சங்க இலக்கியத் தாவரங்கள்/086-150

விக்கிமூலம் இலிருந்து
 

அரளி
அல்லமாண்டா நெர்ரிபோலியா
(Allamanda nerrifolia,Hook.)

‘கணவிரம்’ எனப்படும் ‘அலரிச்செடி’யைப் போன்று ‘அரளி’ என்னும் புதர்ச் செடி, தமிழ் நாட்டில் வளர்க்கப்படுகிறது. ஒரு சிலர் இவை இரண்டையும் ஒன்றெனக் கொள்வர். இது பொருந்தாது. அலரி வேறு: அரளி வேறு. அரளி என்பது சங்க இலக்கியத்தில் தனித்துப் பேசப்படவில்லை. எனினும் இது மஞ்சள் அலரி என்று உலகியலில் வழங்கப்படுகிறது.

உலகியற் பெயர் : அரளி, மஞ்சள் அலரி
தாவரப் பெயர் : அல்லமாண்டா நெர்ரிபோலியா
(Allamanda nerrifolia,Hook.)

அரளி இலக்கியம்

அரளி’ என்பது அலரியைப் போன்றதொரு புதர்ச் செடி. அரளி சிறு மரமாகக் கூட வளரும் இயல்பிற்று. அலரியைக் காட்டிலும் இதில் பால் அதிகம் சுரக்கும். அலரியின் கனி, நீண்ட தட்டையான ஒரு புற வெடிகனியாகும். அரளியின் காய் பசுமையானது. ஏறத்தாழ அமுக்கிய உருண்டை போன்றது. அலரியின் தண்டுப் பகுதியை நிலத்தில் ஊன்றி, வளர்க்கலாம். அரளியை விதை போட்டு முளைக்க வைக்கலாம். அரளி பெரிதும் மஞ்சள் நிற மலர்களை உடையது. இதுவும், வெள்ளை அரளியும், சிவப்பு அரளியும் தோட்ட வேலிகளில் வளர்க்கப்படுகின்றன. இவையனைத்தும் தாவரவியலில், அல்லமாண்டா நெர்ரிபோலியா (Allamanda nerrifolia) எனப்படும். இதனைஆங்கிலத்தில் மஞ்சள் ஒலியாண்டர் (Yellow oleander) என்பர். இதனைத் தேவேஷியா நெர்ரிபோலியா (Thevetia nerrifolia) என்றும் அழைப்பர். இம்மரம் கிராமங்களில் காளி கோயிலுக்கு அருகில் வளர்க்கப்படுகின்றது.
 

அரளி
(Allamanda nerrifolia)

இதன் மலர்களை மாலையாக்கிக் காளியம்மனுக்குச் குட்டுவர். இதன் மலர் புனல் வடிவானது. பசிய புல்லியிதழ்கள் 5 உண்டு. அல்லியிதழ்கள் ஐந்தும் மஞ்சள் நிறமானவை. அடியில் இணைந்து, குழல் வடிவாக இருக்கும். மடல் மேலே விரிந்து, இணைந்து புனல் வடிவாயிருக்கும். அதற்கும் மேலே 5 இதழ்களும் பிரிந்து விரிந்திருக்கும்.

இதனுடைய அல்லியிதழ்களின் நிறத்திற்கேற்ப வெள்ளை, சிவப்பு நிற அரளியும் உண்டு. இதன் காய் பழுப்பதில்லை. பசுமையாகவும், அமுங்கிய உருண்டை வடிவாகவும், ஐந்து சிறகு போன்ற அமைப்புடனும் காணப்படும். ஒரு காயில் ஒரு விதையே பெரும்பாலும் உண்டாகும். இவ்விதையில் கொடிய நச்சுப் பொருள் இருக்கிறது. இதன் விதைகளையும், வேரையும் அரைத்துக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டவர் பலர்.

அரளியில் அல்லமாண்டா கத்தார்டிகா (Allamanda cathertica) என்ற புதர்க் கொடி ஒன்றுண்டு. இது தென் அமெரிக்காவைச் சேர்ந்தது. இதிலும் மஞ்சள் மலர்கள் உண்டாகின்றன. இலைகள் மூன்றடுக்காக இருக்கும். இது திருவாங்கூரில் உப்பங்கழிப்புறத்தில் காணப்படுகிறதென்பர்.

அரளி தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : அப்போசைனேசி
தாவரப் பேரினப் பெயர் : அல்லமாண்டா (Allemanda)
தாவரச் சிற்றினப் பெயர் : நெர்ரிபோலியா (nerifolia)
உலக வழக்குப் பெயர் : அரளி
தாவர இயல்பு : சிறு மரம்: 3-4 மீட்டர் உயரமாகவும் கிளைத்து வளரும். பசிய நீண்ட தனியிலை. மாற்று அடுக்கில் இலைக் காம்பு மிகச் சிறியது. கணுவில் மூவிலைகள் சுற்றடுக்காக இருப்பதுண்டு
மலர் : மஞ்சள் நிறமானது. ஐந்தடுக்கானது. ஒழுங்கானது. இரு பாலானது.
புல்லி வட்டம் : 5 பசிய பற்கள் போன்ற புறவிதழ்கள்.
அல்லி வட்டம் : 5 இதழ்கள் இணைந்து, அடியில் குழல் வடிவாகவும், சற்று மேலே புனல் வடிவாகவும் இருக்கும். மடல் மேலே 5 இதழ்களாக விரியும். பொதுவாக மஞ்சள் நிறமானது. வெள்ளை, சிவப்பு நிற அரளியும் உண்டு.
மகரந்த வட்டம் : 5 மகரந்தத் தாள்கள் அல்லி ஒட்டியவை.
சூலக வட்டம் : இரு சூலக அறை. பெரிதும் ஒரு விதையே வளர்கிறது.
கனி : சதைக் கனி, அமுங்கிய உருண்டை வடிவானது. 5 சிறகுள்ளது. பசிய அல்லது மஞ்சள் நிறமானது.

இப்பேரினத்தில் 2 சிற்றினத்திற்குக் குரோமோசோம் எண்ணிக்கை கண்டு சொல்லப்பட்டுள்ளது. அல்லமாண்டா நெர்ரிபோலியாவில் 2n = 18 எனத் தபாடர் (1980) என்போர் கூறுவர். தேவேஷியா நெர்ரிபோலியா என்பதற்கு 2n = 20 எனத் தபாடர், சென் (1980) தபாடார் (1964), நந்தா (1982) என்போர் கண்டனர்.