அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/375-383

விக்கிமூலம் இலிருந்து

46. இந்தியதேசங்கெட்டு சீரழிவதற்குக் காரணமெவை சாதிகள் வேஷமும் சமயக்கூட்டங்களுமேயாம்

இவற்றுள் முதலாவது, உலகிலுள்ள பல தேசங்களின் சீரையும் சிறப்பையும் ஆராய்ச்சி செய்வோமாக. ஐரோப்பியர், அமெரிக்கர், சீனா, ஜப்பானியர் முதலியவர்களின் சீரையும் சிறப்பையும் நோக்குங்கால் குறைவற்ற செல்வமும் நோயற்ற வாழ்வுமுற்று ஒருவருக்கொருவர் ஆனந்த சுகவாழ்க்கை யுற்றிருப்பது உலகறிந்த விஷயமேயாம். அவற்றிற்குக் காரணமோவென்னில் அத்தேசங்களுக்கு நூதனமாக ஓர் மனிதன் சென்றவுடன் நீவிர் எத்தேசத்தோர் எப்பாஷைக்குரியவர் உமக்கு என்னவித்தை தெரியுமென விசாரிப்பார்களன்றி வேறில்லை. அதாவது “வித்தையை விரும்பு” எனும் பௌத்தர்கள் போதனையின் படி அவர்சாதனமும் நிறைவேறிவருகின்றது. அவர்களது விசாரிணையுஞ் செயலுங் கண்ணுங் கருத்தும் வித்தியாவிருத்தியையும் விவசாய விருத்தியையும் நாடியிருக்குமேயன்றி வேறொரு நாட்டமுமில்லையாகும்.

எத்தேசத்தோனைக் காணினும் எப்பாஷையோனைச் சேரினும் சகோதிர ஐக்யமுற்று ஒருவர் வட்டித்த பதார்த்தங்களை மற்றவர் புசிக்கவும் அருந்தவுமான அன்பின் பெருக்கத்திலிருப்பார்கள். ஒருவருக்கொருவர் சீறலும் பொறாமெயும் வஞ்சினமும் அமைந்திருக்கமாட்டார்கள்.

அத்தகைய சிறந்த குணமும் மேலாய செயலும் அமைந்துள்ளபடியால் ஒருவர்கற்றுள்ளவித்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும், ஒருவர் செய்யும் விவசாயவிருத்தியை மற்றவர்களுக்குச் செய்யவும், ஒவ்வொரு பத்திரிகைகளை நடத்துவோரும் இத்தேசத்தோர் இன்ன வித்தை இதன் வழியால் சித்திப்பெற்று இன்ன சுகமளிக்கின்றதென்றும், இன்ன விவசாயம் இவ்வகையால் சித்திப்பெற்று இன்ன பலனை அளிக்கின்றதென்றும், இன்ன வியாபாரம் இத்தகைய வழியால் விருத்தி பெற்று இன்னலாபத்தைத் தருகிறதென்றும், வரைந்து வெளியிடுவார்களன்றி அப்பிரயோசன வார்த்தைகளை வெளியிடமாட்டார்கள். அதனை உணர்ந்துவருங் குடிகளும் வீடொன்றுக்கு இரண்டு பத்திரிகை மூன்று பத்திரிகைத் தருவித்து வாசிக்கவும், அதிலடங்கியுள்ள வித்தையின் கருத்துகளையும், விவேகவிருத்திகளையும், ஈகையின் சுகங்களையும், சன்மார்க்க நடைகளையும் வாசித்து நாளுக்குநாள் அறிவின் விருத்தி உண்டாகி வித்தியாவிருத்தி, விவசாய விருத்தி, வியாபார விருத்தியில் ஊக்கமுற்று உழைத்து வருகின்றபடியால் அத்தேசமும் தேசமக்களும் நாளுக்குநாள் சீருஞ் சிறப்பும் பெற்று கூடகோபுரங்களும் மாட மாளிகைகளும் உயர்ந்து சகலமக்களும் சுகபுசிப்பு, சுகவாடை, சுக ஆபரணமுடைய சுகவாழ்க்கையிலிருக்கின்றார்கள்.

