உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


என்று வருந்திக் கூறலும், பெருங்கருணைத்தடங்கடலாகிய இறைவனதருளால் அம்மூன்றும் அவ்வாலயத்து வடகீழ்த் திசையில் வந்து தோன்ற, அவற்றை இளையாள் தன்மாற்றாட்குக் காட்டி, அவளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தனளென்பதேயாம்.

திருத்தொண்டர்புராணத்தில் கூறப்படும் சரித்திரம் உண்மையில் நடைபெற்றதே யென்று நல்லறிஞர்பலரும் அங்கீகரித்துள்ளாராதலின், யான், ஈண்டு ஆராய்ச்சிக் கெடுத்துக் கொண்டது திருவிளையாடற் புராணத்துச் சொல்லப்படும் சரித்திரமே. ஐம்பெருங்காப்பியங்களி லொன்றாயதும், களவியற்பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரனார் முதலிய தொல்லுரையாசிரியர்களால் எடுத்துக் காட்டப்படும் பிரமாண நூல்களிலொன்றாயதும், சேரமுனியாகிய இளங்கோவடிகளாலியற்றப் பெற்றதுமாகிய சிலப்பதிகாரத்தில் அவ்வணிக மாது வன்னி முதலியவற்றைத் தன்மன்றற்குச் சான்றுகளாக நிருபித்திக்காட்டிய விஷயம் மிகச்சுருக்கமாய்க் கூறப்படுகின்றது.

[1] இனி, திருப்புறம்பய புராணத்தை நோக்குங்கால், இச்சரித்திரம் தெளிவாகவும் விரிவாகவும் ஆறாவது சருக்கத்திற் சொல்லப்படுகின்றது.[2] அன்றியும், சைவசமயாசாரியராகிய திருஞானசம்பந்தசுவாமிகள், தாம், திருப்புறம்பயத்தில் திருவாய் மலர்ந்தருளிய தேவாரப் பதிகத்தில் இச்சரித்திரத்தைச் (ஒரு பாகத்தை மாத்திரம்) சுருக்கமாய்க் குறித்திருக்கின்றனர்.[3] இதுகாறுங் கூறியவாற்றால் இஃதுண்மையாக நடந்துள்ளதொரு தனிச் சரித்திர மென்பது நன்குபுலப்படும். இதனால், திருத்தொண்டர் புராணத்திலும், திருவிளையாடற் புராணத்திலும் சொல்லப்படும் சரித்திரங்கள் இரண்டும் வெவ்வேறென்பது தெற்றென விளங்கும். இவ்வுண்மை யுணர்ந்தன்றோ 800 வருடங்கட்கு முன்னிருந்தவராகிய பெரும்பற்றப் புலியூர் நம்பியார் தமது பழைய திருவிளையாடற் புராணத்தில்


  1. ” வன்னிமரமுமடைப்பளியுங் சான்றாக
    முன்னிறுத்திக்காட்டிய மொய்குழலாள்” சிலப்பதிகாரம் 21-வது
    வஞ்சினமாலை 5,6.

  2. இப்புராணம் இன்னும் அச்சிட்டு வெளிவரவில்லை.
  3. விரிந்தனைகுவிந்தனை விழுங்குயிருமிழ்ந்தனை” திருஞான சம்பந்த சுவாமிகள் திருப்புறம்பயப்பதிகம் 3-வது பாசுரம்.