உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
252 ||

அப்பாத்துரையம் - 6



அனுப்பி, அவர்கள் நலம் உசாவி வந்தான். இறந்தவர் குடும்பங்களை அவன் தன் குடும்பமாகப் பேணினான். காயமுற்றவர்களை அரசாங்கச் செலவில் குணப்படுத்தி, ஓய்வுடனே சம்பளமும் குடும்ப மானியமும் அளித்தான்.படைத் துறைகளிலும் பணித்துறைகளிலும் அனுபவமிக்கவர்களுக்கும் உண்மையானவர் களுக்கும் அடிக்கடி பரிசும் பாராட்டும் வழங்கி ஊக்கினான்.

சோம்பேறிகள், கடமை தவறியவர்கள், பொது மக்களைச் சுரண்டியவர்கள் ஆகியோருக்கு ஹைதர் பொல்லாத கூற்றுவனாயிருந்தான் இத்தகைய குற்றஞ் செய்தவர்களை அவன் கடுமையாகத் தண்டிக்கவோ, பதவியிலிருந்து நீக்கவோ தயங்கவில்லை. நீக்கியபின் இரக்கம் காட்டுவதுமில்லை. ஆனால், இவ்வகையில் அவன் பொது மக்களையோ, பிறர் மக்களையோ நடத்தியதுபோலவே தன் புதல்வர்களையும், உறவினர்களையும் நடத்தினான். நேர்மையில் அவன் என்றும் வழுவியது கிடையாது.

வீரருக்கும் வீரப் படைத்தலைவர்களுக்கும் ஹைதர் காட்டிய மதிப்பை உலகில் வேறு எந்த அரசனும் அரசியல் தலைவனும் காட்டியிருக்க முடியாதென்னலாம். திறமை, தகுதி, அனுபவம், உண்மைப் பற்று ஆகியவை காரணமாகவே அவன் ஆட்களத் தேர்ந்தெடுத்தான். ஆதரித்து உயர்த்தினான். ஆனால், உயர்த்தியபின் அவர்கள் பெற்ற உரிமையும் சலுகையும், நண்பர், குடும்ப உறுப்பினர் கூடப் பெற்றிருக்க முடியாது. இதற்கு இரு நிகழ்ச்சிகள் ஒப்பற்ற சான்றுகளாகின்றன.

சர்க்கூலிப் போரைப் பற்றிய பேச்சு ஒருநாள் எழுந்தது. ஹைதர் உட்படப் படைத்தலைவர்களும் படை வீரர்களும் விழுந்தடித்துக் களம் விட்டு ஓடிய நிகழ்ச்சி அது. அதன் நினைவு ஹைதரைச் சோகத்தில் ஆழ்த்திற்று. ஆனால், அவன் தன் வெப்பத்தை உடனிருந்த தலைவர் மீதே கொட்டினான். “ஆம்! அன்று நம் படைத்தலைவர்கள் அத்தனைபேரும் கோழைகளாக ஆட்டுக் கூட்டங்களிலும் கேவலமாக நடந்துகொண்டார்கள். அதுமட்டுமன்று: தங்கள் உயிரை வெல்லமாகக் கருதி, அதைக் காப்பதற்காக, ஆயிரக்கணக்கான வீரரை வீரரை வீணே பலி கொடுத்தனர். அதை நினைக்கும்போது இத்தகைய நன்றிகெட்ட துகளை வைத்துக் காப்பாற்றுவதற்காக நான் வெட்கப்