இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21. நவநீதப்பாட்டியல்
காலம்
நவநீத நடனார் என்பவரால் இயற்றப்பட்ட பாட்டியல் இலக்கணம் நவநீதப்பாட்டியல் என வழங்கப் படுகின்றது. இது கட்டளைக் கலித்துறை யாப்பால் இயற்றப்பட்டுள்ளமையால் கலித்துறைப் பாட்டியல் எனவும் வழங்கும். இந் நூலாசிரியர் காலம் 14ஆம் நூற்றாண்டு என்பர்.
பெயர் - சமயம்
நவநீதன் என்பது கண்ணன் பெயர்களுள் ஒன்று. நவநீதம் வெண்ணெய்; ‘நவநீத கிருட்டிணன்’ எனப்படுவார் வெண்ணெய்க் கண்ணனார் எனத் தமிழில் பெயராக்கம் செய்து கொண்டமை கருதத்தக்கது. “பாவையர் மனைதொறும் வெண்ணெய்க் காடினான்” என்னும் வில்லிபாரதம் (இராச. 119) இப்பொருளை விளக்கும். இவர் பெயரால் திருமாலியர் என அறியப்படுவதையன்றித் தற்சிறப்புப் பாயிரத்தாலும் விளங்கும்.
“கார்கொண்ட மேனிக் கறைகொண்ட நேமிக் கமலக்கண்ணன்
பார்கொண்ட பாதத்தை ஏந்திப் பகருவன் பாட்டியலை”
என்கிறது அது.