மறைபொருளியல் -3
xxxi
தனிப்பெருந் தமிழ் மீட்பர் மறைமலையடிகள்
கல்விக் கடல்; தமிழ் ஆங்கிலம் சமற்கிருதம் ஆகிய மும்மொழி வல்லுநர்; மருத்துவம், கருநூல் (Embryology), தொலைவுணர்வு (Telepathy), மனவசியம் (Mesmerism), அறிதுயில் (Hypnotism) முதலிய பல்கலையறிஞர்; நூலாசிரியர், நுவலாசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர், பதிப்பாசிரியர், ஆய்வாசிரியர் ஆகிய பல்வகை யாசிரியர்; அடக்கமும் அஞ்சாமையும் உண்மை யொப்புக்கொள்வும் குலமத வேற்றுமையின்மையும் கொள்கைக் கடைப்பிடிப்பும் கொண்ட பண்பாட் டாளர்; நாட்டிற்கும் மொழிக்குமன்றித் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்; மாபெருந் தமிழ்ப் புலவரும் தமிழ்ப் பேராசிரியரும் தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு தெரியாது, நூற்றிற் கெண்பது விழுக்காடு வடசொற் கலந்து தமிழைப் பேசியும் எழுதியும் பாடியும் வந்த காலத்தில், தமிழ்ப்பயிர் அயற்சொற்களால் நெருக்குண்டு அடியோடழிந்து போகவிருந்த நிலையில்,1916ஆம் ஆண்டிலிருந்து வடசொற்களை அறவே களைந்து, தூய தீந்தமிழில்,உரைநடையும் செய்யுளுமாகிய இருவகைவடிவிலும், அறிவியல், சமயம், வரலாறு, ஆராய்ச்சி, திருமுகம், உரை, மொழிபெயர்ப்பு முதலிய பல துறையிலும், ஐம்பான் அருநூல்களை வெளியிட்டு, தமிழில் எந்நூலையும் இயற்றவும் மொழிபெயர்க்கவும் இயலும் என்பதைக் காட்டி, தமிழ் வரலாற்றின் மூன்றாங் காலமாகிய மறுமலர்ச்சித் தனித்தமிழ் ஊழியைத் தொடங்கி வைத்தவர்; முதன் முதல் தனித்தமிழ்த் திருமணஞ் செய்து வைத்தவர்; Can Hindi be the Lingua Franca of India? (இந்தி இந்தியப் பொதுமொழியாயிருக்க இயலுமா?) என்னும் ஆங்கிலச் சிறுநூலில், அறிவியன் முறையிலும் ஏரண முறையிலும் கட்டாய இந்திக் கல்வியை வன்மையாகக்