களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/இருக்குவேள் அரசர்

விக்கிமூலம் இலிருந்து

களப்பிரர் காலத்து இருக்குவேள் அரசர்

பாண்டி நாட்டின் வடக்கு எல்லைக்கும் சோழ நாட்டுத் தெற்கு எல்லைக்கும் இடைநடுவே கொடும்பாளூர் இருந்தது. கொடும்பாளூரைக் கொடும்பை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இப்போதைய புதுக்கோட்டை. மாவட்டத்தில் அடங்கியுள்ள கொடும்பாளூர் புதுக்கோட்டை நகரத்துக்கு இருபத்தைந்து கல் தொலைவில் இருக்கிறது. சங்க நூல்களில் கொடும்பாளூரைப் பற்றியும் அதனையரசாண்ட அரசர்களைப்பற்றியும் கூறப்படவில்லை. அக்காலத்தில் கொடும்பாளூர் வட்டாரம் மிழலைக் கூற்றம் என்று பெயர் பெற்றிருந்ததாகத் தோன்றுகிறது.

தமிழ் நாட்டைக் களப்பிரர் அரசாண்ட காலத்தில் கொடும்பாளூர் வட்டாரத்தை இருக்குவேள் அரசர் அரசாண்டனர். இருக்குவேளிர், களப்பிரருக்குக் கீழடங்கி அரசாண்டனர் என்று தெரிகின்றனர். கொடும்பாளூர் மூவர் கோவில் கல்வெட்டு இருக்குவேள் பரம்பரையில் வந்த அரசர்களின் பெயர்களைக் கூறுகிறது. மூவர் கோவில் கல்வெட்டுச் சாசனம் கி.பி. 1907-ம் ஆண்டில் பழம்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1907-08-ம் ஆண்டு அறிக்கையில் இந்தச் சாசனத்தைப் பற்றிய செய்தி வெளியிடப்பட்டது.[1]

இந்தச் சாசனத்தின் தொடக்கமும் இறுதியும் உடைந்து போனபடியால் இது எழுதப்பட்ட காலத்தை யறிய இயலவில்லை . இது சோழக் கிரந்த எழுத்தினால் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சாசனத்தை ஆராய்ந்து திரு. நீலகண்ட சாஸ்திரி 1933- ம் ஆண்டில் ஒரு கட்டுரை எழுதினார்.[2] பிறகு இதை இவர் தாம் எழுதிய சோழர் என்ற வரலாற்று நூலிலும் எழுதினார்.[3] மூவர் கோயில் சாசனத்தின் எழுத்து அமைப்பைக் கொண்டு, இது கி.பி. 10-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று சாஸ்திரி சுருதினார்.

மூவர் கோவில் கல்வெட்டுச் சாசனத்தை ஆராய்ந்த ஹீராஸ் அடிகள், இச்சாசனத்தில் காணப்படுகிற வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு இது கி.பி. 7-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று கூறி ஒரு கட்டுரை எழுதினார்.[4] ஹீராஸ் அடிகள் கூறியதே சரி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடிகளுடைய மாணவரான டாக்டர் எம். ஆரோக்கியசாமி அவர்கள் தாம் எழுதிய 'வெள்ளாறு வட்டாரத்தின் பழைய வரலாறு' என்னும் நூலில், மூவர் - கோயில் சாசனம் கி.பி. 7-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று கொண்டார். இந்தச் சாசனத்தில் கூறப்படுகிற இருக்குவேள் அரசர்களில் பரதுர்க்க மர்தனன் என்பவன் வாதாபிஜிக் (வாதாபி நகரத்தை வென்றவன்) என்று கூறப்படுகிறான். சாளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசியோடு போர் செய்து வென்று அவனுடைய வாதாபி நகரத்தைக் கைப்பற்றின முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் (மாமல்லன்காலத்தில்) இந்தப் பரதுர்க்கமர்தன்ன் இருந்தான் என்பதும், இவன் நரசிம்மவர்மன் சார்பாகப் புலிகேசியோடு போர் செய்து வாதாபியை வென்று 'வாதாபிஜித்' என்று பெயர் பெற்றான் என்பதும் தெரிகின்றன. வாதாபி நகரம் கி.பி.642 - ம் ஆண்டில் வெல்லப்பட்டது என்பதை வரலாற்றாசிரியர் யாவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆகவே இருக்குவேனாகிய பரதுர்க்க மர்த்தனன் கி.பி.642-ல் இருந்தவன் என்பதில் சற்றும் ஐயமில்லை . இவனுடைய காலத்தை அடிப்படையாகக் கொண்டு இவனுக்கு முன்னும் பின்னும் இருந்த இருக்குவேள் அரசர் காலங்களை ஒருவாறு அறியலாம். தலைமுறையொன்றுக்கு 30 ஆண்டு என்று கணக்கிட்டால் கீழ்வருமாறு இவர்களின் காலம் தெரிகிறது.