இந்திய தேசமோ பெளத்தர்கள் நிறைந்து வித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் நிறைந்திருந்த வரையில் வித்தியா விருத்தியும், விவசாய விருத்தியும், வியாபார விருத்தியும் பெருகிநிற்பதைக் கண்டவர்களும் கேட்டவர்களுமாகிய அன்னியதேசத்தோர் இந்தியதேசம் வந்து அரிய வித்தைகளையும் அனந்த ஞானங்களையுங் கற்றுச் சென்றார்கள் என்பதை பூர்வ சரித்திரங்களாலும் பூர்வ சித்திரங்களாலுமே கண்டறியலாம்.

அத்தகைய சிறப்புற்றிருந்த வித்தேசத்தில் கருணை என்பது கனவிலும் இல்லா சில வகுப்போர் குடியேறி தங்கள் தங்கள் சுயபிரயோசனங்களுக்காக ஒற்றுமெய்க்கேடாய சாதிப்பிரிவினைகளையும் விவேகவிருத்திக்குக் கேடாய அஞ்ஞான சமயங்களையும் உண்டு செய்து சாதிக்குத்தக்கப் பொய்சாஸ்திரங்களையும் சமயத்திற்குத் தக்கப் பொய் வேதங்களையும், பொய்ப் புராணங்களையும் வரைந்துவைத்துக்கொண்டு தங்கள் வஞ்சினத்தாலும், பொறாமேயாலும் குடிகெடுப்பாலும் மித்திரபேதத்தாலும் பேதைமக்களை வயப்படுத்திக் கொண்டதுடன் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் நிறைந்திருந்த குடிகள் இவர்களது பொய்சாதி வேஷங்களையும், பொய்வேதங்களையும், பொய்ப் புராணங்களையும் கண்டித்துத் துரத்திக்கொண்டே வந்தபடியால் தங்கள் பொய் வேஷங்களும் பொய்ப்புராணங்களும் நிலைபெற்று தங்கள் காரியங்கைகூடும் வரையிற் கார்த்து நடந்து தங்கள் வாக்கு செல்லுங்காலமாம் செல்வாக்கு உண்டாயவுடன் தங்கள் பொய் கோட்பாட்டிற்கு எதிரிகளாயிருந்த விவேகிகள் யாவரையும் அவர்களைச் சார்ந்திருந்தக் குடிகள் யாவரையுந் தாழ்ந்த சாதியோர்களென்றும், தீண்டப்படாதவர்கள் என்றுந் தாங்கள் புறக்கணித்து இழிவுகூறி அவர்களைத் தலையெடுக்கவிடாமல் பலவகையாலும் நசித்துவந்ததன்றி தங்கள் போதனைகளையே மெய்யென்று நம்பி மோசம் போயுள்ளக் குடிகளாலுந் தாழ்த்தும்படி செய்துவிட்டபடியால் வித்தையிலும் விவசாயத்திலும் விருத்திப்பெற்றிருந்த விவேகிகள் யாவரும் நசிந்து நிலைகுலைந்து விட்டபடியால் இந்திய தேசத்தின்வித்தையும் விவசாயமும் நசிந்தே போய்விட்டது.

அத்தகை நசிவை கண்ணுற்ற கருணை தங்கிய ராஜாங்கத்தோர் அவைகளை சீர்திருத்தி முன்னேறச்செய்யும் வழிவகைகளுக்கு வேண பொருள் உதவியும், வேண போதனா உதவியுஞ் செய்துவந்தபோதிலும் அவ்வித்தைகளுக்கும் விவசாயத்திற்கும் உரியவர்கள் அதனிற் பெரும்பாலும் இல்லாதால் அவர்களது நோக்கம் சரிவராமலே நிற்கின்றது. இத்தேசத்தில் நூதனமாகத் தோன்றியுள்ள சாதிவேஷ நாற்றங்களும் சமயபேத அஞ்ஞானங்களும் அகலுமாயின் அன்றே இந்தியதேசம் முன்போன்ற சீரையுஞ் சிறப்பையும் பெறும். அகலாவிடின் சீர்கேடு அடையும் என்பதே திண்ணம்.

- 6:50: மே 21, 1913 -