திருவருட்சிந்தனை
101
இறைவா, நீ எப்போதும் உமையாளோடு இருக்கிறாய். உமையவளை ஒருங்கணைத்த வண்ணமே இருக்கிறாய். ஏன் இறைவா, நீ என்ன காமத்தில் மன்னனா? உமையவள் திருவடியில் பிறைநிலாத் தெரிகிறது, கொன்றை மலர் மணம் வீசுகிறது. ஆம், இறைா! நீ உமையவளிடம் சரணடைந் திருக்கிறாய். ஏன் இறைவா, அதில் என்ன தவறு? ஆற்றலைச் சரண் புகுகிறாய். உலகத்தின் இயக்கமே ஆற்றலில்தானே இருக்கிறது.
மானிட சாதி ஆற்றலில் குறைவின்றி இருப்பின் உலகத்தை இயக்கலாம், மாற்றி வளர்க்கலாம், எல்லாம் ஆற்றலின் மயம். இறைவா! உமை ஆற்றலின் ஊற்று. அவள் தரும் ஆற்றலே உன்னை ஐந்தொழிலில் ஈடுபடுத்துகிறது.
ஆம், இறைவா! எனக்கு ஓர் ஐயம். பெண்மை, ஆற்றலின் களம், ஊற்று, உரு என்றால் நாட்டில் பெண்கள் அப்படியில்லையே. இவர்கள் ஆற்றலே அற்று "ஜீவித்து" கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்! இவர்கள் ஆற்றலாக, ஆற்றலின் ஊற்றுக்கண்ணாக விளங்கின் இம்மண்ணுலகு செழிக்கும்! இந்தப் பெண்களுக்கு இத்தகைய வரத்தை நீ அருளல் கூடாதா? நீ, இந்தப் பெண்களுக்கு இந்த வகையில் அருளிச் செய்ய இயலாது. ஆனால், உமையவளிடமாவது எடுத்துக்கூறு!
இந்த நாட்டுப்பெண்கள் பிழைப்பு நடத்துவதை விட வேண்டும். ஆற்றலின் நிலைக்களனாக வாழ வேண்டும். நல்ல படைப்பாளிகளாக விளங்க வேண்டும்! இறைவா, அருள் செய்!