உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8


சைவசமயாசாரியருள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவொற்றியூரில் பாடியருளிய"

“அழுக்குமெய்கொடுன் திருவடியடைந்தேன்
        அதுவும் நான்படப் பாலதொன் றானால் பிழுக்கைவாரியும் பால்கொள்வர் அடிகேள்
        பிழைப்பனாகிலுந் திருவடிப்பிழை யேன்
வழுக்கி வீழினுந் திருப்பெயரல்லால்
        மற்று நான் அறியேன் மறுமாற்றம்
ஒழுக்க என்கணுக்கொரு மருந்துரையாய்
       ஒற்றியூரெனும் ஊருறைவானே”

என்னும் திருப்பாடலை நீங்கள் அறிவீர்கள், இதில் “வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்றுநான் அறியேன் மறுமாற்றம்“ என்னும் மூன்றாம் அடியின் பொருள் இப்போது சிந்தித்தற்கு உரியது. இறைவன் திருவடியில் பதிந்து நிற்கும் உள்ளமுடைய சுந்தரமூர்த்திகள் தாம் வழுக்கி வீழினும் அப்பெருமான் திருப்பெயரையே தம் நா உரைக்கும் என்றும் மறுமாற்றம் ஒன்றும் அஃது அறியாதென்றும் தெளிவாகக் கூறியிருப்பது அறியத்தக்கது. இறைவன் திருவடியில் பதிந்து நிற்கும் உள்ள முடைய வர்கள் அத்தகைய நிகழ்ச்சிகள் நேருமானால் ‘அப்பா‘ ‘அம்மா‘ என்று கூறமாட்டார்கள் என்பது இதனால் நன்கு பெறப்படுகின்றதல்லவா? எனவே நம் பட்டினத்தாசிரியரின் கூற்று, அவர் உள்ளக் கிடக்கைக்கு முற்றும் மாறுபட்டிருந்தமையால் அதனை வெளிப்படுத்தவே இறைவன் அவ்வாறு செய்தருளினார் என்று தோன்றுகிறது; ஆயினும் பெருந்துன்பத்திற்கு உள்ளாக்காமல் எளிதாக அதனை வெளிப்படுத்தி யமைக்குக் காரணம் இறைவனது எல்லையற்ற கருணையே எனலாம். தம்மிடம் அன்புடையவர்கள் தவறுமிடத்து, இறைவன் அவர்களைத் திருத்தி ஆட்கொள்ளும் பேரருளாள ரன்றோ? அதுவும் பெறுதற் கரிய பெரும்பேறேயாகும் என்று ஒரு சிறு சொற்பொழிவு செய்து அரியதோர் உண்மையை விளக்கினார்கள். பிறகு மூவரும் தம் தம் இருப்பிடஞ் சென்றனர்.[1]


  1. குறிப்பு : கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் தலைமைத் தமிழாசிரியராயிருந்தவர்களும் என்னுடைய ஆசிரியருமாகிய காலஞ்சென்ற திரு. அ. பாலசுப்பிரமணிய பிள்ளை அவர்கள் கூறியதே இவ்வரலாறாகும்.