இருக்குவேள் அரசர் உத்தேசமான காலம்
கி.பி.
1. இருக்குவேள்[5] 435-465
2. பரவீரஜித்து 465-495
3. வீரதுங்கன் 495-525
4. அதிவீரன் 525-555
5. அநுபமன் (சங்ககிருத்து) 555-585
6. நிருப கேசரி 585-615
7. பரதுர்க்க மர்த்தனன் 615-645
8. சமராபிராமன் 645-675
9. பூதிவிக்கிரம கேசரி 675-705
10. பராந்தகன் 7O5-735
11. ஆதித்திய வர்மன்[6] 735-765

இதில் கூறப்படும் ஆட்சி ஆண்டுகளில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் கூடுதல் குறைதலாக இருக்கக் கூடும்.

இதில் கூறப்பட்ட இருக்குவேள்களில் முதல் ஐந்து பேர் களப்பிரர் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்குக் கீழடங்கியிருந்தவர் என்று தெரிகின்றனர். 6, 7, 8 எண்ணுள்ள அரசர் பல்லவ அரசர்களைச் சார்த்து அவர்களுக்கு அடங்கியிருந்தனர். 9, 10, 11 எண்ணுள்ள அரசர், அக்காலத்தில் சிற்றரசர் நிலையில் இருந்த சோழர் குலத்தோடு உறவு கொண்டு பல்லவ அரசருக்கு எதிரிகனாக இருந்தனர்.

இங்கு, நம்முடைய ஆராய்ச்சிக்கு உரிய களப்பிரர் காலத்தில் கொடும்பாளுரையாண்ட இருக்குவேள் அரசரைப் பற்றிக் கூறுவோம். முதலாமவனாகிய இருக்குவேளின் பெயர் சாசனக் கல்லில் மறைந்து போய் விட்டபடியால், அவனுடைய பெயர் தெரியவில்லை. இவன் களப்பிர அரசனுக்கு அடங்கிக் கொடும்பாளுரை அரசாண்டான். களப்பிரருக்கு அடங்கியிருந்த பாண்டியர் அடிக்கடி மேலெழுந்து களப்பிர அரசனுடன் போர் செய்து சுதந்திரம் பெற முயன்றனர் என்று தெரிகிறது. அவ்வாறு பாண்டியர் களப்பிரரோடு செய்த போர் ஒன்றில், களப்பிரர் சார்பாக இந்த இருக்குவேள் அரசன் பாண்டியனோடு போர் செய்து பாண்டியரின் யானைப்படையை வென்றான் என்று தெரிகிறது. இவனைப் பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை.

