109
‘நகையே அழுகை’ எனத் தொடங்கும் மெய்ப்பாட்டியல் நூற்பா விளக்கத்தில் மேல் வரும் எட்டு வகை மெய்ப்பாடுகளும் முறைமுறையே வைக்கப்படுதலின் அமைதியை விரித்துரைக்கிறார். ஒரு நூற்பாவொடு தொடரும் மற்றொரு நூற்பாவின் தொடர்பு காட்டுவதாக இவை அமைகின்றன.
“பாராட் டெடுத்தல்” என்னும் நூற்பாவில் (மெய்ப். 16), “புணர்ச்சிப் பின்னரல்லது பாராட்டுள்ளம் பிறவாமையானும், அதன் பின்னரல்லது பிறரோடு கூற்று நிகழாமையாலும், அக்கூற்றுக் கேட்டல்லது தமரான் ஈரமில் கூற்றம் கோடலின்மையாலும், அவையெல்லாம் முடிந்த வழித் தலைவன் மேற்சென்ற உள்ளத்தாற் கொடுப்பவை கோடற்குறிப்பினளாம் ஆகலானும் அம் முறையான் வைத்தான் என்பது” என்கிறார். இவ்வாறு முறைவைப்புக் கூறுதலால், நூற்சிறப்பை நன்கு வெளிப்படுத்துகிறார் பேராசிரியர்.
வரையறை
ஒன்றைப் பற்றிக் கூறுங்கால் வரையறைப்படுத்திக் கூறும் நெறியை மேற்கொள்கிறார் பேராசிரியர்.
அச்சச் சுவையைக் கூறும் பேராசிரியர், “தன்கட் டோன்றலும் பிறன்கட்டோன் றலும் என்னும் தடுமாற்ற மின்றிப் பிறிது பொருள் பற்றியே வரும்” என்பதும் (மெய்ப். 7), சமனிலை என்பது, “உலகியல் நீங்கினார் பெற்றியாகலின் ஈண்டு உலகியல் வழக்கினுட் சொல்லிய திலன்” என்பதும் போல்வன வரையறைச் சான்றுகள்.
வகைப் படுத்துதல்:
வகைப்படுத்திக் கூறுதலும் பேராசிரியர் மேற்கொண்ட நெறிகளுள் ஒன்று. “நகையென்பது சிரிப்பு; அது