பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

591

இந்தியா

சோமா) என்பவையுண்டு. இவற்றின் குட்டிகளுக்கு வால் சிவந்திருக்கும். தென்னிந்திய மலையில் காண்கின்ற இன்னொருவகை ரிஸ்ட்டெல்லா வேறெங்கும் அகப் படுவதில்லை. அரணைகளில் சில இனங்களுக்குக் கால்கள் இல்லை. அவை பாம்புபோல் காணும். பூமியின் பொந்துகளில் வாழும். பச்சோந்தி நிறம் மாறுவது யாவருக்கும் தெரியும். சாதாரணமாக விலங்குகளின் இரண்டு கண்களும் ஒரேவிதமாக இணைந்து அசையும். ஆனால் பச்சோந்தி தன் கண்களைத் தனித்தனியே சுழற்றக்கூடிய சக்தி பொருந்தியிருக்கிறது. கையும் அடியும் இரண்டாகப் பிரிந்து, கிளைகளைப் பிடித்துக் கொண்டு ஏற இறங்க உதவுகின்றன. வாலும் கிளைகளில் சுருட்டிக்கொள்ளும். அவ்வாறு கிளைகளினின்றும் சில சமயங்களில் தொங்கலாம். பிசுபிசுப்பான நீண்ட நாக்கைப் பூச்சிகளின்மேல் திடீரென நீட்டி, ஒட்டிக்கொண்ட பூச்சியைத் தின்றுவிடும்.

பாம்புகள்: பாம்புகளில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் நான்கு வகையே கொடிய நஞ்சுள்ளவை. அவைகளால் ஆயிரக்கணக்கில் உயிர்கள் மாள்கின்றன.

1. நாகங்கள் : நாகம் என்று சொல்லுகிற நல்லபாம்பு படம் எடுத்து ஆடும். மூக்குக்கண்ணாடி போன்ற குறி படத்தில் தோன்றும். கருநாகம் (King Cobra) மிகப் பெரியது; கொடூரமானது. இதன் நஞ்சு நல்லபாம்பின் நஞ்சைவிட மிகக் கொடியது.

2. கட்டுவிரியன்கள் (Kraits): இவற்றில் சில வகைகள் உண்டு, கட்டுவிரியனின் கருநிறமான உடலில் வெண்ணிறமான குறுக்கு வரிகள் கட்டுக் கட்டாக ஓடும். இதன் உடல் எண்ணெய் வடிந்ததுபோல் மினுமினுப்பாகக் காண்பதால் எண்ணெய் விரியன் என்றும் இதைச் சொல்வதுண்டு. வடநாட்டிலுள்ள விரியனில் மஞ்சள் நிறமான கட்டுக்கள் இருக்கின்றன. கட்டுவிரியன்களிலே முதுகின் நடுவரிசையிலுள்ள செதில்கள் பருத்தும், அறுகோண வடிவமுள்ளவையாகவும் இருக்கும். கட்டுவிரியன்களைத் தெரிந்து கொள்வதற்கு இது ஓர் அறிகுறியாகும்.

3. விரியன்கள் (Vipers) : விரியன்களின் தலை முக்கோணமாயும், தலை மேல் உள்ள செதில்கள் உடம்பின் மேல் உள்ள செதில்கள் போல் சிறியனவாயும் இருக்கும். மற்றப் பாம்பினங்களில் தலைச் செதில்கள் பருத்து, ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும். அவற்றைக் கேடகங்கள் (Shields) என்பர். விரியன்கள் குட்டி போடும். கண்ணாடி விரியன் (Russell's Viper) சாதாரணமாகக் காணப்படுவது. உடம்பில் மூக்குக்கண்ணாடி போன்ற நீள் வட்டப் புள்ளிகள் இருக்கும். சுருட்டை விரியன் (Saw-scaled Viper) என்று மற்றொரு விரியன் உண்டு. இது தன் செதில்களை உராய்வித்து ஒருவிதமான பலத்த பெருமூச்சு விடுவதுபோன்ற சலசலப்பை உண்டாக்கும். இதனால் இதற்குக் குறட்டைப்பாம்பு, ஊது சுருட்டை என்று பெயர். இது புல்தரையில் வாழ்வதால் புல்விரியன் எனவும்படும். இது வறண்ட மணற்பாங்கிலும் சாதாரணமாக அகப்படும். குழி விரியன்கள்: இவற்றின் தலையீன் பக்கத்தில் கண்ணுக்கும் மூக்குத் தொளைக்கும் இடையில் ஒரு குழியிருக்கும். இவை மலைப்பகுதிகளில் வாழும். இவைகள் மற்ற விரியன்கள் போல் அவ்வளவு நஞ்சுள்ளவையல்ல.

4. கடற் பாம்புகள்: இவற்றின் வால் துடுப்புப் போல் இருக்கும். தலையும் கண்களும் சிறுத்திருக்கும். மிகவும் நஞ்சுடையவை. ஆனால் சாதாரணமாகக் கடிப்பதில்லை.

