பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 


குழலோசையைக் கேட்டுக் குதூகலம் கொண்டு, குதித்தோடி; வந்த கோமதியைத் தழுவிக்கொண்டு, அருகே வந்து நின்ற அழகு மீனாவின் முகத்தைத் துடைத்து முத்தமிட்டுக் கமலத்தின் கண்களின் அழகைப் புகழ்ந்துரைத்து, அம்புஜம் வரக் காணோமே என்று ஆயாசப்பட்டுக் கோமளத்துக்கு நேற்று இருந்த கோபம் இன்று இல்லை என்று கூறி மகிழ்ந்து, சுந்தரியின் முதுகைத் தடவிக் கொடுத்தான். கோகிலத்தின் கழுத்தை நெறித்துவிடுவது போல அணைத்துக்கொண்டான். அருகே வர அஞ்சி சற்றுத் தொலைவிலே நின்ற மரகதத்தைப் போய் இழுத்து வந்து முத்தமிட்டான். கிருஷ்ணனுடைய குழலுக்கு அவ்வளவு சக்தி இருந்தது! அந்த “நாதம்” அவ்வளவு ஆனந்தமூட்டிற்று. குழலை அழகாய்க் கையிலெடுத்து இதழினில் பொறுத்தி இசை தொடுத்து, செவியின் வழியாக இருதயத்தில் புகுத்தி இன்ப வெள்ளத்திலே சுந்தரியையும், சுகுணாவையும், கருணாவையும், கமலாவையும் நீந்தும்படி செய்த கிருஷ்ணன், அதற்காகப் பெருமைப்படவுமில்லை, இந்த வெற்றிக்காக மகிழவுமில்லை. அங்கும் இங்கும் பார்த்தான். எதையோ காணவேண்டுமென்ற ஆவவலுள்ளவன்போல, இடையிடையேதான் இந்தச் சல்லாபங்கள்!