பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

159



முன் கூறிய பதினாறு பேறுகளும் அமைவதற்கு மனித வாழ்வில் சால்பு அடிப்படையாக இருக்கவேண்டும். அதாவது சான்றாண்மை நிறைந்த வாழ்க்கை வேண்டும். சான்றாண்மையாவது, பல நற்குணங்களும் நிறைந்து, அவற்றை வாழ்க்கையின் துறைதோறும் ஆளுமையுடன் செயற்படுத்துதல். இத்தகு சான்றாண்மை வளமான வாழ்க்கைக்குச் சான்றாக அமையும். இத்தகைய சான்றாண்மைக்கு அடித்தளமாக அமைவது அன்பு.

“அன்பின் வழியது உயிர்நிலை” என்றும் “அன்போடியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என் போடியைந்த தொடர்பு” என்றும் வள்ளுவம் கூறும் ஒருவர் உயிருடையவரா என்பதை அறிவதற்கு, அவர் தம் நடமாட்டங்கள் அளவு கோலல்ல. அவர்தம் வாழ்க்கையில் அன்பு நிறைந்த செயல்கள் காணப்படின் அவர் உயிருடையவர் என்று எடுத்துக் கொள்ளப் பெறுவார். உயிருக்கும் உடம்புக்கும் உறவு ஏற்பட்டதனுடைய நோக்கம் அன்பாக இருப்பதுதான். கடவுள், மனிதனுக்கு வழங்கிய ஒரே அரும் பொருள் அன்பே யாம். அன்பு, பொறிகளைக் கடந்தது; புலன்களைக் கடந்தது. பல சமயங்களில் அன்பே மொழியாகி விடுவதுண்டு. ஊமையும் அன்பு மொழி பேச இயலும். செவிடரும் அன்பு மொழி கேட்க இயலும். அன்பு விரிந்தது. அன்பு, உலகம் தழுவியது. அன்புக்கு எல்லைகள் இல்லை; பிரிவினைகள் இல்லை; உயர்ந்தாரில்லை; தாழ்ந்தாரில்லை; வேண்டியவர் இல்லை; வேண்டாதார் இல்லை. அன்பு மிக உயர்ந்தது என்பதைக் காட்டவே திருமூலர் அன்பே சிவம் என்றார். ஆற்றல் பெரிது. “ஆற்றல் மிக்க அன்பு” என்பார் அப்பரடிகள். அன்பு இருக்கும் இடத்தில் உறவு இருக்கும். வாழ்வு இருக்கும். வலிமையானவற்றிலெல்லாம் வலிமையானது அன்பேயாம். அன்பு, வற்றக் கூடியதன்று. தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருப்பது அன்பு, பிறை நிலா வளர்வது போல நல்லவர் அன்பு வளரும்.