பக்கம்:கனிச்சாறு 1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௧௭

பாடல்களையும் எழுதியது குறிப்பிடத்தக்கது. செந்தமிழின் பொருட்டு எழுந்த விழிப்புணர்வுப் பாடல்களாகையால், இவை செந்தமிழ்ப் பாவை எனப்பெற்றன. அழகிய, இனிய, உணர்வு மிக்க வளங்கெழுமிய சொற்களால் இப்பாடல்கள் இயங்குவதை இசைத்தும் ஆழ்ந்துணர்ந்தும் மகிழலாம். தமிழர் ஒவ்வொருவரும் தம்தம் பெண்டிர்க்கும் பிள்ளைகளுக்கும் இவற்றைப் பாடிக்காட்டிப் பயனுறுதல் வேண்டும்.

26. 1965இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முத்துச் சண்முகம் என்ற பேராசிரியர் மொழியியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் வண்ணனை மொழியியல் (Descriptive Linguistics) என்னும் மொழியியலை மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வந்தார். அவர் பேச்சுத்தமிழே (Spoken Tamil)உண்மைத் தமிழ்: பிற இலக்கியத் தமிழ் உண்மைத் தமிழன்று என்னும் கருத்துக்கொண்டு தாறுமாறாகத் தமிழைக் கெடுத்துவந்தார். தமிழ் கற்பதற்காகத் தமிழகம்வந்த ஏறத்தாழ இருபது வெளிநாட்டு அயல்மொழி மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பொறுப்பு அவரிடம் விடப்பெற்றிருந்தது. அவர்களுக்கு அவர் பேச்சுத் தமிழாகிய கொச்சைத் தமிழையே உண்மைத் தமிழ் என்று பயிற்றுவித்து மிகுதியும் தமிழ்க்கேடு புரிந்து வந்தார். அவர் ஒருகால் 'கலைக்கதிர்' என்னும் அறிவியல் திங்கள் வெளியீட்டில், 'தென்மொழி' எழுதும் தமிழ் செயற்கைத் தமிழ் என்றும், ஆனந்த விகடன், கல்கி, குமுதம் முதலிய இதழ்களில் எழுதப்பெறும் தமிழே உண்மைத் தமிழ்' என்றும் தம் கருத்தை ஒரு கட்டுரையில் வெளியிட்டிருந்தார். அவர் கொள்கையைத் தாக்கியும் அவரைக் கண்டித்தும் எழுதிய பாடல் இது.இப்பாடலை எழுதியதுடன் அமையாமல், ஆசிரியர் ஒருகால் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போந்து மாணவர்களுடன் அப் பேராசிரியர் இல்லத்திற்கும் சென்று, அவரை நேருக்கு நேராகக் கண்டு இது போலும் தவறான கருத்துரைகளை இனி உரைத்தல் கூடாது எனவும் எச்சரித்தார். அவர் 'இனி அவ்வாறு உரையேன்’ என்று உறுதி தந்த பின்னரே, மாணவர்கள் அவரை வாளாவிடுத்தனர் என்பதையும் குறிப்பிடுதல் வேண்டும்.

27. தமிழ்நாட்டின் முதலமைச்சரே தமிழ்க்குப் பகையாயிருப்பதைப் போலும் கீழ்மை வேறெங்கேனும் இருக்குமா? 1965ஆம் ஆண்டில் பத்தவத்சலம் ஆட்சியில் நிலைமை அப்படியிருந்தது.

28. தமிழ் கற்போரே பொருளுக்காகத் தமிழ்மொழியை இழித்தும் பழித்தும் பேசி வருகின்றனர். அந்நிலையை மற்போரால் தடுத்தல் வேண்டும் என்பது.

29. இக்கால் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் படிக்கின்ற இளைஞர்க்கும் மங்கையர்க்கும் செந்தமிழ்மேல் ஆவல் இருப்பதில்லை. அவர்கள் நெஞ்சில் தமிழ் இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது இந்தப் பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/18&oldid=1512914" இலிருந்து மீள்விக்கப்பட்டது