அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/348-383

விக்கிமூலம் இலிருந்து

19. நாளும் கிழமையும்

வினா : பூமலிந்தோங்கும் இப்படியின்கண் பல்வேறு சமயங்கள் ஏற்படுத்திக்கொண்டு பல தெய்வங்களைக் கொண்டாடி முறண்பட்டு ஒன்றை ஒப்பாது ஒழுகு மாந்தர்கள் கிழமை 7-என்றும், 7 கிழமைக்கொண்டது ஒரு வாரமென்றும், 4-வாரங்கொண்டது ஒரு மாதமென்றும், 12-மாதம் அல்லது 365-நாள் ஒரு வருஷமென்றும், 15 நாள் கொண்டதை ஒரு பட்சமென்று ஒப்புக்கொண்டு நடக்கிறார்கள். இவைகளை மட்டும் ஒப்புக்கொண்டதின் காரணம் என்ன? இவைகளை ஆதியில் எச்சமயத்தார் கணித்தார்கள்?

சமணகுலதிலகன், மாரிகுப்பம்

விடை : தாம் வினவிய கணிதத்தை சோதிடம் பார்த்து நிமித்தங் கூறுதலென்பர். அதாவது, சோதிகள் தங்கியிருக்கும் இடபேதங்களைக் கண்டு கூறுதலுக்கு சோதிடமென்றும், அதன் காலத்தை வகுத்தலை நிமித்தம் என்றும், அதன் கணிதத்தால் செல்காலம் நிகழ்காலங்களை விளக்குதலை சாக்கை என்றும், சகலர் சுகத்தையுங் கருதிய தன்மகன்மச் செயலை வள்ளுவமென்றும் வகுத்துள்ளார்கள்.

இவற்றை அநுசரித்தே “வருநிமித்தகன் பேர் சாக்கை வள்ளுவனென்று மாகு” மென்று பின்கலை நிகண்டிலும்,

“வள்ளுவர் சாக்கையரெனும் பெயர் மன்னர்க்குள்படு கருமத்தலைவர்க்கொக்கு” மென்று முன்கலை திவாகரத்திலுங் கூறியுள்ளார்கள்.

இவற்றுள் மத்திய ஆசியா கண்டத்து சக்கிரவர்த்தியாகும் கலியனெ ன்பவர் வாகுவல்லபத்தால் கலிவாகுவென்றும், கணிதவல்லபத்தால் சாக்கையரென்னும் பெயர்பெற்று சாக்கையகுல கலிவாகு சக்கிரவர்த்தியென்னும் பெயர் பெற்றிருந்தார்.

அவருடைய காலத்தில் பாலிபாஷையில் சகல வாக்கியங்களையும் வழங்கிவந்த போதிலும் வரிவடிவமின்றி ஒலிவடிவமாகவே வழங்கி வந்தார்கள்.

வரிவடிவமின்றி சோதிகளிருக்கும் இடங்களின் நிலைகளையும், அதன் குணாகுணங்களையும் ஆராய்ந்து உலகத்தின் சீவராசிகளுக்கு முதற்பலனளிப்பது சூரியனாக விளங்கியபடியால் அவற்றிற்கு ஆதிவாரமென்றும், இரண்டாவது பலனளிப்பது சந்திரனாதலின் சோமவாரமென்றும், செவ்வாயென மூன்றாம் பலனளிப்பது பூமியாதலின் அவற்றிற்கு மங்களவாரமென்றும், புதனென நான்காம் பலனளிப்பது நீர் ஆதலின் அவற்றிற்கு புதவாரமென்றும், வியாழமென ஐந்தாம் பலனளிப்பது காற்றாதலின் அவற்றிற்கு குருவாரமென்றும், வெள்ளியென ஆறாம்பலனளிப்பது ஆகாயமாதலின் சுக்கிரவாரமென்றும், சனியாகிய ஏழாம்பலனளிப்பது இருளாதலின் சனிவாரமென்றுங் கூறி இத்தகைய பதினான்கு வாரங்கொண்டதை பட்சமென்றும். அமரவாசி, பூர்வவாசியாம் அமரபட்சம் பூர்வபட்சம் இரண்டு கொண்டதை மாதமென்றும், இம்மாதம் ஒவ்வொன்றிலும் சூரியன் தங்கி நிற்கும் நிலையை மேஷராசி என்றும், இரிஷபராசி என்றும் பன்னிரண்டு ராசிகளை வகுத்து அதன் மொத்த பெயர் வருடமென்றும் இவ்வகை வருடம் அறுபதுவரையில் அரசாண்டு கலியுலகமென்னும் பெயரால் தான் இருபதாவது வயதிற்குமேல் இராட்சியபாரந்தாங்கி ஒவ்வோர் வருடமுங் கண்டறிந்த பலனை கணித்து தருதியாகவே விளக்கி, அட்சய-பிரபவ-விபவ என்னும் அறுபது நாமங்களளித்து அறுபதாவது வருட முடிவில் இறந்துவிட்டபடியால் கலிவாகுச் சக்கிரவர்த்தி அரசுக்கு வந்தவருடமுதல் மரணமடைந்த அறுபதுவருடத்தையே பீடமாகக் கொண்டு சாக்கை வம்மிஷவரிசையோரால் கலியுலக மென்னும் பெயரளித்து அதன் கணிதவட்டம் இந்த செளமிய வருடத்துடன் ஐயாயிரத்து பத்து வருடமாகின்றது. இதன் விவரங்களை பாலிபாஷையினின்று வரைந்து திரியாங்கமென்றும் பஞ்சாங்கமென்றும் வழங்கும்படியான கணித விவரங்களை தீபேத் தேசத்தோர் பஞ்சாங்கத்தாலும், சீனதேசத்தோர் பஞ்சாங்கத்தாலும், பிரம்ம தேசத்தோர் பஞ்சாங்கத்தாலும், தெரிந்துக்கொள்ளலாம்.

பௌத்தர்களாகிய சாக்கையர்களே இக்கணித நூற்களை வகுத்தும், விருத்திசெய்தும் வந்தவர்களாதலின் இக்கணித முதநூற்களாம் திரியாங்கம், பஞ்சாங்கம் முதலியவைகளைப் பெரும்பாலும் பௌத்ததேசத்தோர்களே வழங்கிவருவதைக் காணலாம்.

அவற்றை அநுசரித்தே மற்றதேசத்தோர்களும், பாஷைக்காரர்களும் காலங்களை வழங்கிவருகின்றார்கள்.

இதன் விவரங்களை சாக்கையர் கணிதகரண்டகம் வெளிவருங்கால் காலக்குறிப்புகளை எளிதில் அறிந்துக்கொள்ளலாம்.

- 3:33; சனவரி 26, 1910 -