பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

592

இந்தியா

சில வாழ்கின்றன. காடுகளிலும் நிலங்களிலும் சில வாழ்கின்றன. கடலில் பேராமை, அழுங்காமை, பெருந்தலை ஆமை, எழுவரி ஆமை என்னும் நான்கு விதம் உண்டு.

தவளை வகுப்பு : இந்தக் கூட்டத்தில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன. 1. வாலுள்ளவை - யூரோடீலா, 2. தவளைபோல் வாலில்லாதவை-அன்யூரா, 3. கால்கள் இல்லாதவை - அபோடா அல்லது ஜிம்னோபியோனா (Gymnophiona). இம்மூன்று பிரிவுகளுக்கும் உதாரணங்கள் இந்தியாவில் காணலாம். வாலுள்ள பிரிவுக்கு இமயமலை அடிவாரத்தில் டார்ஜிலிங் முதலிய இடங்களில் தலைப்பிரட்டை போன்ற டைலொட்டோ டிரைட்டான் என்னும் ஓரினம் இருக்கின்றது. இது ஒன்றுதான் இந்தியாவில் காணப்படுவது. வாலில்லாதனவான தவளைகளில் அநேக வகைகள் உண்டு. கால்களில்லா பிரிவைச் சேர்ந்தவை தென்னாட்டிலும் மலையாளப் பிரதேசத்திலும் மலையடிவாரங்களில் உள்ள வாழை, காப்பி முதலிய தோட்டங்களில் மண்ணில் புதைந்து வாழ்கின்றன. இவை தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், தென் ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் அகப்படுகின்றன. இவ்வாறு தூரத்திலுள்ள நாடுகளில் காண்பது ஓர் உண்மையைத் தெரிவிக்கின்றது. அதாவது இந்நாடுகள் ஒருகாலத்தில் ஒன்றுபட்டிருந்திருக்கவேண்டும்;பின்னால் இடையிலுள்ள நாடுகள் கடலில் மூழ்கிப்போனதால் இவை பிரிந்து போயின என்பதாம். இந்த உயிர்கள் சிறு பாம்பு அல்லது பெரிய மண்புழுப்போல் தோன்றினாலும், பாம்புகளைப்போல் இவற்றிற்கு உடம்பில் செதில்கள் இல்லை. வாலும் கிடையாது; குதம் உடம்பின் கடைசியில் உள்ளது; திறந்து மூடக்கூடிய தாடையுடன் கூடிய வாய் இருப்பதாலும், முதுகு எலும்பும் மண்டையும் இருப்பதனாலும் இவை மண்புழுக்களாகா. இவை ஈரமுள்ள பொந்தில் முட்டைகளைச் சுற்றிக்கொண்டு அவைகளைக் காப்பாற்றுகின்றன. முட்டையிலிருந்து பொரித்த குஞ்சுகள் மீன் தலையைப்போன்ற தலையையும், வாயைச் சுற்றி உதடுகளையும், நீந்துவதற்கு உபயோகப்படக்கூடிய தட்டையான வாலையும் உடையன.

தவளைகளில் நீரிலே வாழ்பவை, நிலத்தில் பொந்துகளில் வாழ்பவை, குளிர்ச்சியான மரங்களில் வாழ்பவை (தேரை) எனப் பலவகைகள் உண்டு. தேரை முட்டையிடுங் காலத்தில் நீரை அடைந்து, வெள்ளைப் பிசின் போன்ற நீரை வெளிப்படுத்தி, அதைக் காலால் அடித்து நுரையான பொருளாக்கி அதில் முட்டைகளையிடுகின்றது. இந்த நுரையை நீருக்குமேல் தொங்கிக்கொண்டிருக்கும் இலைகளில் காணலாம். முட்டைகள் பொரித்ததும் குஞ்சுகள் நீரில் விழுந்து வாழும். சொறித்தவளை (Toads) போன்றவை முட்டைகளைச் சரம் சரமாகப் பிசின் போன்ற பொருளில் வைத்திடும். சாதாரணத் தவளைகள் (Frogs) ஜவ்வரிசிப் பாயசம்போல் பரப்புள்ள பிசினில் முட்டைகளைப் பொதிந்து இடுகின்றன.

மீன்கள்: இந்தியாவில் மீன்களுக்குக் குறைவில்லை. மூன்று பக்கங்களில் கடல் சூழ்ந்திருக்கிறது. நாட்டில் ஆறுகளும் ஏரிகளும் குளங்களும் ஏராளமாய் இருக்கின்றன. ஆதலால் கடல் மீன்களும் ஆற்று மீன்களும் நிறையக் கிடைக்கின்றன. கடல் ஓரத்தில் வசிப்பவர்களுக்குத்தான் கடல்மீன் அதிகமாகக் கிடைக்கிறது. ஆனால் தற்காலத்தில் பனிக்கட்டியிலும், பனிக்கட்டிப் பெட்டிகளிலும் மீனை வைத்து உள்நாடுகளுக்கும் அனுப்புகிறார்கள்.

