சங்க இலக்கியத் தாவரங்கள்/055-150

விக்கிமூலம் இலிருந்து
 

கடு
டெர்மினாலியா சிபுலா (Terminalia chebula , Retz.)

கடு இலக்கியம்

“கடுகலித்து எழுந்த கண் அகழ் சிலம்பில்-மலைபடு : 14

என்ற இந்த மலைபடுகடாத்தின் அடிக்கு, “கடுமரம் மிக்குவளர்ந்த இடமகன்ற பக்க மலையில்” என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகின்றார். இது கடுக்காய் விளையும் மரமாக இருக்கலாம் என்று கருத இடமுண்டு.

சங்க இலக்கியப் பெயர் : கடு
உலக வழக்குப் பெயர் : கடுக்காய் மரம்

கடு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே (Calyciflorae)
மிர்ட்டேலீஸ் (Myrtales)
தாவரக் குடும்பம் : மிர்ட்டேசி (Myrtaceae)
தாவரப் பேரினப் பெயர் : டெர்மினாலியா (Terminalia)
தாவரச்சிற்றினப்பெயர் : சிபுலா (chebula)
சங்க இலக்கியப் பெயர் : கடு
உலக வழக்குப் பெயர் : கடுக்காய் மரம்
தாவர இயல்பு : 3000 அடி உயரம் வரையில் உள்ள மலையிலும் காடுகளிலும் வறண்ட நிலத்திலும் வளரும் மரம்.
 

கடுக்காய்
(Terminalia chebula)

இலை : இலைக் காம்பு 0.5 அங்குல நீளமானது. நீள் முட்டை வடிவானது. அடியும், நுனியும் குறுகி இருக்கும். 7 அங்குல நீளமும், 3-3.5 அங்குல அகலமும் உள்ளது. இலைக் காம்பில், இலையின் அடியில் இரு சுரப்பிகள் உள்ளன. இலை முழுதும் அடியில் மங்கலான வெள்ளிய நுண்மயிர்களால் மூடப்பட்டிருக்கும். :
மஞ்சரி : “ஸ்பைக்ஸ்” என்ற பூந்துணர் கிளை நுனியில் உண்டாகும். மலரடிச் செதில் உண்டு. கலப்பு மஞ்சரியாகவும் இருக்கும்.
மலர் : இருபாலானது.
புல்லி வட்டம் : 4-5 புறவிதழ்கள் இணைந்து, குழல் வடிவாக இருக்கும். மேலே 4-5 பிளவுகள் காணப்படும்.
அல்லி வட்டம் : 4-5 அகவிதழ்கள்.
மகரந்த வட்டம் : 8-10 தாதிழைகள்.
சூலக வட்டம் : ஒரு செல் உள்ளது. சூலகம் மேற்புறத்தில் பிளவுடன் இருக்கும். 2-3 சூல்கள் உண்டாகும்.
கனி : பளபளப்பானது. முட்டை வடிவானது புறத்தில் 5 விளிம்புகளை உடையது. 1.5 X 1 அங். உயர, அகலமானது.


இதில் மிக உயர்வான ‘டானின்’ உண்டாகிறது. ஒரு வகை மஞ்சள் நிறப் பொருள் இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மரம் கரிய பழுப்பு நிறமானது. மிக வலியுடையது. கட்டிடங்களுக்குப் பயன்படும். கடுக்காய் மிகச் சிறந்த சித்த மருத்துவப் பொருள். பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகின்றது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 14 என நந்தா (1962)வும், 2n = 24,48 என சானகி அம்மாளும் (1962), சோப்தி (1962 ஏ) 2n = 26 என சென். எஸ் (1955 பி) என்பாரும் கணித்துள்ளனர்.