பக்கம்:கனிச்சாறு 1.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க௬

கனிச்சாறு முதல் தொகுதி

12.தமிழ்த்தாய்க்கு வந்த இடர்ப்பாடுகளைக் களையாமல் காதலும் கவர்ச்சி தராது என்னும் அழகிய நான்கு வெண்பாக்கள்.

13. தமிழ்த் தொடர்பற்ற எந்த வினையும் தமிழினத்திற்கும் நாட்டிற்கும் நன்மை செய்வதில்லை என்பதிது.

14. தமிழ்மொழிக்குக் கேடு செய்வோனை உயிர்வாங்கவும் தயங்கேன் என்பது.

15. ஆசிரியர் தம் பள்ளி, கல்லூரிக் காலங்களில் 'கவிதை' எனும் தலைப்பிட்டுத் தொகுத்து எழுதிய பாடல்களில் இஃதும் ஒன்று.

16. வடசொற்களைத் தமிழில் எவ்வாறு எழுதுவது எனப் பேராயக் கட்சியைச் சார்ந்த அன்றைய ஆட்சியாளர்கள் வினா எழுப்ப, அதற்கு விடையாக எழுதியது இப் பாடல்.

17. இப் பாடலில் பழந்தமிழ் இலக்கியத்தைப் பருகிய தும்பிபோல் முழங்கிப் பாடி மகிழ்வு கொள்கிறார் ஆசிரியர்.

18. செந்தமிழ்த் தாயிடம் ஒரு சூளுரைப்பு.

19. இளைஞர்கள் தமிழிலேயே கற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது இது.

20. “இளைஞரீர். உங்கள் இளமைதருங் கனவு ஒருபால் இருக்கட்டும், செழுமையுறும் தமிழ்க் குலத்தைச் செம்மை செய்து, செந்தமிழ்த்தாய் அரசிருக்க ஏற்ற வழிசெய்யுங்கள்" என்று ஏவுகிறது இப் பாடல்.

21. மொழிநலத்தையும் இன நலத்தையும் காவாதார் 'தமிழ் நலம் காப்போம்' என்பது நரிச் செயலன்றி வேறென்ன என்பது.

22. மொழிப்போர் புரிய அழைப்பு இது.

23. பாட்டியற்றுவோரும், மேடையில் பேசுவோரும் தமிழ்மொழியைப் பேணுதல் வேண்டும் என்பது.

24. வழக்கிழந்துபோன மொழிகளெல்லாம் புதுப்பிக்கப்பெறும்பொழுது, உயர்தனிச் செம்மொழியாகிய தமிழைச் சீரழிக்கின்றவரை மல்லறையால் திருத்த வேண்டும் என்பது.

25. 1965ஆம் ஆண்டு எழுந்த இந்தியெதிர்ப்புப் போராட்டத்தின் பொழுது ஆசிரியர் தென்மொழியில் வீறு சான்ற ஆசிரியவுரைகளையும் பாடல்களையும் எழுதிமாணவர்க்கும் பொதுமக்கட்கும் உணர்வும் ஊக்கமும் ஊட்டினார். அதன் பொருட்டு அவர்மேல் அரசு வழக்குப் போட்டுச் சிறைக்கு அனுப்பியது. வேலூர்ச் சிறையுள் இரண்டு மாதங்கள் சிறையிருந்தார். அக்கால் சிலை(மார்கழி) மாதமாகையால் சிறைக்கு வெளியே, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் ஒலிபெருக்கியில் கேட்கும். அந்த உணர்வு இவரையும் தமிழ்மொழிப் போராட்டத்திற்கென இளம்பெண்களை எழுப்புவது போலும் ஒரு பாவைப் பாடலை யெழுதத் தூண்டியது. அக்கால் எழுதிய பாடல் இது. இதுவன்றிச் சிறையிருந்த அப்பொழுது ஐயை (முதல் பகுதி) பாவியமும் 'சிறையகம் புக்க காதை' (பாடல் எண் : 74), பாடல் போலும் பிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/17&oldid=1419556" இலிருந்து மீள்விக்கப்பட்டது