20
எஸ். எம். கமால்
நவாப் முகமது அலி பிறப்பதற்கு முன்னரே கி.பி. 1638, 1659, 1698 ஆகிய வருடங்களில் கிழவன் சேதுபதியுடன் உடன்படிக் கைகளைச் செய்து கொண்டிருந்தனர். மன்னார் வளைகுடாவின், எதிர்க்கரையான (இலங்கை) கொண்டச்சியில் முத்துக் குளித்தும் வந்தனர். கி. பி. 1758-ல் கீழக்கரையில் தொழில் மையம் ஒன்றினை ஏற்படுத்தி கைத்தறித் துணிகளை தயாரித்து வந்ததுடன், அங்கிருந்து அவைகளை தங்களது நாட்டிற்கும் ஏற்றுமதி செய்து வந்தனர்.
மேலும், மறவர் சீமையின் கிழக்கே கடலும், வடக்கும் மேற்கும் சிவகங்கைச் சீமையும், தெற்கே நெல்லைச் சீமை பாளையக்காரர் பகுதிகளும் இருக்கின்றனவே தவிர நவாப்பின் ஊர் எதுவும் அங்கு இல்லை. கப்பத் தொகையைப் பொறுத்த வரையில் சேது மன்னர்கள் எந்த அரசிற்கும் கைகட்டி திறை செலுத்தியது கிடையாது என்பது வரலாறு. இராமநாதபுரம் மறவர்கள் மதுரை நாயக்கர்களது ஆதிக்கத்திற்குட்பட்ட குறுநில மன்னராக இருந்தாலும் கி. பி. 1638, 1659-ல் டச்சுக்காரர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை காரணமாக அவர்களுக்கு எதிரானவர்களாகவே செயல்பட்டு வந்தனர்.[1] அவர்களை மதித்து நடப்பவர்களாக இல்லை.[2] பெயரளவில் தான் மறவர்கள் மதுரை மன்னர்களுக்குக் கட்டுப்பட்டிருந்ததை 8-11-1709 தேசிய மார்ட்டின் பாதிரியாரின் கடிதம் ஊர்ஜிதம் செய்கின்றது. திருமலை நாயக்கர் கூட சேதுபதிகளிடம் கப்பம் கேட்க தயங்கிவந்தார் என கும்பெனியாரது ஆய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தொண்டமானைத் தோற்கடித்து மணிப்பள்ளம் காட்டிற்குள் துரத்திய சந்தாசாயபு கூட, மறவர் நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.[3] இதனைப் போன்றே மதுரையை ஆக்கிரமித்த மராட்டிய தளபதியான அப்பாஜிராவும், பின்னர் அவர்களைத் துரத்திவிட்டு கி.பி. 1743-ல் மதுரையை கைப்பற்றிய நிஜாம் ஆஸம்ஜாவும் மறவர்களை அடக்குவதற்கு எத்தனிக்கவில்லை.[4] ஆதலால் கும்