1.வசியத்தின் உண்மை நிலை
‘மனித வசியம்' என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வதாகிய ஓர் ஆற்றலை உணர்த்தும். இந்த ஆற்றலானது இயற்கையாக எல்லாரிடத்துங் காணப்படவில்லை. சிலரிடத்து மட்டுமே காணப்படுகின்றது. நல்லது. சிலரிடத்தும் மட்டும் உள்ள இந்த ஆற்றல் எதனால் உண்டாகின்றதென்றால், அவரிடத் தமைந்த அழகினால் என்று பெரும்பாலும் எல்லாரும் நினைக் கின்றார்கள். ஆனாலும், இஃது உண்மையாகத் தோன்றவில்லை. அழகுடைய சிலர் பிறரைத் தம் வழிப்படுத்த மாட்டாமல், தம்மைக் கண்டு அவர்கள் வெறுப்படைந்து போகும்படி செய்தலையும், அழகில்லாத சிலர் பிறர் தம்மை விரும்பும்படி செய்து அவரைத் தம்மாட்டு ஈர்த்தலையும் நாம் வழக்கத்திற் காண்கின்றோ மாகையால், அழகுதான் மனித வசியத்திற்கு காரணமென்று சொல்வது பொருத்தமாகக் காணப்படவில்லை. அப்படியானால், உலகத்தாருங் கற்றறிவுடையாரும் அழகைப் பற்றிச் சிறப்பித்துப் பேசுவது ஏன் என்றால் இங்கே அழகு என்றது உள்ளத்தின் அழகே யல்லாமல், உடம்பின் அழகு மட்டும் அன்று. ஒருவருடைய உள்ளத்தின் அழகைத்தான் கற்றாரும் மற்றாரும் பாராட்டிப் பேசுவர். உடம்பின் அழகைக் கண்டும் எல்லாரும் வியந்து பேசுவதை நாம் பழக்கத்திற் பார்த்திருக்கின்றோமே எனின், உடம்பின் அழகானது பார்வைக்கு மட்டும் முதலிற் சிறிது நேரங் கவர்ச்சியை உண்டு பண்ணுமேயல்லாமல், உள்ளத்தின் அழகைப்போல் எப்போதும் அஃது இன்பத்தைத் தராது. ஒருவன் உடம்பின் அழகால் மிகச் சிறந்தவனாயிருந்தாலும், அவன் நல்ல குணமில்லாதவனாய் எந்நேரமும் பொய்யே பேசிக்கொண்டும், பிறரை ஏமாற்றிக் கொண்டுங் கள் அருந்துதல் கொலை செய்தல் திருடுதல் முதலான தீய ஒழுக்கங்களிற் பழகிக்கொண்டும் வருவனாயின்