104
அகநானூறு -களிற்றியானை நிரை
53. பொருளே காதலர் காதல்!
பாடியவர்: சீத்தலைச் சாத்தனார். திணை: பாலை. துறை: வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் கூறியது. 'பிரிதல் நிமித்தம்' என்றும், 'தலைவன்கண் நிகழ்ந்தது, தலைவி நினைந்து தோழிக்குக் கூறியது' என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர்.
(முன்னர், தலைவன் அருளுடையான், நின்னைப் பிரியான் என்றெல்லாம் சொல்லிக் கூட்டுவித்தவள் தோழி. அவனிடம் பொருள்கருதிப் பிரிகின்ற தன்மைகள் தோன்றத் தோழியிடம் தலைவி அதனை உரைக்கிறாள். அவள், மீளவும், 'அருளே அவன் இயல்பென்று' கூறத் தலைவி அவளை மறுத்துக் கூறுகிறாள்.)
அறியாய், வாழி, தோழி! இருள்அற
விசும்புடன் விளங்கும் விரைசெலல் திகிரிக்
கடுங்கதிர் எறித்த விடுவாய் நிறைய,
நெடுங்கான் முருங்கை வெண்பூத் தாஅய்,
நீர்அற வறந்த நிரம்பா நீள்இடை,
5
வள்எயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உள்ஊன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரிஅரை புதைத்த புலம்புகொள் இயவின்,
விழுத்தொடை மறவர் வில்இட வீழ்ந்தோர்
10
எழுத்துடை நடுகல் இன்நிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை நீந்தி, என்றும்,
'இல்லோர்க்கு இல்'என்று இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
பொருள காதலர் காதல்;
15
'அருளே காதலர்’ என்றி, நீயே.
தோழி! நீ வாழ்க!
விரைந்த செலவினையுடைய ஞாயிறானது, இரவின் இருளானது அற்றுப்போகுமாறு வானிடத்தே விளங்குவது. அதன் கடுமையான கதிர்கள் எறித்தலால் நிலங்கள் எங்கும் பிளந்தன. அப் பிளப்புக்கள் நிறையுமாறு, நீண்ட முருங்கை மரத்தின் வெண்மையானபூக்கள் உதிர்ந்து பரந்தன. நீரற்றுப் போயினதால் வறட்சியுடையதான, செல்லத்தொலையாத, நீண்ட இடத்தினையுடையது அத்தகைய பாலைநிலத்து அவ்வழி.
அந்தச் சுரமோ கள்ளிக்காடுகள் நிறைந்தது. அங்குள்ள வாகை மரங்களை, உள்ளிருக்கும் ஊறும் வாடிப்போன சுரித்த