நஞ்சில்லாத பாம்புகள் பல உள மண்ணுளிப் பாம்பு, குருடிப்பாம்பு, செவிப்பாம்புகளை (Typhlops) நம் வீடுகளில் சில சமயங்களில் காணலாம். செவிப்பாம்பு கம்பிபோன்று நீண்டு இருக்கும். பொந்துகளில் வசிக்கும். இதை வீடுகளில் கண்டால் நெருப்பைப்போட்டுக் கொளுத்துவார்கள். நசுக்கினால் இது எளிதில் நசுங்குவதில்லை.

கேடகவால் பாம்புகள் (Uropeltidae): இவைகள் காப்பி, தேயிலைத் தோட்டங்களில் மண்ணில் புதைந்து வாழும். மரங்கள், பாறைகளின் கீழும் வசிக்கும். இவை தென்னிந்தியாவிலேயே காணப்படுகின்றன. மிக அழகான நிறங்களுடையவை. சில வகைகளில் வாலின் நுனியில் சிறிய செதில்கள் கூடி யுண்டான தட்டையான கேடகம்போன்ற பாகம் இருக்கும். பெருமழையில் இவை வாழும் வளைகளை விட்டு வெளியே ஊர்ந்துபோகும்.

மலைப்பாம்புகள் மலைகளில் மரங்களின் கிளைகளில் வாழும். தாசரிப்பாம்பு (பைத்தான்) அதிகப் பருமனும் நீளமுமுள்ளது. இரைகளைத் தன் உடலால் சுற்றி நொறுக்கிப் பின்பு விழுங்கும். இதன் உடல் முழுதும் பொட்டுக்கள் காணப்படும். கட்டளைவிரியன் (டிரை யோகலாமஸ்), பவளப்பாம்பு (கல்லோபிஸ்) முதலிய பாம்புகளும் இருக்கின்றன.

மரங்களின் கிளைகளில் மூன்றுவகைப் பாம்புகளைக் காணலாம். 1. பச்சைப்பாம்பு அல்லது பச்சோலைப் பாம்பு அல்லது கண்குத்திப்பாம்பு இலையைப் போல் பச்சை நிறமுள்ளது. 2. கொம்பேறிமூக்கனை உலர்ந்த கிளைகளில் காணலாம்; மங்கிய பழுப்பு நிறம் பொருந்தியது. இது ஒருவனைக் கடித்தபின் மரத்தின் உச்சியில் ஏறி, இறந்தவன் பிணத்தைச் சுடும் புகை வருகிறதா எனப் பார்க்கும் என்பது பொதுமக்கள் கற்பனை. 3. பெருஞ் சுருட்டைப்பாம்பு பழுப்பு நிறமுடையது. முதுகிலே கறுப்புக் குறிகள் உண்டு.

மணல்நாடுகளில் கூழைப்பாம்பு, இருதலைப்பாம்பு, புடையன் என்னும் பெயர்களைப் பெற்ற எரிக்ஸ் என்னும் பாம்பைக் காணலாம். இதன் மேல்தோல் வெண் குட்டம் பிடித்த தோலின் நிறம் போல் இருக்கும். சாரைப்பாம்பு சாதாரணமாகப் பாம்பாட்டிகளிடம் காணப்படும். 5-6 அடி நீளம் இருக்கும்.

வழலை (லைக்கொடான்) பார்வைக்கு எண்ணெய் விரியனைப்போல் இருக்கும். ஆனால் சிறிது சிவந்து இருக்கும். இதைக் கட்டுவிரியன் என்று சிலர் தவறுதலாகக் கூறுவர். கட்டுவிரியனுக்கு முதுகின் நடுவிலுள்ள நீள் வரிசைச் செதில்கள் பருத்து, ஆறு கோண முடையவையாக இருப்பது போல, வழலைக்கு இருப்பதில்லை.

நீரில் நான்குவிதப் பாம்புகள் வாழ்கின்றன. (1) செர்பிரஸ்,(2) நீர்ச்சாரை (ஹெலிக்காப்ஸ்), (3) நீர்ச் சுருட்டை (டிராப்பிடொனோட்டஸ் பிஸ்கேட்டர்), (4) உப்பங்கழிகளில் உள்ள செர்ஸைட்ரஸ் என்பவை; டிராப்பிடோனோட்டஸ் ஸ்டோலேட்டஸ் என்ற வகை ஈரமுள்ள கழனிகளிலும் புல்தரைகளிலும் ஓடும். இதற்குக் கல்யாணிக்குட்டி அல்லது காளியன்குட்டி எனப் பெயர் உண்டு. வெள்ளங்களில் நீர்ப்பாம்புகளும் அடித்துக்கொண்டு போகப்பட்டுக் கழனிகளிலும் தோட்டங்களிலும் வருவதைக் காணலாம்.

முதலைகளில் மூன்று இனங்கள் உண்டு. இரண்டு இனங்கள் தென்னிந்தியாவில் ஆறுகளில் இருக்கின்றன. மூன்றாவது இனம் வங்காளத்தில் கங்கையாற்றில் மீன்களைப் பிடித்து வாழ்கின்றது. இதற்கு வாய் நுனி நீண்டு பக்கங்களில் பற்கள் பொருந்தியிருக்கும்.

ஆமைகளில் பலவிதங்கள் இருக்கின்றன. கடலில் சில வாழ்கின்றன. குளங்குட்டைகளிலும் ஆறுகளிலும்