அம்பெலிபெரீ
100
அம்மானை
குடும்பத்துச் செடியை எளிதில் அறிந்து கொள்வதற்கு உதவும் அடையாளங்கள். இவை பெரும்பாலும் சிறு செடிகள்; சில குற்றுச் செடிகள். தண்டு உள்ளே குழாய் போன்றது. இலைகள் தனி யொழுங்குள்ளவை. அவற்றின் அடியானது கணுவில் தண்டைச் சுற்றித் தழுவியிருக்கும். இலையடிச் சிற்றிலை கிடையாது. இலைகள் மிகவும் மெல்லிய பாகங்களாகப் பிரிந்திருக்கும். பூங்கொத்துப் பெரும்பாலும் கூட்டுக் குடைமஞ்சரி ; சிலவற்றில் தனிக்குடை மஞ்சரி. பூ பெரும்பாலும் இருபால் உள்ளது; ஒழுங்கானஅமைப்பு உள்ளது. சில சமயம் ஒருபால் பூக்களும் உண்டு. அடிக்கடி ஒரு மஞ்சரியின் ஓரத்திலுள்ள பூக்கள் ஒழுங்கற்றவையாயும் ஒருதளச் சமமாயும் இருக்கும். புல்லி சிறியது. மிகச் சிறிய 5 இதழ்கள் உண்டு. சிலவற்றில் புல்லியே இராது. அல்லி 5 தனி; பெரும்பாலும் வெண்மை அல்லது மஞ்சள். நுனி மடிந்திருக்கலாம். கேசரம் 5. சூலகம் பூவின் கீழுள்ளது. 2 சூலிலைக் கூட்டுச் சூற்பையின்மேல் ஆதான மண்டலம் (Disc) உண்டு. அதில் பூந்தேன் சுரக்கும். சூல் தண்டு இரண்டு. சூற்பை இரண்டு அறையுள்ளது. அறைக்கு ஒரு சூல். கனி பிரிசுவர் வெடிகனி (Schizocarp). இரண்டு பிளவாகப் (Mericarp) பிரியும். ஒவ்வொரு பிளவின் மேலும் பழுக்களைப்போல உப்பிக்கொண்டு 5 வரம்புகள் உண்டு.
வரம்புகளுக்கு நடுவே தவாளிப்புப்போன்ற பள்ளங்கள் உண்டு. இந்தப் பள்ளங்களின் அடியில் எண்ணெய்க் குழாய்கள் இருக்கின்றன. இவற்றில் வாசனைத் திரவியம் இருக்கிறது. விதையில் முளைசூழ் தசையுண்டு. புரோட்டீனும், எண்ணெயும் இதிலிருக்கும் உணவுப் பொருள்கள். கரு மிகச் சிறியது.
மகரந்தச் சேர்க்கை : இந்தப் பூக்களில் முதலில் கேசரங்கள் முதிரும். பூந்தேன் மேலேயே இருப்பதால் பூச்சிகளுக்கு எளிதாக அகப்படும். குறுநாக்குடைய பூச்சிகளாகிய ஈயும் வண்டும் இந்தப் பூக்களுக்கு வருகின்றன. மொக்கில் கேசரங்கள் உள் மடிந்திருக்கின்றன. அவற்றை அல்லி யிதழ்கள் மூடிக் காக்கின்றன. இவை ஒவ்வொன்றாக நீண்டு, இவற்றின் பைகள் வெடிக்கின்றன. பிறகு ஒவ்வொன்றாக உதிர்ந்து விடுகின்றன. இதனால் ஒரு பூவிற்குப் பூச்சிகள் சில நாட்கள் வரையில் வந்து கொண்டிருக்கலாம். பார்க்க: ஓமம், கொத்து மல்லி, சதகுப்பை, சீரகம், பெருங்காயம், பெருஞ்சீரகம்.
அம்மள்ளனார் : சங்கம் மருவிய புலவர்; குறிஞ்சித்திணையைப் பாடியுள்ளார். (நற்.82).
அம்மான் பச்சரிசி: எங்கும் சாதாரணமாகக் காணும் சிறு செடி; களையாக வளர்வது. பால் உள்ள கள்ளிகளில் ஒன்று. பூக்கள் மிகச் சிறியவை. ஆண்
பெண் பூக்கள் சயாதியம் என்னும் மஞ்சரியாக இருக்கும். அம்மான் பச்சரிசியில் பல மிகச் சிறிய சயாதியங்கள் இலைக்கக்கங்களில் நெருங்கி இருக்கும். இவற்றைத்தான் குழந்தைகள் பச்சரிசி என்று வைத்துக்கொண்டு விளையாடுவார்கள். இதைப்போன்ற சிறு செடிகள் சில உண்டு. அவற்றைச் சின்ன அம்மான் பச்சரிசி என்பார்கள். குடும்பம் : யூபோர்பியேசீ (Euphorbiaceae). இனம் : யூபோர்பியா ஹர்ட்டா (Euphorbia hirta).
அம்மானை : விளையாட்டு: தமிழ் நாட்டில் பெண்கள் ஆடும் விளையாட்டுக்களுள் அம்மானை என்பதும் ஒன்று. பழங்கால முதற்கொண்டு இந்த விளையாட்டு இருந்து வருகிறது. அம்மானைக் காய்கள் மூன்றை வைத்துக்கொண்டு, இரண்டு கையாலும் பெண்கள் விளையாடுவார்கள். இரண்டு கைகளிலும் இரண்டு காய் இருக்க, மேலே ஒன்று இருக்கும். ஒரு பெண் ஒரு கையில் இருக்கும் அம்மானைக் காயை மேலே வீசி, அந்தக் கையால் மேலுள்ள அம்மானைக் காயைப் பிடித்தல் வேண்டும். இப்படிச் சாமர்த்தியமாக ஆடும்போது காய் தவறிக் கீழே விழுந்துவிட்டால், வேறு ஒரு பெண் ஆடுவாள். ஒருத்தி ஆடுவதும், பலர் சேர்ந்து பந்தயம் போட்டு ஆடுவதும் உண்டு. பெரும்பான்மையாக