கடல் மீன்களில் சுவையில் மேலானவை வஞ்சிரம், மாலவாசி முதலிய மீன்கள். கடல் மீன்களுக்குள் சுவையில் இவற்றிற்கு மேலான மீன்கள் இல்லை என்று சொல்லுவார்கள். முதிர்ந்த மீன்கள் அவ்வளவு சுவையாக இரா. அடுத்தபடியாகச் சுவையில் வௌவால் மீனைக் கூறலாம். இதில் மூன்று விதங்கள் இருக்கின்றன. வெள்ளை, கறுப்பு, சாம்பல் நிறம் உள்ளவை. சில காலங்களில் வௌவால் மீன்கள் கூட்டங்கூட்டமாகக் கடலில் செல்லும். அப்போது 1,000-2,000 மீன்கள் ஒரே வலையில் மலையாள தேசத்தில் பிடிபடும். இம்மீன்களின் இறைச்சி எளிதில் செரிக்கக்கூடியதாகையால் நோயாளிகளும், சீரணசக்தி குறைந்தவர்களும் தின்னலாம். அடுத்தபடியாகக் காலாமீன், நாக்குமீன், கிழங்கான் முதலியவைகளைக் கூறலாம். சிலவகைக் காலாமீன்கள் 6 அடி நீட்டு வளரக்கூடுமானாலும், தென்னிந்தியாவில் அகப்படுகின்றவை 1-11 அடி நீளத்துக்கு மேல் போவதில்லை. இம்மீன் வங்காளத்தில் கடலிலிருந்து காசிவரையில் கங்கை நதியிலே போவதாகச் சொல்லப்படுகிறது. அதனால் இதற்குத் தபசி என்றும் பெயர். முன் ஜதைத் துடுப்பில் நீண்டிருக்கும் கதிர்கள் (Fin rays) தாடிபோலிருக்கும். நாக்குமீன்களில் பலவிதங்கள் இருக்கின்றன. இவை கடலில் தரையிலே மணலின் மேலும், புதைந்தும் கிடக்கும். இது உடல் அமைப்பில் மற்ற மீன்களை ஒத்திராது; நாக்குப் போன்று தட்டையாயிருக்கும். இதன் உடலில் வலம், இடம் என்று கூறாமல் மேற்புறம், கீழ்ப்புறம் எனக் கூறவேண்டும். மேற்புறத்தில் இரண்டு கண்களும் அமைந்துள்ளன. குட்டியாக இருக்கும்போது சாதாரண மீன்களைப்போலவே இடம் வலமாகக் கண்கள் இருக்கும். குட்டி நாளடைவில் நீருக்கு அடியிலுள்ள தரையில் வசிக்கத் தொடங்கும்போது இப்பக்கங்கள் மேல், கீழ்ப் பக்கங்களாக மாறி, இரண்டு கண்களும் ஒரே பக்கத்திற் சேர்கின்றன. சிலவகைகளில் இடப்பக்கமும், மற்றவற்றில் வலப்பக்கமும் கீழ்ப்பக்கமாகின்றன. கீழ்ப்பக்கத்துக்கண் மேற்புறத்துக்கு மாறுகிறது. இவைகள் சிற்சில சமயங்களில் நீந்தும். பாறை (காராங்க்ஸ்) மீன்களில் பலவகைகள் இருக்கின்றன. அவ்வளவு சுவையில்லாமற்போனாலும் ஏழை மக்களுக்கு இவை விருப்பமான மீன்கள். இம்மீன்களின் வால்புறம் இருபக்கத்திலும் நடுவில் உயர்ந்த செதில்கள் ஒரு கோடுபோல் ஓடுகின்றன. வாலும் மஞ்சள் நிறமா யிருக்கும், அதனால் இவற்றை மஞ்சள்வால் என்றும் கூறுவார்கள். ஆனி, ஆடி மாதங்களில் ஓலைவாளை கூட்டங்கூட்டமாக வலைகளில் கிழக்குக் கடலில் அகப்படுகின்றது. நெய்த்தோலி (எங்க்ராலிஸ்) என்னும் சிறிய மீனையும் அதிகமாக இம்மாதங்களிற் காணலாம். சென்னக்கூனி என்பது மீன்வகையல்ல ; இறால் இனத்தைச் சேர்ந்தது, மடவை, நகரை, மட்டவாயன், கொடுவாய், உல்லம், கெளிறு முதலிய மீன்கள் விலை மலிவாக இருப்பதால் ஏழை மக்களால் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவற்றில் மடவை. கெளிறு போன்ற மீன்களைக் கடலிலும் கடலை அடுத்த உப்பங்கழிகளிலும் பிடிக்கலாம். சிலவகைக் கெளிறுகள் நன்னீரில் வாழ்கின்றன. கெளிறு செரிப்பது கடினம்.

ஆற்று மீன்களில் வாளை, ஆரல், குறவை, அயிரை, கெளிறு வகைகள், கெண்டை மீன்கள் முதலியவற்றைக் கூறலாம். சேற்றுக்கெண்டை (எட்ட்ரோப்ளஸ்) என்ற மீன் மிகவும் அழகாக இருக்கும். பச்சைப் புள்ளிகள் இதன் உடம்பில் காணப்படுகின்றன. அதனால் இதைச் செல்லாக்காக என்றும் சொல்லுவார்கள். இம்மீன் தென்னிந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் மாத்திரம் அகப்படுவதாகச் சொல்லப்படுகிறது.