பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

௧௩௮

அகநானூறு

[பாட்டு


ஆங்கண் - குடையும் அவ்விடங்களையுடைய, அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி - அச்சமுறத் தகுவதாகிய காட்டினைக் கடந்து,

க0-௩. கன்று காணாது புன் கண்ண செவிசாய்த்து - கன்றுகளைக் காணாமையின் பொலிவற்ற கண்ணினவாய்ச் செவிகளைச் சாய்த்து, மன்று நிறை பைதல் கூர - மன்றில் நிறைவதாலாம் துன்பம் மிக, பலவுடன் கறவை தந்த - பல கறவைகளையும் ஒருங்கே தந்து அடைத்த, கடுங்கால் மறவர் - வேகம் மிக்க காலினராகிய வெட்சி மறவரது, கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ-கல்லென் னும் ஆரவாரத்தையுடைய சீறூரில் இரவிலே தங்கி,

கச-௯. முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை - முதுமை வாய்த்தலை யுடைய பெண்டின் சோர்ந்த காலினையுடைய குடிலிடத்து, மடமயில் அன்ன என் நடைமெலி பேதை - இளைய மயிலை யொத்த நடத்தல் தளர்ந்திட்ட எனது பேதைமகள், தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள் - தன் தலைவன் தனது தோளில் அணைத்துத் துயிற்றவும் துயிலாதவளாகி, வேட்டக் கள்வர் - வேட்டம் புரியும் கள்வரது, விசியுறு கடுங்கண் - வாரினையிழுத்துக் கட்டிய கடிய கண்ணினையுடைய, சேக்கோள் அறையும் தண்ணுமை - ஏறுகளைக் கொள்ளுங்கால் அடிக்கும் பறையின் ஒலியினை, கேட்குநள் கொல் எனக் கலுமும் என் நெஞ்சு - கேட்டு அழுவளோ என நினைந்தழும் என் நெஞ்சினைக் குறித்து,

௩. நோவல் - யான் நோதல் செய்வேன்.

(முடிபு) மகளே! வாழி! கேளாய்; நின் தோழி அவனொடு மலையிறந்தது நோவேன்; யானை உதைத்த பூழி சேவல் பெடையொடு குடையும் ஆங்கண் கானம் நீந்தி மறவர் சீறூர் அசைஇ குரம்பை துஞ்சாள் தண்ணுமை கேட்குநள் கொல்லெனக் கலுழும் நெஞ்சை நோக்கி நோவல்.

(வி-ரை.) வாழியோ, மகளை : ஓவும் ஐயும் அசைகள். பூழியில் குடையும் என்க. வெயிலெறிப்ப - எறிக்கும் பொழுது. மன்று நிறை கறவை எனலுமாம். சேக்கோள் - ஏறுகோடல். கானம் நீந்துதலும் மறவர் சீறூரில் எல்லியில் தங்குதலும் குரம்பையிற் றுயிற்றவும் துஞ்சா திருத்தலும் தண்ணுமை கேட்டலும் ஆகிய இவற்றைக் குறித்துக் கலுழும் நெஞ்சு என்பது கருத்தாகக் கொள்க.

(மே - ள்.) 1‘தன்னுமவனும்' என்னுஞ் சூத்திரத்து, இச் செய்யுள் அச்சம் கூறியது என்பர் நச்.



64. முல்லை


[வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.]


களையும் இடனால் பாக உளை அணி
உலகுகடப் பன்ன புள்ளியற் கலிமா


1. தொல். அகத். ௩௬.சரிபார்ப்பு