91
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
“குடி அரசு” என்னும் மிகச் சிறியதொரு வார இதழைக் கொண்டு தமிழகத்தில் ஈ.வெ.ரா. விளைத்த அறிவுப் புரட்சிக்கு ஒத்ததாக உலகில் வேரு யாரும் எங்கும் நிகழ்த்தியதாக வரலாறு கிடையாது. பிரான்ஸ் நாட்டில் ரூசோவும் வால்டேரும் எழுத்தின் மூலம் மாற்றத்தினை உருவாக்கினர் என்பது உண்மையே ஆயினும், சுயமரியாதை இயக்கத்தின் ஒரே அதிகார பூர்வமான ஏடாகிய இதில் வெளிவந்த கருத்துகள், அது வரையில் தமிழில் யாருமே சொல்லத் துணியாத, புதிய, முரண்பட்ட, முரட்டுத்தனமான கருத்துகளாகும். பெரியாருக்கு முன்பு மறைந்த இராமலிங்கர் வெள்ளாடைத் துறவியாயிருந்து, இந்து சமயத்தில் அறிவுக்குப் பொருத்தமான சில மாற்றங்களை, அறிவித்தார் எனினும், அவரது முடிவைப் பார்க்கும்போது, அவரும் பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியானதாகவே தோன்றுகிறது.
சுயமரியாதைக் கொள்கைகளின் ஒரே பிரச்சாரப் பத்திரிகையான “குடி அரசு”-புராணம், சாஸ்திரம், இதிகாசம், மனுதர்மம் ஆகியவற்றைக் கடுமையாகச் சாடியது. பார்ப்பன சூழ்ச்சியைப் படம் பிடித்துக் காட்டியது. மதம், சாதி, கல்வி, தொழில், அரசியல் ஆகிய துறைகளில் ஆதிக்கம் செலுத்துவோரின் ஆணவத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் கேடயமாய்ப் பாதுகாத்தது. கொடுமை களைந்திடும்போது கடுமையான, கூர்மையான வாளாய்ப் பாய்ந்தது.
ஈ.வெ.ரா. 1925-ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து வெளியேறினாலுங்கூட, காந்தியாரின் நிர்மாணத்திட்டங்களை அடுத்த இரண்டாண்டுகள் வரை ஆதரித்தே வந்தார். கதர் அணிதலையும், கதர்ப் பிரச்சாரத்தையும் கைவிடவில்லை. “குடி அரசு” இதழிலும்