வேங்கடம் முதல் குமரி வரை 4/024-032

விக்கிமூலம் இலிருந்து
24. கிருஷ்ணாபுரத்து வேங்கடநாதன்

சோழநாட்டில் ஒரு ராஜகுமாரி, அடுத்துள்ள பாண்டி நாட்டிலே ஒரு வீரன். ஊழ்வினை வசத்தால் எடுப்பாரும் கொடுப்பாரும் இன்றி ஒருவரையொருவர் பார்க்கின்றனர். காதல் கொள்கிறேனர், ஆனால் இரண்டு நாட்டுக்குமோ தீராப் பகை, அதனால் சோழ நாட்டு ராஜகுமாரியைப் பாண்டிய நாட்டு வீரன் மணம் முடிப்பது என்பது இயலாத காரியமாக இருந்தது. இருந்தாலும், இவர்களது காதல் தாபம் தணியவில்லை . கடைசியில் ராஜகுமாரியை அவளது கட்டுக் காவலிலிருந்து வீரன் அழைத்துச் சென்று விடுவது என்று ஏற்பாடு செய்து கொள்கிறான். அதற்கிசைகிறாள் இராஜகுமாரியும். குறிப்பிட்ட நாளிலே வீரன் ராஜகுமாரியை உடன் அழைத்துச் சென்று விடுகிறான். செய்தி தெரிந்து விடுகிறது சோழநாட்டு வீரர்களுக்கு. பாண்டிய நாட்டு வீரனை மடக்கி மங்கையை மீட்டுச் செல்ல முனைந்து புறட்படுகிறார்கள் சோழ வீரர்கள். அதற்கெனக் குதிரைகளிலே ஏறிப் பாண்டிய நாட்டு வீரனைப் பிடிக்க வருகிறார்கள். வீரனோ ராஜகுமாரியையும் இழுத்துக்கொண்டே செல்ல வேண்டியிருக்கிறது. அவளாலோ விரைந்து நடக்க முடியவில்லை. ஆதலால் அவளை அப்படியே தன் தோளின் மீது ஏற்றிக்கொள்கிறான். அவனைச் சுமந்து கொண்டே ஓடுகிறான். சோழ நாட்டின் எல்லையைக் கடந்து பாண்டிய நாட்டிற்குள் நுழைந்து விட்டால் சோழநாட்டு வீரர்களால் ஒன்றும் செய்ய முடியாதல்லவா? எல்லை நெருங்குகிறது. அதற்குள் நெருங்கி விடுகிறார்கள் சோழநாட்டு வீரர்கள், குதிரையிலிருந்தே நீண்ட ஈட்டியை ஓடும் வீரளின் விலாவில் பாய்ச்சுகிறார்கள், ஈட்டி பாய்ந்த இடத்தில் ரத்தம் பெருகுகிறது. பாண்டிய நாட்டு வீரனோ பகை அரசரின் வீரர்களோடு போரிட்டு அவர்களையெல்லாம் வெல்லக் கூடியவன்தான். என்றாலும் தன்னுடன் வந்திருக்கும் ராஜகுமாரியைச் சோழநாட்டு மண்ணிலே இறக்சிலிட விரும்பவில்லை. ஆதலால் விரைந்தே ஓடிப்போய் பாண்டிய நாட்டின் எல்லையை அடைந்து விடுகிறான். வெற்றி அவனுக்கே. இந்த நிலையில் லீரனின் தோள்களில் ஆரோகணித்து இருந்த ராஜகுமாரிக்கோ ஒரே

நெல்வேலி வடிவன்னை

மகிழ்ச்சி. காதலனுடன் சென்று அவனுடன் இன்ப வாழ்வு நடத்தப் போகிறோம் என்ற உள்ளத்தில் எழும் பூரிப்பு அவள் முகத்திலே பிரதி பலிக்கிறது

