கனியமுது/இளங்கிளி.
இளங்கிளி என்னும் பேரை
இயல்புடன் இட்டார் பெற்றோர்.
பளிங்கினால் இழைத்த சிற்பப்
பாவையாய்த் திகழும் அங்கம்.
களங்கமே துளியும் இல்லாக்
கவின் நிறை மதிபோல் தோற்றம்
விளங்கிட, இளைஞர் நெஞ்சம்
விழுங்கிடும் எழிலைக் கொண்டாள்!
காலையில் எழுந்த பின்னர்--
கல்லூரி செல்வ தற்குள்
சேலையில் நான்கு மாற்றிச்,
சிறகிலாக் கச்ச ணரிந்து,
வேலையும் வெல்லுங் கூர்மை
விழிகளில் மையுங் தீட்டிச்,
சாலையில் நடந்து சென்றால்...
சதிராட்டம் இளைஞர் காண்பர்!
எதிர்ப்புற மாக வந்தும்,
‘மணி என்ன?’ என்று கேட்டும்,
பதில்பெறா விடினுங் கூடப்
பணிவுடன் வணக்கஞ் செய்தும்,
மதிப்புள உடையு டுத்தி
மார்பினை நிமிர்த்திக் காட்டிக்
கொதிப்புறும் உள்ளங் கொண்டு
கூட்டமாய்ப் பின்னே செல்வார்!
யாரையுங் துச்ச மாக
எண்ணினாள் இதுவ ரைக்கும்:
பாரையே ஆளத் தக்க
பட்டத்திற் குரிய ளேனும்
கூரையில் லாத வீடாம்
கொழுநனே நாடா வாழ்க்கை!
“யாரைத்தான் தேர்ந்தெ டுப்பாள்?”
என்றேங்கி நின்றார் பல்லோர்!
தத்துவப் பாடஞ் சொல்லுந்
தகைமையால் பட்டம் பெற்ற
வித்தகர் ஆகி வந்த
விரிவுரை யாளர் ஒர்நாள்
சத்துள கருத்தைச் சொல்லிச்
“சந்தேகம் உண்டா?” என்றார்,
நித்திரை கலைந்தாற் போல
இளங்கிளி விழித்து நின்றாள்!
பெண்மனப் போக்கின் ஆழம்
பிறராலே உணர்தல் ஆமோ?
தன்மனம் தேடிச் சென்ற
தத்துவ ஆசா னுக்கே
நன்மனை யாட்டி யானாள்,
நாடெலாம் வியந்து பேச
பொன்,மணி யாவுங் தந்து
பூரித்துச் சென்றார் பெற்றோர்!
நினைத்தவா றின்ப வாழ்க்கை
- நேர்ந்ததாய் நம்பிக் கைதான்!
தினைத்துணை அன்பும் இன்றித்
- தேன்நிலவு இனிப்ப தெங்கே?
'பனைத்துணை படித்திருந்தும்,
- பக்குவம் பெறாத வர்பால்
அனைத்துமே பாழ் பாழ்', என்றே
- அரற்றினாள் பருவக் கிள்ளை!
வீசிடுந் தென்றற் காற்றில்
- மிதந்திடும் மலரின் வாசம்
காசியைத் தொடுவ தில்லை;
- நல்வினை நரம்பு போலப்
பேசிடுந் துணைவி சொற்கள்
- பெருங்காதில் வீழ்வ தில்லை;
கூசிடா ஒப்ப னைகள்
- கொண்டவர் காண்ப தில்லை!
தீண்டிட அருகிற் செல்வாள்;
- திடுக்குற்று விலகி நின்று
வேண்டுவார், பயிலும் போது
- விளையாட்டு கூடா தென்று!
"மாண்டிட எனைவ தைக்க
- மணந்தது குற்றம்!” என்பாள்;
"ஆண்டினிற் சிறிய உன்னை
- அழைத்தும் யானோ" என்பார்.
'என்னுடன் பேசில் இன்பம்
- என்விழி பருகின் சொர்க்கம்
பொன்னுடல் தன்னைத் தொட்டால்
- பூலோகம் ஈடாம் என்ற
மன்னவர் பலர்இ ருந்தார்!
- மதியிழந் தும்மைத் தேர்ந்தேன்!
இன்னுமேன் உயிர்வாழ் கின்றேன் ?'
- என்றொரு முடங்கல் தீட்டித்
தத்துவத் தார்க்குச் சேர்த்துத்
- தனியிடம் மறைந்து நின்றாள்;
பித்தனாய் மாறி னாற்போல்
- பெருங்குர லெழுப்பி அன்னார்,
"சித்தமே அறிந்தி டாது
- சென்றாயே, உயிரே உன்னை
நித்திய கன்னி யாய்என்
- நினைவிலே பதித்திருந்தேன்!
தனியனாய் வாழ மாட்டேன்
- தங்கமே உனப்பி ரிந்தே
இனியெனக் கென்ன வேலை ?
- என்கல்வி உன்னைக் கொன்ற
சனியனே?’ எனச்ச பித்துத்
- தற்கொலை செய முயன்றார்,
"இனிமையின் எல்லை கண்டேன்.
- எனையாள்வீர்!" எனத் தடுத்தாள்!