உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
180 ||

அப்பாத்துரையம் - 6



சாதனங்கள், படைத்திறம், வீரம் ஆகிய யாவும் இருந்தன. தவிர, டியூப்ளே தென்னக மக்கள் வீரத்தை அடிப்படையாகக் கொண்டே பிரஞ்சுப் புகழ்ப் பேரரசு எழுப்ப முனைந்தான். தென்னக மக்கள் மன்னர் மரபுகள் ஆகியவற்றில் அவனுக்குச் செல்வாக்கும் நேசபாசமும் மிகுதியாகவே இருந்தது. ஆனால், இத்தனை வாய்ப்புக்களையும் விழலுக்கிரைத்த நீராக்கின, பிரஞ்சு தாயத்தில் இருந்த வாணிக ஆட்சியாளர்களின் தொலைநோக்கின்மை, நாட்டுப் பற்றற்ற குறுகிய பொறாமைப் போக்கு, ஆகியவை. இவையே, பிரஞ்சு மக்கள் கைப்பட இருந்த பேரரசை.அதனைக் குறிக்கொள்ளாத, அதில் நேரிடையான அக்கறையற்ற ஆங்கிலேயர் வசமாக்கிற்று.

ஆங்கிலேயரிடம் அரசியல் நோக்கம் தொடக்கத்தில் இல்லை. வாணிக நோக்கமே இருந்தது. பிரஞ்சு ஆதிக்கம் தம் வாணிகத்துக்குக் கேடு செய்யும் என்பதனாலேயே அவர்கள் பிரஞ்சு ஆட்சியை எதிர்த்தனர். அத்துடன் அக்காரணத்தால் அரசியல் நோக்கத்தை அவர்கள் ஏற்க வேண்டியதாயிற்று. ஆனால், அதை ஏற்ற பின்பும் அவர்கள் முதல் நோக்கம் அதுவல்ல. ஆட்சி அவர்களுக்கு வாணிக ஆதிக்கத்து ஒரு கருவி மட்டுமே. அது கைக்கு வந்தபின், அவர்கள் பிரஞ்சுக்காரரைப்போல, வாணிகத்தைக் கைக்கொள்வதுடனும் புகழ் ஆட்சி செய்வதுடனும் நின்றுவிடவில்லை.

அவர்கள் ஆட்சியைப் பயன்படுத்தி, தென்னகத்தில் அன்று குவிந்து கிடந்த உலகின் பெருஞ் செல்வத்தைக் கைக்கொண்டு, அதன் மூலம் உலக ஆதிக்கமே நாடினர். அது மட்டுமோ? கைத்தொழில் துறையிலும் தொழில் நுட்பத் துறையிலும் அன்று தென்னகம் உலகத்தில் தலைமை பூண்டு, உலகத்தையே ஆட்டிப் படைத்து வந்தது. அத்தொழில் வளத்தை அழிக்கவும், அதைத் தன் கைவசமாக்கித் தொழில் நாடாக வளரவும் ஆங்கில ஆட்சி இங்கிலாந்துக்கு உதவிற்று.

பிரஞ்சு ஆட்சி ஏற்பட்டிருந்தால், தென்னாடு விடுதலை இழந்து தளைப்பட்டிருக்கும். ஆனால், அது தங்கத் தளையாகவே இருந்திருக்கும். விடுதலை இழப்பு நீங்கலாக வேறு எந்தப் பொல்லாப்புக்கும் அது ஆளாகியிருக்காது. நேர் மாறாக, ஆங்கில ஆட்சியின் முழுத்தீங்கு, அது அயல் ஆட்சி என்பது