இப்படி ஒரு கதை. ஆனால் இவ்வளவும் உண்மையாய் நடக்க வில்லை. தமிழ்நாட்டுச் சிற்பி ஒருவன் ஒரு நாள் மாலை ஊருக்கு வெளியே உலாவப் புறப்படுகிறான். அங்கே ஒரு பாறையைப் பார்க்கிறான். அப்பாறையில் இயற்கையாகச் செந்நிற ரேகைகள் ஓடுவதைக் காண்கிறான். அந்தப் பாறையையும் அதில் ஓடிய செந்நிற ரேகைகளையும் சுற்றி சுற்றி அவன் எண்ணம் ஓடியிருக்கிறது. பண்டைத் தமிழர் இன்பியல் வாழ்க்கையில் உடன் போக்கு` எல்லாம் உண்டு என்பதை அறிந்தவன் ஆயிற்றே. அதனால் அவனது எண்ணத்தில் ஒரு சுற்பனை. ஆம்! முன் கூறிய கற்பனைக் கனவு உருவாகியிருக்கிறது. அந்தப் பாறையை வெட்டிக் செதுக்கி அதில் தன் சிற்றுளி வேலையைக் காட்ட முனைகிறான். அவ்வளவுதான், கல்லில் உருவாகி விட்டார்கள் கன்னி, காதலன், சோழ நாட்டு வீரர்கள், அவர்களது குதிரைகள், அவர்கள் ஏந்திய ஈட்டிகள் எல்லாம். பாறையில் கண்ட சிவப்பு ரேகைகள் வீரனின் விலாவில் வடியும் ரத்தப்பெருக்காக அமைந்து விடுகின்றன. கல் உயிர் பெற்று விடுகிறது. இந்தச் சிலை வடிவை ஒரு தூனாக நிறுத்திவிடுகிறான் சிற்பி, கிருஷ்ணாபுரத்துத் திருவேங்கடநாதன் சந்நிதியில். அந்தக் கிருஷ்ணாபுரத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

கிருஷ்ணாபுரம் திருநெல்வேலியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில் உள்ள சிற்றூர். திருநெல்வேலி திருச்செந்தூர் ரோட்டில் சென்றால் நெடுஞ்சாலைப் பொறியர்கள் 'கிருஷ்ணாபுரம் கலைச் சிற்பங்கள்' என்று எழுதி ஒரு போர்டு. நாட்டிக் கோயிலுக்குச் செல்லும் வழியைக் குறிப்பிட்டிருப்பார்கள். ரயிலிலே செல்பவர்கள் செய்துங்க நல்லூர் (ஆம், செய்து உண்க நல்லூர் அல்ல, ஜெயதுங்கள் நல்லூர்தான்) ஸ்டேஷனில் இறங்கி வண்டி வைத்துக் கொண்டு மேற்கு நோக்கி இரண்டு மைல் வரவேணும். அப்படி வந்த ரோட்டை விட்டு இறங்கி இரண்டு பர்லாங்கு பனந்தோப்பு வழியாக நடந்தால் திருவேங்கடநாதன் கோயில் வாயில் வந்து சேரலாம். இந்தத் திருவேங்கடநாதன் புராணப் பிரசித்தி, சரித்திரப் பிரசித்தி எல்லாம் பெற்றவர் அல்ல. ஆனால் இக்கோயில் ஒரு பெரிய சிற்பக்கலைக் கூடமாகவே இருக்கிறது.

கோயில் வாயிலில் ஒரு நல்ல கோபுரம். அந்தக் கோபுரத்தையும் முந்திக்கொண்டு ஒரு மண்டபம், மண்டபத்தைக் நடந்து கோயில் வாயிலுள் நுழைந்தால் முதல் முதல் நாம் காண்பது முக மண்டபம். அந்த மண்டபம் தெற்கே பார்த்திருக்கிறது. அதன் முகப்பில் ஆறு தூண்களில் ஆறு அழகிய சிற்ப வடிவங்கள், அதில் ஒன்றுதான் நாம் முன்னர் குறித்த சிற்ப வடிவம், வீரனின் தோள்களில் சோழ ராஜகுமாரி உட்கார்ந்திருக்கிற நேர்த்தியையும், அவள் வெயிலுக்காகத் தன் முந்தானையை விரித்துத் தலைக்குமேல் பிடித்திருக்கிற அழகும் சிறப்பாயிருப்பதைப் பார்ப்போம். வைத்த கண் வைத்தபடியே பார்த்துக் கொண்டிருக்கச் செய்யும் சிலா படிவம். மற்றையத் தூண்களிலோ பாசுபத அஸ்திரம் பெறத் தவக்கோலம் பூண்ட அர்ச்சுனன், அவனோடு தீராப் பகைமை பூண்ட அந்த அங்க தேசத்து மன்னன், புகழ் பெற்ற கொடையாளி கர்ணன். இன்னும் அரசிளங்குமரனைச் சுமந்து நிற்கும் குறப்பெண் ஒருத்தி, இன்னும் இரண்டு பெண்களின் சிலை வடிவங்கள், பெண்களின் வடிவெல்லாம் கண்டார் கண்ணையும் கருத்தையும் கவர்வன, பாசுபதம் பெறப் பல மாத காலம் ஊண் உறக்கம் இன்றிப் பசுபதியை நாக்கித் தவம் செய்தவன் அல்லவா அருச்சுனன். ஆதலால் தாடி, சடை எல்லாம் நீண்டு வளர்ந்திருக்கின்றன. அவனுக்கு முகத்திலே ஓர் அசாதாரணக்களை, பெருந் தவசிகளுக்கு இருக்க வேண்டிய சாந்தம், பொறுமை எல்லாம் கனிகின்றன. தவக்கோலமே என்றாலும் வில் தாங்கிய வீரன்தான் அவன். அவன் பாசுபதம் பெறுவதே தன் வில்லாற்றலையும் மல்லாற்றலையும் காட்டத்தானே! இத்தனை அழகோடு விளங்கும் அர்ச்சுனனுக்குப் பக்கத்திலேயே கர்ணன், அவன் நாகபாச மேந்திய கையனாய் நிற்கிறான். வீரனுக்கு உரிய காம்பீர்யம், வில் வித்தையில் சிறந்தவன் என்பதனால் ஏற்பட்ட மிடுக்கு, எல்லாவற்றையுமே பார்க்கிறோம் இந்தச் சிலையில்.

