வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/திறமையாகச் செய்தால்

விக்கிமூலம் இலிருந்து
7
திறமையாகச் செய்தால்
வெற்றி பெறலாம்.


எந்த வியாபாரத்தையும் சரியாகச் செய்தால் உலகமெங்கும் பரப்பி விடலாம்; வெற்றியும் பெறலாம். பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்பவும், மலிவாகவும் நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும் சரக்கு இருந்தால் அது அதிவிரைவிலேயே பிரபலம் அடையும் இதனால் செருப்பு வியாபாரம் இப்படி பிரபலம் அடையுமா என்று சந்தேகப் படலாம். அம்மாதிரி சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை அதைக்கூட உலக மார்க்கெட்டில் விற்கலாம் என்பதை தாமஸ் பேட்டா நிரூபித்து விட்டார்.

தாமஸ் பேட்டா மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய முன்னோர்கள் பரம்பரையாக செருப்புத் தைக்கும் தொழிலைச் செய்து வந்தனர். தாமஸ் பேட்டா சிறுவனாக இருக்கும்போது அவருடைய பெற்றோர் செருப்புத் தைப்பதைக் கண்டு ஆத்திரமடைவாராம்.

இயந்திரத்தை விட மனிதன் கையினாலேயே வேகமாக செருப்பை தைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அக்காலத்திலேயே ஏற்பட்டது.

தாமஸ் பேட்டாவுக்கு ஐந்து வயதாகி இருக்கும்போது, அவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். வெளிநாடுகள் சென்று இயந்திரத்தைக் காட்டிலும் வேகமாகச் செருப்பு தைக்க கற்றுக்கொள்ள முயற்சித்தார். ஊக்கமும் முயற்சியும் இருந்தால் வெற்றி கிட்டாமல் போகுமா? அவர் சில வருடங்களிலேயே வேகமாகச் செருப்பு தைக்கும் நிலையை அடைந்தார். பிறகு ஒரு நண்பர் இருக்குமிடத்தில் 50 பவுன் மூலத்துடன் 1905ம் வருஷம் ஒரு சிறு செருப்புத் தொழிற் சாலையை தொடங்கினார். விடாமுயற்சியின் பலனாக தாமஸ் பேட்டாவின் தொழிற்சாலை நாளடைவில் பெரிதாகிக் கொண்டே வந்தது. முதலில் சில்லறை வியாபாரியாக இருந்த அவர், நாளாவட்டத்தில் பெரிய வியாபாரியாக மாறினார். அத்துடன் மக்களின் மனப்போக்கை அறிந்து, அவர்களுக்குப் பிடிக்கும்படியாக புதுமாதிரியான செருப்புக்களைத் தயார் செய்தார். இதனால் வியாபாரம் மேலும் மேலும் பெருகிக் கெண்டே இருந்தது.

பேட்டாக் கம்பெனி செருப்புக்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டதும், அவர் ஒரு புது முறையைக் கையாண்டார். ஒவ்வொரு நாட்டிற்கும் தயார் செய்து அனுப்புவதை விட, அங்கங்கே ஒரு தொழிற் சாலையை ஏற்படுத்தி நடத்தினால் நன்றாக இருக்கும் மேலும், அத் தேசத்தவர்களுக்கு விருப்பமான முறையில் நயமாகவும் தயார் செய்து கொடுக்கலாம் என்று எண்ணினார். அதன்படியே பல நாடுகளிலும் பேட்டா தொழிற்சாலைகளை ஏற்படுத்தினார். இதனால் அந்தநாட்டவர் பலருக்கும் வேலை கிடைக்கலாயிற்று.

பேட்டா, தொழிற்சாலைகள் ஏற்படுத்தியதுடன் நிற்கவில்லை; நாட்டின் பல பாகங்களிலும் தங்கள் விற்பனை நிலையங்களை ஏற்படுத்தினார். இப்படிச் செய்ததின் மூலம் அவருடைய சரக்குகளை விற்க வேறு வியாபாரியைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று.

பேட்டா செருப்பு வியாபாரத்தின் மூலம் ஒரு சின்னஞ்சிறுநகரையே ஏற்படுத்திவிட்டார் என்று கூறலாம். பேட்டா செருப்புத் தொழிற்சாலையிருக்கும் பல இடங்களுக்கு ‘பேட்டா நகர்’ என்றே பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அத் தொழிற்சாலைகளின் லட்சக்கணக்கானவர்கள் வேலை செய்கின்றனர். அவர்களுக்காகவே சாமான் கடைகள், ஹோட்டல்கள், சினிமா-நாடக தியேட்டர்கள் கூட கம்பெனியின் மூலமாகவே நடத்தப்பட்டு வருகின்றன.