இவனுக்குப் பிறகு ஆண்ட பரவீர ஜித்து என்பவன் பகைவரான வீரர்களைப் போரில் வென்றவன் என்று அவனுடைய பெயரில் தெரிகிறது. அவனுக்குப் பிறகு ஆண்ட வீரதுங்கனும் அவனுக்குப் பிறகு ஆண்ட அதிவீரனும் போரில் வல்லவர்கள் என்பதை அவர்களுடைய பெயரிலிருந்து அறிகிறோம். இவர்களுக்குச் பிறகு அரசாண்டவன் இருக்குவேள் அநுபமன் என்பவன், இவனுக்குச் சங்ககிருத்து (சங்கத்தைச் செய்தவன்) என்று சிறப்புப் பெயர் இருந்தது. இதனால் இவன் சைன சங்கத்தை ஆதரித்தவன் என்று தோன்றுகிறான். மலையத் துவஜன் என்னும் ஜைன முனிவர் தேனிமலைக் குகையில் (தேனூர் மலைக்குகையில்) தவஞ் செய்து கொண்டிருந்தார். கொடும்பாளூர் இருக்குவேள் அரசன் இந்த முனிவரைக் கண்டு வணங்கி இவருக்கு நிலத்தைத் தானஞ்செய்தான் என்று இங்குள்ள சாசனம் கூறுகிறது.[7] இந்தக்கல் வெட்டெழுத்து இந்தக் குகைக்கு எதிரில் உள்ள பாறையில் எழுதப்பட்டுள்ளது. அதன் வாசகம் இது:

"ஸ்வஸ்தி ஸ்ரீ மலையத் துவஜன் தேனூர் மலையில் தவஞ்
செய்யக் கண்டு இருக்குவேள் வந்தித்து அவிப்புறஞ் செய்த
பள்ளிச் சந்தத் தாலே கால், இவ்வறக் காத்தான் அடி
நித்தஞ் சென்னி. அன."

இந்தக் கல்வெட்டில் தானஞ்செய்த அரசன் பெயர் இருக்கு வேள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அரசனின் சொந்தப் பெயர் எழுதப்படவில்லை. ஆனால் இந்த இருக்குவேள் அனுபமன் என்று கருதப்படுகிறான். இவனுடைய சங்ககிருத்து (ஜைன சங்கத்தைச் செய்தவன், ஆதரித்தவன்) என்ற சிறப்புப் பெயர் இதை உறுதி செய்கிறது. இவனுடைய ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில் (இறுதியில்) சிம்மவிஷ்ணு என்னும் பல்லவ அரசன் காஞ்சியிலிருந்து படையெடுத்து வந்து களப்பிர அரசனோடு போர் செய்து வென்று சோழ நாட்டைக் கைப்பற்றினான். அப்போது இந்த இருக்குவேள் (முன்பு களப்பிரரைச் சார்ந்திருந்தவன் பிறகு ) சிம்மவிஷ்ணுவுக்குக் கீழடங்கிப் பல்லவரைச் சார்ந்து இருந்தான் என்று தோன்றுகிறான். இவனுடைய பின் சந்ததியர் பல்லவ அரசர்களைச் சார்ந்து இருந்தனர்.

இருக்குவேள் அரசரும் இருங்கோவேள் அரசரும் ஒருவரே என்று ஆரோக்கியசாமி தம்முடைய நூலில் கூறுகிறார்.[8] சங்க காலத்தில் இருந்த இருங்கோவேள் அரசருக்கும் பிற்காலத்தில் இருத்த இருக்குவேள் அரசருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. அவர்கள் வேறு. இவர்கள் வேறு. பெயர்களில் காணப்படுகிற ஒற்றுமை பற்றி இருவரையும் ஒருவராக ஊகிப்பது கூடாது.

களப்பிரருக்குக் கீழடங்கியிருந்த வேறு சிற்றரசர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.

✽✽✽

  1. Annual Report on Epigraphy (Madras) 1907-80
  2. Journal of Onental Research, Madras 1933.pp.1-10
  3. KA Nilakanta Sasi, The Coaas, Vol I (1935)
  4. Rev. H.Herss, Journal of the Royal As iste Society Jariuary 1934.
  5. பாண்டியனுடைய யானைப்படையை முறியடித்தவன். இவனுடைய பெயர் கல்வெட்டில் மறைந்துவிட்டது.
  6. M.Arokiaswamy, The Eary Hstry dl the Vellar Basin, 1954 p 61,
  7. புதுக்கோட்டைச் சாசனங்கள் எண்.9
  8. M.Arokiaswamy, The early History of the Vellar Basin, 195