இச் சிலைகளைப் பார்த்தபின் மகா மண்டபத்தில் நுழையலாம். கோயிலுள் நுழையும்போதே கொஞ்சம் பயபக்தியுடன்தான் நுழைய வேண்டும். உள்ளே சென்றதும் நம்மை உறுத்து லிழித்து நோக்குபவன்தான் வீரபத்திரன், கனல் உமிழ் கண்களுடன் தென் வரிசைத் தூண்களில் முதலிலேயே நிற்பான் அவன். சிவபிரானை மதியாத மாமனார் தக்ஷனையும் அவன் செய்த வேள்வியையுமே அழிக்கப் புறப்பட்டவன் ஆயிற்றே.

பார்த்த திக்கினில்
கொடிமுடி ஆயிரம் பரப்பி
ஆர்த்த திண்டய
வரை இரண்டாயிரம் துலக்கி
பேர்த்த தாள்களில்
அண்டமும் அகண்டமும் பொர
வேர்த் தெழுந்தனன்
வீரரில் வீர வீரன்

என்று திரிகூட ராஜட்ப கவிராயர் பாடியிருக்கிறாரே இவனைப் பற்றி. அந்த வீரருள் வீரனைக் கேடயமும் வாளும் ஏந்திய கையனாய்க் காலை வீசி வளைத்துப் போருக்குச் செல்லும் கோலத்தில் நேருக்கு நேர் பார்த்தால் நம் உள்ளத்தில் அச்சம் எழுவதில் வியப்பில்லை . இவனது துணைவனான வீரன் ஒருவனும் எதிர்த்தூணில் இருக்கிறான். இந்த வீரபத்திரனை அடுத்து மன்மதன்,

தேர் இஎம் தென்றலாக
செழுங்குடை. மதியமாக
தூரியம் கடல்களாகச்
சொற்குயில் காளம் ஆக
நாரியர் சேனையாக
நறைவண்டு விடு தூதாகப்
பாரினில் விஜயம் செய்யும்
படைம்தன்

ஆயிற்றே அவன். ஆனால் இங்கே கரும்பு வில் ஒன்றை மட்டுமே ஏந்திய கையனாய், மற்றப் படைக்கலங்களையெல்லாம் துறந்து நிற்கின்ற கோலத்தில் காண்கிறோம். ஆஜானுபாகுவாக இவன் இல்லை. கொஞ்சம் கட்டுக்குட்டென்றே நிற்கிறான். இவனுக்கு எதிர்த்த தூணில் அன்னத்தின் மீது ஆரோகணித்து வரும் ரதிதேவியோ பெண்மைக்கே ஓர் எடுத்துக் காட்டு. காமனும் கண்டு காமுறும் இம்மங்கை தன் அழகை, கையில் ஏந்திய கண்ணாடியில் கண்டு மகிழ்கிறான். 'நிலவு செய்யும் முகமும், காண்பார் நினைவு அழிக்கும் விழியும், கலகலவென்ற மொழியும், தெய்வக்களி துலங்கு நகையும்' உடைய இந்தப் பெண்ணணங்கு, நமது உள்ளத்தையெல்லாம் கொள்ளை கொள்கிறாள்.

