டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 75
பிறப்பித்தது. சிவகங்கை என்ற பெயருக்குப் பதிலாக ஹுஸைன் நகர்[1] என்ற புதிய பெயர் அரசு ஆவணங்களில் இடம் பெற்றன. (ஏற்கனவே இராமநாதபுரத்தின் பெயரை அலி நகர் என மாற்றம் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.)
சென்னையில் உள்ள நவாப் வாலாஜா முகம்மது அலியுடனும் கும்பெனியாருடனும் தொடர்பு கொள்வதற்கு ஏற்றவாறு சீமை நிர்வாக கடிதப் போக்குவரத்து, அங்கு அமலில் இருந்த பாரசீக மொழியில் கையாளப்பட்டது. இந்தக் கடிதங்களில் இஸ்லாமியரது 'ஹிஜிரி' ஆண்டு முறையும், சர்க்காரது வரவு செலவு கணக்கில் பசலி முறையும் புகுத்தப்பட்டன. சிவகங்கை மன்னர்கள் ஆட்சியில் குடி மக்களுக்கு வழங்கப்பட்ட நிலமான்யங்கள், தர்மாசனம், ஜீவிதஇனாம் போன்ற நிலக்கொடைகள் பறிமுதல் செய்யப்பட்டு புதிய சர்க்காரது ஆதரவாளர்களுக்கு கவுல்காணி என்ற பெயரில் வழங்கப்பட்டன.[2] புழக்கத்தில் இருந்த மின்னல் பணம், சுழிப்பணம், சுழிச்சக்கரம், டச்சுக்காரர்களது போர்டோ நோவா பகோடா போன்ற நாணயங்களை மதிப்பிழக்கச் செய்து ஆற்காட்டு வெள்ளி ரூபாயை அதிகார பூர்வ நாணயமாக அறிவித்தது. பழைய நாணயங்களுக்கும் இந்த புதிய ரூபாய்க்கும் மதிப்பில், 1:3 1/2 என்ற விகித வேறுபாடு இருந்தது. ஊர்த் தகராறுகளை தீர்த்து வைப்பதற்காக பாரம்பரிய முறையில் இயங்கி வந்த ஊர்ச் சபை, நாட்டார்களது ஊர்ப்பொதுசபை ஆகியவைகளை நீக்கிவிட்டு, நவாப்பின் அலுவலர்களான அமில்தார்கள், குற்றங்களுக்கு அபராதமும் தண்டனையும் அளிக்கும் நியாயாதிபதிகளாக மாறினர். நடைமுறையில் இருந்து வந்த தலங்காவல், தேசகாவல் முறைகள் அகற்றப்பட்டு ஊர்களுக்கு புதிய காவல்காரர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் சிவகங்கை சீமை மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் பல இடைஞ்சல்களை எதிர் நோக்க வழிவகுத்ததுடன், அவர்கள் ஒரு அன்னிய அரசுக்கு அடிமைக் குடிகளாக இருக்கிறோமே என்ற வேதனையையும் வெறுப்பையும் வளர்த்தன. இயல்பாகவே ராஜவிசுவாசமும் போர்க்குணமும் மிக்க இந்த சீமை மக்கள் நவாப்பின் அலுவலர்களுடன் ஆங்காங்கு மோதினர். நாளடைவில் இந்த கிளர்ச்சிகள் சங்கிலிப் பின்னலாக சீமையின் பல பாகங்களுக்கு பரவி கூட்டுக் கிளர்ச்சிகளாகப் பரிணமித்தன. பக்கத்து பெரிய மறவர் சீமையின் சேதுபதி மன்னரை ஆற்காட்டு நவாப்பும் கும்பெனியாரும், திருச்சிக் கோட்டையில் சிறை வைத்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, சேதுபதி சீமையின் தெற்கு, கிழக்குப் பகுதிகளில் மாப்பிள்ளைத் தேவர் என்ற மாவீரன் தலைமையில் மக்கள் திரண்டு, நவாப்பின் நிர்வாகத்தைச் செயலிழக்கச் செய்த சாதனையை அறிந்தனர்.