .