116
என்ற பெயருடன் வழங்கப்பட்டது. அந்தப்பகுதி இன்றும் பண்டகசாலைத்தெரு என குறிப்பிடப்படுகிறது. அப்பொழுது, இராமநாதபுரம் சீமையில் வடக்கே கலிய நகரியில் இருந்து தெற்கே வேம்பாறு வரை பல உப்பளங்கள் இருந்த பொழுதும், கீழக்கரைக்கு அருகே உள்ள வாளைத் தீவு, ஆனைப் பார் தீவுகளில் இயற்கையாக விளைந்த உப்பினை அவர்கள் எடுத்து வந்து விற்ற செய்தியை கும்பெனியாரது ஆவணமொன்று தெரிவிக்கிறது.[1] இவர்கள் பலமுறை "பாக் நீர் வழியில்" முத்துக்குளித்தல் மேற்கொண்டதை இன்னொரு ஆவணம் தெரிவிக்கிறது.[2]இன்னும் இந்த நூற்றாண்டில், கடலூர், சிதம்பரம், பகுதியில் செல்வாக்குடன் இருந்த மக்தும் நெயினா, அப்துல் லெப்பை, அலி என்ற இஸ்லாமியப் பெரு மக்கள் ஆங்கில கிழக்கிந்தியா கும்பெனியாரது வணிகத்தில் அவர்களுக்கு உதவிகரமாக இருந்தனர் எனத் தெரிகிறது. அப்பொழுது ஆற்காட்டு நவாப் தாவுதுகானிடம், மக்தும் நெய்னா பலமுறை பேட்டி கண்டு, ஆங்கிலேயருக்கு பல சலுகைகளைப் பெற்றுத்தந்தாராம். பொதுவாக இந்தக் காலக்கட்டத்தில் தமிழக இசுலாமியர் வாணிப உலகில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்திய வரலாற்றுச் சான்றுகள் இல்லை.