இப்படித் தேர்ந்த அழகுக்கு எல்லையாக ரதிதேவியை வடித்துக் காட்டிய சிற்பி, நல்ல அவலக்ஷணத்துக்கும் ஓர் எல்லை காட்டுகின்றான். ரதிதேவியின் சிலைக்குப் பக்கத்திலுள்ள தூணில் ஓர் அழகிய மங்கையும், ஓர் அவலக்ஷணமான மனிதனும் உருவாகியிருக்கிறார்கள். அழகே வடிவமாக இருந்த ஒரு முனிவர் அந்தப் பெண்ணின் காதலைச் சோதிக்க வேண்டி இப்படி உருமாறினார் என்றும், அந்த நிலையிலும் அவரையே மணக்க இசைந்து நின்றாள் அவள் என்பதும் கதை. இதற்கு எதிர்த் தூணிலேதான் புருஷா மிருகமும் வீமனும், இருவருக்கும். நியாயம் வழங்கும் தர்ம புத்திரரும். எல்லாம் ஏழு எட்டு அடி உயரத்தில் காத்திரமான சிறப் வடிவங்கள். இத்தாலிய பேராசிரியர் பாதர் ஹீராஸ் போன்ற அறிஞர்கள் எல்லாம் கண்டு தலைவணங்கி நின்ற சிற்ப வடிவங்கள் இவை. இக்கலைக் கூடத்தை உள்ளடக்கி வைத்துக் கொண்டிருப்பவரே திருவேங்கடநாதன்.

நாமும் வேங்கடவனை அந்தத்திரு வேங்கடத்திலும் இன்னும் பல தலங்களிலும் கண்டு களித்திருக்கிறோம்.

வேங்கடமே விண்ணோர்
தொழுவதுவும், மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினை நோய் -
தீர்ப்பதுவும் - வேங்கடமே
தானவரை வீழத் தன் ..
ஆழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான்மலை

என்று வேங்கடமலையைப் பற்றியெல்லாம் தெரிந்தவர்கள்தாம் நாம் என்றாலும், இத்தனை கலைப் பிரசித்தி உடைய சந்நிதியிலே கொலு வீற்றிருக்கும் வேங்கடவனை இங்கு தான் காண்கிறோம். கோயில் கருவறையில் நிற்கும் வேங்கடவர் நல்ல சிலா வடிவினர். செப்புச் சிலையாகவும், பூதேவி சீதேவி சமேதராக நின்று கொண்டிருக்கிறார்.

இந்தக் கோயிலையும் இங்குள்ள சிலா வடிவங்களையும் நிர்மாணித்தவர், நாயக்க மன்னர்களில் புகழ் வாய்ந்தவராக இருந்த கிருஷ்ணப்ப நாயக்கரே. இத்தலம் முதலில் வேங்கடராயபுரம் என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. பின்னர்தான் கோயிலை நிர்மாணித்த கிருஷ்ணப்ப நாயக்கர் பெயராலே கிருஷ்ணாபுரம் என்று நிலைத்திருக்கிறது. இல்லை, விஜய நகர மன்னனான கிருஷ்ண தேவராயருடைய பெயரையே இதற்கு இட்டிருக்கிறார்கள் என்றும் வரலாறு உண்டு. இங்குள்ள கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயமும், கோவில் கட்டிய மன்னனைக் கிருஷ்ண பூபதி என்றே குறிக்கின்றன. ஆதியில் கோயிலைச் சுற்றிப் பெரிய மதில்; உயரில் குடி மக்கள் பலரும் இருந்திருக்கின்றனர். கோயிலைச் சுற்றிய மதில் சிதைந்து கிடக்கிறது. ஊரில் இன்று குடியிருப்பவர்கள் வெகு சிலரே. ஊர் முழுதும் குட்டிச் சுவர்களே அதிசும். இங்கு தெய்வச் சிலையார் என்று ஒரு பெரியவர் இருந்தார் என்றும், அவர்மீது தெய்வச் சிலையார் விறலி விடு தூது என்று ஒரு நூல் பாடப்பட்டிருந்தது என்பதும் வரலாறு. எனக்கு அந்த நூல் கிடைக்கவில்லை.

எனக்கு இந்தக் கோயிலில் அதிகம் ஈடுபாடு உண்டு. கலை அழகைக் கண்டு அனுபவிக்க நான் பயிற்சி பெற்ற பள்ளியே இக் கோயில்தான். முதல் முதல் சுலைகளைப் பற்றி எழுத முனைந்ததும் இக்கோயிலில் உள்ள சிலைகளைப் பற்றித்தான். ஆதலால் தான் ஏதோ வரப்பிரசித்தியோ, புராணப் பிரசித்தியோ இல்லாத தலம் என்றாலும், உங்களையெல்லாம் இக்கலைப் பிரசித்தி உடைய கோயிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன், சிரமத்தோடு சென்றாலும் சிலை அழகைக் கண்டு திரும்பும்போது நிறைந்த மனத் தோடேயே திரும்புவீர்கள் என்பது திண்ணம்.

பின் குறிப்பு கிருஷ்ணாபுரம் கோயில் அண்மையில் அரசால் புனருத்தாரணம் செய்யப்பட்டு நல்ல நிலயில் காட்சியளிக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.